இசைக்கவி ரமணன்

 

images-4
உன்களிப்பு தர்மம்
உன்விருப்பம் சிருஷ்டி
உன்னிமைப்பு மாயம்
உன்னிமைப்பே முக்தி!

என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது?
எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது?
என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ
எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது
உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா?
உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா?
உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே!
உயிரில் நின்றும் கண்ணில்படா உச்சக் கள்ளமே!

என்வினைகள் பிறவி
உன்மறைப்பு வாழ்க்கை
என்மறப்பு மரணம்
என்னநியாயம் தர்மம்?

கட்டுவதும் கழற்றுவதும் உன்றன் கைகளே, இதில்
கர்மம் தர்மம் என்பதெலாம் கல்விப் பொய்களே!
மட்டிலாத உன்றன்கருணை மட்டும் உண்மையே! உன்
மனதுபோல என்னைமாற்றி மகிழும் பெண்மையே!
தொட்டிலுக்கு முன்பிருந்தும் தொடர்ந்து வருகிறாய், நாலு
தோள்களிலோர் தோளுமாகித் தூக்கிச் செல்லுவாய்
முட்டுமந்த இடைவெளியில் என்ன செய்கிறாய்? ஏதோ
முழுமையென்கிறார்கள் நீ என்ன சொல்கிறாய்?

கண்ணில் நீ மாயம்
கனவெல்லாம் நேயம், உயிர்
எண்ணியெண்ணித் தேயும்
என்று வீழும் தாயம்?

உன்னிருப்பே ஒருகோடி எண்ணமானது, அந்த
ஒருநினைப்பே இன்பதுன்ப வண்ணமானது
என்னிருப்போ பொய்மிகுந்த மெய்யுமானது
ஏற்றும்வரை வாழும்கற் பூரமானது
ஒன்றுமட்டும் சொல்லிச் சற்று ஓய்வு கொள்கிறேன், நீ
ஒருத்தி தவிர ஒருவருமே இல்லை சொல்கிறேன்
என்றுமிந்த ஏழையினை மறந்துவிடாதே! எனக்கு
எல்லாமும் நீயம்மா துறந்துவிடாதே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *