தடுமாறும் தமிழக மாணவர்களின் கல்வித் தரம்
பவள சங்கரி
தங்கத்திற்கு தரக்கட்டுப்பாடு இருப்பதுபோல கல்விக்கும் அகில இந்திய அளவில் தரக்கட்டுப்பாடு உள்ளது. சமீபத்திய வெளியீட்டின்படி அனைத்திந்திய மாணவர்களின் கல்வித்தர கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பின் தங்கியுள்ளது. ஆங்கிலத்தில் 28வது இடம், கணிதத்தில் 23வது இடம், அறிவியலில் 25வது இடமும், மொழிப்பிரிவில் 21வது இடம் என மாணவர்கள் மிகவும் பின் தங்கியிருப்பது வேதனைக்குரிய விசயம். நாளைய சமுதாயத்தை வளப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசு கல்வி அமைச்சகத்துக்கு உண்டு. விரைந்து இதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். இந்நிலையில் மருத்துவத் துறைக்கான பொதுத்தேர்வில் தமிழகம் கலந்து கொள்ளாது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதற்கு முன்பு முதல் ஐந்து நிலைகளில் இருந்த தமிழ் நாட்டு மாணவர்களின் நிலை இன்று இவ்வளவு பின் தங்கியுள்ளது. முன்பெல்லாம் தில்லியில் உள்ள முக்கியமான அரசு அமைச்சகங்கள் இயங்கக்கூடிய நார்த் பிளாக், சவுத் பிளாக் சென்றால் தமிழர்களை அதிகமாகக் காண முடிந்தது. இன்று நம் மாணவர்களின் தரம் குறைந்துகொண்டே போவதால் தமிழர்களை ஆட்சிப் பொறுப்புகளில் காண்பதே அரிதாகிவிடும். தமிழக அரசு நம் தமிழக மாணவர்களின் நிலை உயர என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? முன்பைவிட இன்று பல்வேறு விதமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதை எப்படி செப்பனிட்டு நம் வருங்காலத் தூண்களை சிறந்த சிலையாக உருவாக்கப் போகிறார்கள் என்பதே கல்வியாளர்களின் கவலையாக உள்ளது.