கண்ணா! மணிவண்ணா!
பவள சங்கரி
கண்ணா! மணிவண்ணா! தத்துவஞான ஒளியே!
மாயமாய் மனதினூடே ஒளிருமணியே!
சேயே யானுனை நெஞ்சாரத் தழுவிடவே
சேவடியைத் தொழுதிடவே வாடாயென் மன்னா!
கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும் பரம்பொருளோனே!
ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தரணிகாப்போன் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதவனே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமய்யா!