ஆறுபடை வீடு (3) – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

0

க. பாலசுப்பிரமணியன்

tr3

அளவில்லாக் கருணை கந்தனின் விழிகள்

அறியாத சூரனின் அகந்தையின்  வேர்கள்

ஆணவத்தில் எழுந்தன அழிவினைத் தேடி

அலைவாய்க் கரையில் ஊழ்வினை நாடி !

 

ஓமென ஓமென உயர்ந்தன அலைகள்

ஒருதலை இருதலை மறுதலை மடிய

தறுதலை ஆணவம் தரணியில் வீழ

ஆறுதலை முருகன் அருளும் வெல்ல !

 

மாயைகள் அனைத்தும் மண்ணில் வீழ்ந்தது

மாலனின் மருகன் மனமே வென்றது

காலனின் அணைப்பில் சூரனும் கதற

வேலவன் ஆற்றலை  வானகம் புகழ்ந்தது

 

கூரிய வேலும் கொடியவன் கூறிட

கூவியே வந்தது கொடியினில் சேவலும்

குமரனைச் சுமந்திடஅகவியே  மயிலும்

குவலயம் மகிழ்ந்திடகந்தனின் தரிசனம் !

 

சமரினை முடித்த சங்கரன் மகனும்

சந்தனம் அணிந்தே சன்னிதி கொண்டான்

தந்தனத்  தோமென தாளங்கள் போட்டு

தாளிணைத் தேடி வந்தன காவடி !

 

நாழிக் கிணற்றில் அகந்தையைக் கழுவி

நாழிப் பொழுதும் கந்தனைக்  கண்டால்

தாழிட்ட நெஞ்சங்கள் தானாய்த் திறக்கும்

தாளினைப் போற்றியே தரணியில் வாழ்வோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *