வானம்பாடி
க. பாலசுப்ரமணியன்
நீரைத்தேடி..
நிலத்தைத்தேடி ..
நிழலைத்தேடி….
வானம்பாடி !
உணவைத்தேடி
உறவைத்தேடி
ஊரைத்தேடி
வானம்பாடி !
வில்லின் அம்பாய்
வானில் கோலங்கள்
விண்ணும் மயங்கும்
மண்ணும் வியக்கும்
நாளையைத் தேடி
இன்றே பயணம் ..
வீடுகள் தாண்டி
நாடுகள் தாண்டி
உலகின் மொழியாய்
ஒன்றே குரலாய்
அன்பைப் பகிர்ந்திட
அரங்கங்கள் தேடி..
வானில் பறக்கும்
வானம்பாடி !
காற்றும் மழையும்
காலையில் வந்தால்
மாலையில் மறையும்
கலங்கியே நின்றால்
காலங்கள் தோற்கும்
கடமைகள் முடிக்க
கலங்கிட மறுக்கும்
சிறகுகள் திறந்ததும்
சிதறிடும் துயரங்கள்
சிந்தனை ஒன்றிட
சீரிய பயணம்
வானில் பறக்கையில்
வீடும் ஒன்று,
வாசமும் ஒன்று ;
ராகங்கள் ஒன்று
கானங்கள் ஒன்று
வாழ்க்கை ஓட்டத்தை
வாழ்ந்தே காட்டும்
வாழ்ந்தே காட்டும்
வானம்பாடி !