படக்கவிதைப் போட்டி – (85)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 12.11.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
ஆறாவதாய்…
இனத்துடன்
இனம் மோதுவது
மனிதனின் க(வ)லை..
இதை இப்போது
கற்றுக்கொண்டுவிட்டன
கால்நடைகளும்..
மனிதனைப் பார்த்து
மாடுகளுக்கும் வந்தது-
இந்த ஆறாம் அறிவு…!
-செண்பக ஜெகதீசன்…
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
சி. ஜெயபாரதன், கனடா
காளைச் சண்டைகள்,
கோழிச் சண்டைகள்,
யானைச் சண்டைகள்,
ரோமா புரியில்
மானிட விலங்குச் சண்டைகள்,
அனுதினம்
ஆண் பெண் சண்டைகள்,
ஆயுதப் போர்கள்,
அணுகுண்டு யுத்தம்,
உலகப் போர்கள்,
யுக யுகமாய் நேர்வதைத்
தவிர்த்தாயா ?
தடுக்க நீ முயன்றாயா ?
கலை உலகில்,
சண்டை இல்லாத
திரைப் படங்கள் குறைவு !
சண்டையில்
மண்டை உடைந்தாலும் மாந்தர்
மரணம் அடைந்தாலும்,
சண்டைகள் குறையா !
பிறவிக் குணமாய்ப்
பிறப்புரி மையாய்
பரம்பரை வழக்கமாய்
மரண கீதம் பாடுகிறோம் !
ஆறறிவு படைத்த மனிதா !
ஈரறிவுள்ள எறும்பினம்,
தேனீக்கள்
சேர்ந்து வாழ்வதைக் காணடா !
தேன் திரட்டும்
ஆக்க வினையைப் பாரடா !
ஊக்கமுடன், பொறுமையுடன்,
ஒன்று சேர்ந்து வாழடா !
மூடச் சண்டையில்
நிம்மதி ஏதடா ?
ஒற்றுமையே வேத மென்று
ஓதடா !
+++++++++++++