நவராத்திரி நாயகியர் (2)
மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன்
மங்காத ஒளிப்பிழம்பே ! மாதவனின் உடன்பிறப்பே !
மலையரசன் குலவிளக்கே ! மாங்காட்டின் தவத்திருவே !
மகேசனின் மனம்கவர்ந்த மாமதுரை மீனாட்சி
மலரடி போற்றுகின்றேன் ! மனமிறங்கி வந்திடுவாய் !
செங்கமலம் கரும்பேந்தி நின்றாயே காமாட்சி
சீறிவரும் கங்கைக் கரையினிலே விசாலாட்சி
செவ்விதழ் கிளியேந்தி கைகொடுக்கும் மீனாட்சி
சிந்தையிலே கோலோச்சும் சிவகாமி அரசாட்சி !
அழகுக்குப் பொருளாகி அகிலமெல்லாம் காப்பவளே
அகமெல்லாம் உள்ளடக்கி மோனத்தில் முதிர்ந்தவளே!
அசையாத உயிரெல்லாம் ஓடிவரும் ஆடித்தவசினிலே
அருள்சுரக்கும் உனைக்காண ஆனந்த பைரவியே !
ஓரிரவில் நீவந்தாய் உலகாளும் கலைமகளே
ஓரிரவில் நீவந்தாய் உளங்கவர்ந்த திருமகளே
ஓரிரவில் நீவந்தாய் உமையாள் மலைமகளே
ஒன்றாக நீயிருக்க இரவெல்லாம் உன்னருளே !
பூவாலே உனைப்போற்றப் புன்சிரிப்பால் உளம்கவர்ந்தாய்
பொன்னாலே அலங்கரிக்கப் பொழுதெல்லாம் முன்னின்றாய் !
பூந்தமிழில் உனைப்பாடப் புலனெல்லாம் உயிர்தந்தாய் !
புரியாத மொழிகேட்டும் பூரணியே! அருள்சுரந்தாய் !
கண்ணுக்குள் நீயிருந்தால் கதிரவனின் ஒளிவருமே !
கற்பனையில் நீயிருந்தால் காவியங்கள் உயிர்பெறுமே !
சொல்லிடையில் நீயிருந்தால் சொந்தங்கள் பிறந்திடுமே !
சுவையெல்லாம் நீயிருந்தால் சுகமான அனுபவமே !