ஏதென்ஸ் அகாடமி, ஏதென்ஸ், க்ரீஸ்

முனைவர்.சுபாஷிணி

ஏதென்ஸ் அகாடமி (The Academy of Athens) பண்டைய கிரேக்கத்தில் கி.மு..387ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவ மையம். தத்துவ மேதைகளில் உலகப்பிரசித்தி பெற்ற ப்ளேட்டோ என்ற தத்துவ மேதை உருவாக்கிய ஒரு தத்துவக்கூடம் இது. அக்காடெமோஸ் என்ற பண்டைய கிரேக்கத்தின் தலைவன் ஒருவனின் நினைவாக அவரது நினைவாலயத்துக்கு அருகாமையிலேயே கிரேக்கத்தின் புகழ் மிக்க நகரான ஏதன்ஸில் இந்த அமைப்பை உருவாக்கினார் ப்ளேட்டோ.

as

ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகள் தத்துவக்கூடமாகவும் கல்வி மையமாகவும் செயல்பட்ட இந்த அகாடெமி, கி.பி.529ஆம் ஆண்டில் முடக்கப்பட்டது. தத்துவங்கள் போதிப்பதற்குத் தடை செய்யப்பட வேண்டும் என வெளியிடப்பட்ட ஒரு அரச சட்டத்தினால் இந்தப் புகழ்மிக்க அறிவுக்கருவூலம் கி.பி.6ம் நூற்றாண்டில் முடக்கப்பட்டது. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதாவது மீண்டும் தோன்றிய மறுமலர்ச்சிக்காலத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கின. கிரேக்கத்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய சில நாடுகளிலும் இந்த ஏதன்ஸ் அகாடமி தன்னை விரிவாக்கம் செய்து செயல்பட ஆரம்பித்தது. கிரேக்கத்தைத்தவிர்த்து ஏனைய நாடுகளில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இயங்கி வந்தாலும் கூட, மீண்டும் 1926ஆம் ஆண்டில் தான் ஏதென்ஸ் நகரில் கிரேக்கத்தில் இதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அது முதல் இந்த அறிவுக்கருவூலம் எந்தத் தடைகளும் இன்றி தொடர்ச்சியாக பல்வேறு துறைசார்ந்த ஆய்வுகளை நிகழ்த்தும் ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்து வருகின்றது.

இந்த அமைப்பின் மிக முக்கிய செயல்பாடுகளாக அமைபவை ஆய்வுகள் தாம். அறிவியல், மானுடவியல், நுண்கலைகள் போன்ற துறைகளில் இங்கே ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.

as1

இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக சில நடவடிக்கைகளைச் செய்து நிறைவேற்றியுள்ளனர். பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கி அதனை வெளியீடு செய்தது இந்த அமைப்பு. அதன் தொடர்ச்சியாக பைசண்டைன் , லத்தீன் ஆகிய மொழியில் பண்டைய வரலாற்றுத்தகவல்களை சேகரித்து தொகுப்பாக வெளியிட்டது. மேலும், கிரேக்க தத்துவம், கிரேக்க சட்டதிட்டங்களின் வரலாறு, கணிதம் மற்றும் வானவியல் தகவல்களின் தொகுப்பு, எனக் குறிப்பிடத்தக்க இன்னும் பல சாதனைகளை வெளியீடுகளாக ஆய்வுலகத்திற்கு இந்த ஏதன்ஸ் அகாடமி வழங்கியிருக்கின்றது.

as2

ஏதென்ஸ் நகரின் பிரமாண்டமான சாலையில் ஏதென்ஸ் நூலகம், ஏதென்ஸ் பல்கலைக்கழகம் ஆகியனவற்றிற்கு அடுத்ததாக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டைச் சார்ந்த தியோபில் ஹான்சன் (1813-1891) என்னும் ஒரு கட்டிடக் கட்டுமானக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. சைமன் சினாஸ் (1810-1876) என்னும் ஒரு செல்வந்தர் இக்கட்டிடத்தைக் கட்டுவதற்கான செலவுகளைத் தாமே ஏற்றுக்கொள்ள இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழ்ந்தது. அப்போதைய கிரேக்க அரசின் மன்னர் ஓட்டொ, அரசியார் அமாலியா ஆகியோர் முன்னிலையில் இந்தக்கட்டிடத்தின் தொடக்கவிழா நிகழ்ந்தது. நீண்ட காலப்பணிகளுக்குப் பின்னர் 1887ஆம் ஆண்டு இதனைக் கட்டி முடித்த ஆர்க்கிடெக்ட் எர்ன்ஸ் சிலர், இதனை முழுமையாக்கி அன்றைய பிரதம மந்திரி சார்லியோஸ் ட்ரிகோப்பிஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இன்றைய அளவிலும் உலகிலேயே மிக அழகிய நியோக்லேசிக்கல் வகை கட்டிடக் கலையில் அழகில் முதலிடத்தில் குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றது இந்தக் கட்டிடம்.

இக்கட்டிடத்தின் மேலே நீண்ட அழகிய சிற்பத்தொகுதி ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இது பெண் தெய்வம் அத்தேனாவின் பிறப்பை உணர்த்தும் ஒரு சிற்பமாகும். முகப்புப்பகுதியின் இரு பக்கங்களிலும் நீண்டு பருத்து உயர்ந்த தூண்களில் ஒரு பக்கம் பெண் தெய்வம் அத்தேனாவும் மறுபக்கம் ஆண் தெய்வம் அப்போலோவும் செதுக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சிற்பங்களும் பண்டைய கிரேக்கத்தின் தத்துவச் சிந்தனைகள் மீண்டும் எழுச்சி பெற்று எழுந்தமையும் அவை ப்ளேட்டொ,சாக்ரடீஸ் ஆகிய இருவரின் வழித்துணையோடு செயல்படுவதையும் குறியீடாகப் புலப்படுத்தும் வகையில் இக்கட்டிடம் வடிவமக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் உள்சுவர்களில் பெரிய அளவிலான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. எட்டு பகுதிகளில் வர்ணக்கலவைகளால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன. இவை கிரேக்க ஓவியக்கலைஞரான கிறிஸ்டியான் கிரிப்பேன்கெர்ட் என்பவராலும் கார்ல் ரூல் என்பவரின் ஒரு மாணவராலும் உருவாக்கப்பட்டவை. இந்த எட்டு ஓவியங்களும் புராணக்கதைகளின் வெளிப்பாடுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

as4

விரிவான வளாகம் இது. பல துறை ஆய்வுகள் இங்குத் தொடர்ந்து நிகழ்வதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஏதென்ஸ் அகாடமி வார நாட்களில் திங்கள் தொடங்கி வெள்ளி வரை காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகர் செல்பவர்கள் அருங்காட்சியகமாகவே திகழும் இந்த கட்டிடத்தைச் சென்று பார்த்து வருவதைக் கட்டாயமாகத் தங்கள் பட்டியலில் வைத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *