பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி

0

செல்வரகு

atr2

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அவர் பேசிய போது,

” பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா ஏன்?

இன்று என் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை.கொண்டாடாததற்கு முதல்வர் உடல்நிலை காரணம். தமிழகமுதல்வர் மருத்துவமனையில் இருக்கிற இந்தச் சூழலில் அவர் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு ஒரு செய்தியும் இல்லை.

இதை நான் சொல்வதற்கு மனிதாபிமானம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அதிமுகவிடம் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்காதவன் நான்.

அவர் ஈழத்தமிழர் சம்பந்தமாக தைரியமாகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்ட வீராங்கனை. எனக்கு அவர் எதிரிகளை வீழ்த்தும் ஏவுகணையாக தெரிகிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதைப் பேசுகிறேன். எனக்கு யாரிடமும் சாதிக்க வேண்டியதில்லை காரியம். யாரிடமும் எதிர் பார்ப்பதில்லை ஒரு வாரியம் .

atr

atr1

கலைஞர் மீது என்ன வருத்தம்?

மறைந்து விட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல நானும் தி.மு.கவுக்கு உழைத்திருக்கிறேன். கலைஞருக்கு மாடாய் உழைத்திருக்கிறேன் . ஓடாய்த் தேய்ந்திருக்கிறேன்.ஆனால் அவரால் காயப்பட்டிருக்கிறேன்.

எம்.ஜி.ஆரையே தூக்கி வீசியவருக்கு நான் எம்மாத்திரம். என்னையும் தூக்கி வீசிவிட்டார்.

கலைஞர், தான் பெற்றெடுத்த பிள்ளைக்காக எதையும் இழப்பார்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஈழத்தமிழருக்கு துரோகம் இழைத்த காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றேன்.

‘நேற்று இன்று நாளை ‘ படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவதைப் போல கலைஞர் ‘ மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்,தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ‘ என்றிருப்பவர்.

தி.மு.கவில் நான் இருந்த போது என் 33 வயது பிறந்தநாளின் போது கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். அதில் திறமையிலும் சரி வயதிலும் சரி டி. ராஜேந்தர் என்னில் பாதி என்று எழுதியிருந்தார்.

கலைஞரோடு முடிந்து விட்டது சரிபாதி. இனி கடவுள் விட்ட வழி சரிபாதி.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா காட்டுகிறது வழி.

உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் ? வாழ்க்கையில் கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

யார் மீதும் நான் குற்றம் சொல்லவில்லை. நான் பிடிவாதக்காரன். இரட்டைவேடம் போட்ட போது கூட நடிப்பதற்கு தாடியை எடுக்காதவன் நான்.
நோட்டை எதிர்ப்பார்த்து நான் போகவில்லை. !
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அத்தனை கட்சியும் கூட்டணி என்று அமைத்தபோது என்னைக் கூப்பிடாமலா இருந்திருப்பார்கள்? ஓட்டை உடைக்க நோட்டை எதிர்ப்பார்த்து நான் போகவில்லை.

அ.தி.மு.க.வில் கவுன்சிலர் சீட்டுக் கூட கேட்காதவன் நான்.

இப்போது என்ன சொல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள்?

என் கொள்கைக்குக் கிடைத்த மரியாதை என்ன?

கர்நாடகத்தில் காங்கிரசின் சீத்தாராமையா காவிரி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க .வுக்குக் கூட்டணி தேவையா?

மத்தியிலுள்ள கர்நாடக அமைச்சர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் ஏன்?

மோடி அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,? மோடி அரசு ஏன் தட்டிக் கேட்கவில்லை?

கர்நாடகத்திற்கு ஒன்று,நீங்க உங்கள் மாநிலத்தை நேசியுங்கள் .நீருக்காக தமிழ்நாட்டையும் யோசியுங்கள். ஆனால் ஒன்று, மொழி உணர்வில் மாநில உணர்வில் கர்நாடகத்தில் மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இதற்காக அவர்களின் திசைநோக்கி வணங்குகிறேன்.தமிழ்நாட்டில் ஆளுக்கு ஒன்று பேசலாம் .எது வேண்டுமானாலும் பேசலாம்.

அந்த ஒற்றுமை ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

அங்கே நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்களே ?

அங்கே நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்கள்.எல்லா நடிகர்களும் ஒன்றாக இருக்கிறார்கள்.கர்நாடகத்தில் ஒரு திருட்டு விசிடி இருக்கிறதா? திருட்டு விசிடியை அங்கு வாங்கவே முடியாது . இங்கே இவ்வளவு டிவிக்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே கேபிள் டிவி யில் படம் போடுகிறார்கள் மீண்டும் அதையே பிரபல டிவிக்கு விற்க நினைக்கிறார்கள். இதை தயாரிப்பாளர் சங்கம் தட்டிக் கேட்க முடியாதா? உங்க துணிவு எங்கே போயிற்று? உங்கள் முதுகெலும்பு எங்கே?

ஆந்திராவில் எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களின் நிலை தத்தளிப்பாக இருக்கிறது.

அண்மையில் வந்த தனுஷ், விஜய்சேதுபதி படங்கள் ‘தொடரி’யும் ஆண்டவன் கட்டளை’ யும் நெட்டில் போடுகிறான். ஏன் தடுக்க முடியவில்லை? ஏன் தட்டிக் கேட்க முடியவில்லை?

உள்ளாட்சித்தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுமா?

உள்ளாட்சித்தேர்தலில் பல முதலமைச்சர் வேட்பாளர்களே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது லட்சிய தி.மு.க.என்ன செய்யும்?நாங்கள் தேர்தலில் நிற்பதைவிட என் கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பேன்.” இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *