இலக்கியம் எழுதாத நட்பு .. (ஐந்தாம் பகுதி )
க. பாலசுப்பிரமணியன்
நண்பனே…
கொஞ்சம் நில்…
என் இன்பக்கோட்டையின்
வாயிலின் கதவுகளை
யாரோ தட்டுகிறார்கள் !
ஏன் நண்பா சிரிக்கின்றாய்?
உனக்கு அவர்களை அடையாளம்
தெரியுமா?
உருக்குலைந்த உடல்கள்
ஒன்றாய் .சேர்ந்ததுபோல்..
உருத்தெரியாத உருவங்கள்
நடுக்காட்டில் ஓலமிட்டது போல்……
அந்த ஒலி
ஏன் புரியாத பயத்திற்கு
முன்னுரை எழுதுகிறது?
பனிக்குள் புதைந்த நெருப்பைப்போல் ..
இளமைக்குள் மறைந்த முதுமை போல்
இருளுக்குள் ஒளிந்த பயத்தைப் போல் ..
நம்பிக்கையின் வேர்களில்..
நச்சை உமிழ்ந்துகொண்டு…
காலங்கள் காத்து நின்ற..
நமது நட்பின் ..
ஆணிவேர்களை அசைத்துக்கொண்டு..
பயத்துக்குப் பாதுகாவலனாய்
சந்தேகத்தின் சகோதரனாய் ..
ஓ!
இவைகளுக்குப் பெயர்தான்
துன்பங்களா?
துன்பங்கள்..
அதிர்ஷ்டத்தேரின் ஓட்டத்திற்கு
முட்டுக்கட்டையாய் ..
ஆரம்பத்திலேயே….
முடிவைத்தேடும்..
முதுகலையாய் ..
என்னையே நான்
வீழ்த்திக்கொள்ள
ஏதுவாய்…
நண்பனே !
துன்பத்திற்கு ..
வாழ்வில்…
ஏன் தோரணம் காட்டுகிறோம் ?
வலிகள் ..
சங்கடங்கள்…
பிரிவுகள்..
துன்பத்திற்குத் தோள்கொடுப்பதேன்?
யாருடைய கருவில்
துன்பம்..
உயிர்த்து எழுந்தது ?
அமைதியான வாழ்வில் ..
அழிவின் தூதுவனாய் ..
அலைகள் ஆர்ப்பரிக்கும்
சுனாமியாய் ………
தனக்குத் தானே தவிலடித்துக்கொண்டு..
கோஷங்கள் போட்டுக்கொண்டு..
விழா எடுத்துக்கொண்டு…
என்னோடு போரிட ..
இவைகளுக்கு …
ஏன் இத்தனை ஆசை ?
கார்மேகத்தில்..
கண்சிமிட்டும் மின்னலைப் போல்..
கலங்கவைக்கும் இடியினைப்போல்….
கண நேரத்தில்..
வரும் போகும்…!
பாவம் !
யாருக்குத் தெரியும் ..
இவைகளுக்கு
வாழ்வு குறைவென்று ?
காற்றடித்தால் ஓடிவிடும் !
கனவுலகில் மறைந்துவிடும்.!
கண்ணீரில் கரைந்துவிடும் !
அறிவுக்கண்களுக்கு ..
இவை தெரிவதில்லை…
அசையாத உள்ளங்களுக்கு
இவை அடையாளம் காட்டுவதில்லை !
துன்பம் எது?
இருப்பதில் அடங்குவதா?
இயலாமையில் வாடுவதா?
இசைவின்றி வாழுவதா?
தோல்வியில் துவளுவதா?
துணிந்து எழுந்திட மறுப்பதா?
தன்னலம் போற்றுவதா ?
பிறர்நலம் பேணுவதா?
துன்பத்தைக் கண்டு
துன்பமுறும் நெஞ்சங்களில்
எஞ்சி நிற்பது என்ன?
வந்ததும் ஒன்றுமில்லை..
போவதும் ஒன்றுமில்லை..
அறிந்தவர் மாய்ந்ததில்லை..
அறியாதார் வாழ்ந்ததில்லை..
துன்பம்…
என் நிழலுக்கு ..
நான் எழுதிக்கொடுக்கும்
அடிமை சாசனம்!
கன்றாகப் பின் நின்று…
களிப்புடன் உன் நிழலில்..
காலங்கள் கழித்திட்டால்
துன்பங்கள் வந்திடுமோ?
துயரங்கள் நின்றிடுமோ?
நண்பனே…
நான் அறிவேன்…
உன் உள்ளம்..
யாரறிவார் உன் வலிகள் ?
உன் துயர்கள்..?”
உன் பாதச்சுவடுகளில் …
என் பாதங்களை அமர்த்தும் பொழுது..
உன் வலிகள் …
உன் துயரங்கள் ….
என் உள்ளுணர்வுகளில்…
பிண்டங்களின்..
அண்டங்களின் ..
கோள்களின் ..
துயரங்கள்…
அனைத்தையும் சுமந்தும் நீ..
முகத்தில் என்றும்..
அமைதியுடன்..
புன்னகையுடன்..
அனைத்தையும் கடந்ததாலோ?
நீ.. ?
ஆள்பவனா?
ஆண்டவனா?
நண்பா..
நீ யாராயிருந்தாலும் ..
கைப்பிடித்து வருவேன் !
“யாமிருக்க பயமேன்?”
என்று…
நீ எனக்கும்..
நான் உனக்கும்..
காலங்கள் சென்றாலும்
கறைபடியா நட்பன்றோ?