எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

 

உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று

உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும்

உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல்

பித்தேறி பலசெய்து  பேதலித்துநிற்கின்றார் !

 

மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெரும்பயனே

ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க்கு அமைந்ததுவே

தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்

நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !

 

அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது

ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை

பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்

பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !

 

வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி

வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்

வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார்

வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !

 

பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்

பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும்

யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின்

அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !

 

யேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி

பூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார்

பாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்

ஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் !

 

வேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்

பாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார்

பூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்

பாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி !

 

பிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்

இருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்

பிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்

பிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே !

 

பார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்

உண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்

ஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்

உண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *