பவள சங்கரி

தலையங்கம்

8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பாரதப் பிரதமரின் அதிரடி அறிவிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் பல திருப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ‘விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்ற பாடலைப்போல தங்களிடமிருந்த 500, 1000 உரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், செல்லத்தக்கதாக ஆக்குவதற்கும் மக்கள் நகைக்கடைகளை முற்றுகையிட்டிருந்ததும், நகைக்கடைகள் விடிய விடிய சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததும், தங்கத்தின் விலை 40,000ற்கு மேலும் விற்றதும், இடைத்தரகர்கள் தரகுக்கு நோட்டுக்களை மாற்றியதும் பல இடங்களில் நடந்தேறியிருக்கிறது. அதாவது அரசு கொடுத்த 50 நாட்கள் வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தக்கூடிய காட்சிகள் பலவிதமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தங்களுடைய மேதாவிலாசங்கள் மூலமாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்களை வதைக்கக்கூடிய காட்சிகள் வேதனை அளிப்பதாக இருக்கின்றன.

வங்கித் துறையினரின் சரியான செயல்பாடுகளும், தணிக்கைத் துறையினரின் தேவையான வழிகாட்டுதலும் இச்சூழலுக்கு வளம் சேர்த்துள்ளன. ஆயினும் எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை இலாபம் என்ற நோக்கில் செயல்படுபவர்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது மட்டுமே ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும். பொது மக்களின் நல்ல எண்ணங்களும், நாட்டுப்பற்றும் பிரதமரின் கரத்தை வலிமையாக்கும்பட்சத்தில் இந்த அதிரடி நடவடிக்கைக்கான பலன் முழுமையாகக் கிடைக்கலாம். வ.உ.சி , சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் நாட்டிற்காக பட்ட வேதனையைவிடவா இந்த சில மணித்துளிகளின் வேதனை பெரிதாகி விடப்போகிறது. வங்கிகளின் பணி நேரங்களை அதிகரித்தும் பணப்பரிமாற்றங்களுக்கு அதிக அலுவலர்களை நியமித்தும் இனி வரக்கூடிய 4 நாட்களுக்கு இரவு எட்டு மணி வரை வங்கிகள் செயல்படும் போன்ற அறிவிப்புகளும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளன. திருப்பதி திருமலை நிர்வாகத்தினர் தங்கள் அலுவலகம் மூலமாக பக்தர்களுக்கு நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததும், தன்னார்வத்தொண்டுள்ளம் கொண்ட தனி மனிதர்கள் தாங்களாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தது போன்ற மனிதாபிமானமிக்க செயல்களையும் காணமுடிந்தது. தொடரும் நிகழ்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *