இசைக்கவி ரமணன்

 

amman1
ஆயிரம் பேர்களால் என்ன? அவை
யாவுமுன் கால்மூடும் மலரே!
வாயி லிருப்பதா வாக்கு? அது
வயிரவீ உன்மனப் போக்கு!
பாயில் கிடக்கவா வாழ்வு? உன்
பாலிப்புக் கதுதானே தாழ்வு?
தேயா இருளெலாம் போக்கு! என்
சித்தத்தில் முத்தத்தைத் தேக்கு!

நின்னையே கதியெனக் கொள்வார், அவர்
நிம்மதி இலாமலே திரிவார்
நின்னையே பொய்யெனச் சொல்வார், அவர்
நிலமெலாம் செல்வத்தி லாள்வார்
நின்மனம் ஏதடி பிச்சி? இன்னும்
நிற்கி றோமேயுனை மெச்சி!
நின்னிலே ஏதோ இருக்கும்! அது
நில்லாது நெஞ்சை இழுக்கும்!

வக்கணை மிக்கதோர் ராணி! துளி
வற்றாத பேரின்பக் கேணி!
துக்கம் பிடிக்காத ராணி! நித்தம்
தூக்கம் கலைக்கின்ற தேனி!
பக்கத் திலேதேரியும் ராணி! முகம்
பாராத என்மஹா ராணி!
வெக்கத்தை விட்டவன் கவிஞன்! என்ன
வேதனை தந்தாலும் பாதமே கதியே!

அவளுக்கு மென்னைப் பிடிக்கும்! என்னை
அல்லாட வைப்பதோ அதைவிடப் பிடிக்கும்!
சுவர்முழுதும் எழுதினாள் சிறுமி, ஒரு
சொல்மட்டும் இன்னும் பலிக்காமல் சொக்கும்!
சுவடிலாச் சித்தத்தின் வெளியில், சற்றும்
சுட்டமுடி யாதவொரு துகளின் துக ளொளியில்
இவளைநான் சத்தியம் காண்பேன்! அந்த
இன்பத்திற் காகவே இவையாவும் ஏற்பேன்!

மலையிரண் டின்நடுவிலே, நின்று
மறைகின்ற கதிரோனின் தங்கநிழ லொளியில்
அலையிறைஞ் சிக்கேட்கவே, நெஞ்சின்
அப்போதைக் கவிதைபோல் அரும்புநில வமிழ்தில்
தலைகிறங் கிச்சுழலுமே! அந்தத்
தள்ளாட்டத் தில்தேவி வெள்ளோட்டம் வருமே!
விலையற்ற சக்திபித்தம்! மிக
விரும்பியதை உயிர்தந்து பெற்றதென் சித்தம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என்மஹா ராணி!

  1. Ivenjoyed immensely ” Ennis allada vaippatho athaivudap pidikkum”. 100% anubava mozhigal  !.. Please send me your phone number to congratulate u in Person
    Pala Palaniappan,
    Secretary Karaikudi. Kamban Kazhagam 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *