க. பாலசுப்பிரமணியன்

 

இமைகளுக்கிடையே

கசியும்  நீர்த்துளி

ஒரு ஏக்கத்தின் ..

உயிர்த்துளி !

 

கனவுக்கும் நனவுக்கும்

இடையே நடந்த

காதல் சண்டையில்

கண்களுக்கு கிடைத்த

ஒரு பரிசுத்துளி !

 

யாருக்குத்தான் ஏக்கமில்லை ?

ஐம்புலன்களுக்கும்

அடிபணியாத உடலுக்கும்

அறிவுக்கும்

அமைதியில்லா உயிருக்கும்

பிறப்பிற்கும்

இறப்பிற்கும் ..

என்றென்றும் ஏக்கம்தான் !

 

எரிகின்ற உடலுக்கும்

இனியொரு பிறப்பிற்கு

ஏக்கம்தான் !

 

ஏக்கம்..

அது ..

உணர்வுகளின் மோகத்தின்

மரண தாகம் !

 

ஏக்கம்..

ஒரு மூச்சுக்கும்

அடுத்த மூச்சுக்கும் ..

இடையில் ..

இதயம் இசைக்கும்

முகாரி ராகம் !

நாளைய கருவை

இன்றே பிரசவிக்க

எண்ணங்கள் நடத்தும்

ஒரு சாகசம் !

 

ஏக்கத்தின் வாயிலில்

ஒரு துறவிக்கும்

ஒரு வேசிக்கும்

ஒரே தாகம்தான்  !

 

ஏங்காத மிருகங்கள் ..

ஏங்காத மனிதர்கள்…

ஏங்காத தெய்வங்கள்…

எங்கே?

கண்டீரோ நண்பர்களே ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *