எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

image1

       செந்தமிழால் பாடிநிதம்

          கந்தாவுனை வேண்டுகிறேன்

       வந்தவினை போயகல

           வரமருள வேண்டுமையா

       சொந்தமெலாம் எனைச்சூழ

            சுகமுடனே வாழுதற்கு

       கந்தவேளே உந்தனருள்

            தந்துவிட வேண்டுகிறேன் !

 

      அசுரகுணம் அழிவதற்கு

          அவதாரம் எடுத்தவனே

      அசுரகுணம் எம்மிடத்தில்

            அழியாமல் இருக்கிறதே

      வழிமுழுக்க உனைவைத்து

            வணங்கிநாம் இருக்கின்றோம்

       வடிவேலா எமைத்திருத்தி

             வரமருள வேண்டுகிறேன் !

 

         நீதிநெறி தவறாமல்

             நான்வாழ வேண்டுமையா

         நெஞ்சமுள்ள வஞ்சனைகள்

               நீறாக வேண்டுமையா

          சோதனையை நான்தாங்கும்

                துணிவெனக்குத் தந்திடையா

            நாதனது திருப்புதல்வா

                  நல்லதுணை நீயன்றோ !

 

             உன்நாமம் இப்போது

                  உலகமெங்கும் ஒலிக்குதையா

             ஓங்காரப் பொருளுக்குள்

                    உலகமே அடங்குதையா

              மண்மீது உள்ளாரின்

                    மனம்சிறக்க வைப்பதற்கு

               மால்மருகா மனமிரங்கி

                     வரமருள வேண்டுகிறேன் !

 

            பட்டதுன்பம் போதுமையா

               படித்துவிட்டேன்  பலபாடம்

            துட்டரது சகவாசம்

                  துயரமெலாம் தந்ததையா

             இஷ்டமுடன் கந்தஷஷ்டி

                   இனிப்படிப்பேன் கந்தவேளே

             இரக்கமுடன் எனைக்காத்து

                    இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *