இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !
எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா
செந்தமிழால் பாடிநிதம்
கந்தாவுனை வேண்டுகிறேன்
வந்தவினை போயகல
வரமருள வேண்டுமையா
சொந்தமெலாம் எனைச்சூழ
சுகமுடனே வாழுதற்கு
கந்தவேளே உந்தனருள்
தந்துவிட வேண்டுகிறேன் !
அசுரகுணம் அழிவதற்கு
அவதாரம் எடுத்தவனே
அசுரகுணம் எம்மிடத்தில்
அழியாமல் இருக்கிறதே
வழிமுழுக்க உனைவைத்து
வணங்கிநாம் இருக்கின்றோம்
வடிவேலா எமைத்திருத்தி
வரமருள வேண்டுகிறேன் !
நீதிநெறி தவறாமல்
நான்வாழ வேண்டுமையா
நெஞ்சமுள்ள வஞ்சனைகள்
நீறாக வேண்டுமையா
சோதனையை நான்தாங்கும்
துணிவெனக்குத் தந்திடையா
நாதனது திருப்புதல்வா
நல்லதுணை நீயன்றோ !
உன்நாமம் இப்போது
உலகமெங்கும் ஒலிக்குதையா
ஓங்காரப் பொருளுக்குள்
உலகமே அடங்குதையா
மண்மீது உள்ளாரின்
மனம்சிறக்க வைப்பதற்கு
மால்மருகா மனமிரங்கி
வரமருள வேண்டுகிறேன் !
பட்டதுன்பம் போதுமையா
படித்துவிட்டேன் பலபாடம்
துட்டரது சகவாசம்
துயரமெலாம் தந்ததையா
இஷ்டமுடன் கந்தஷஷ்டி
இனிப்படிப்பேன் கந்தவேளே
இரக்கமுடன் எனைக்காத்து
இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !