சகோதரச் சண்டைகள்

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

கல்யாணமாகியிருந்த ஓர் இளம்பெண்ணிடம், `உன் சிறுவயதில் நடந்ததில் ஏதாவது ஒன்று மீண்டும் நடக்காதா என்று நீ ஆசைப்படுவது எது?’ என்று கேட்டேன்.

யோசிக்காது வந்தது அவள் பதில்: `என் அண்ணனுடன் பிடித்த சண்டைகள்!’ பிறகு, சற்று ஏக்கத்துடன் தொடர்ந்தாள் `இப்போது சண்டையே போட மாட்டேன் என்கிறான். விட்டுக்கொடுத்து விடுகிறான்!’
கூடப்பிறந்தவர்களுடன் சண்டை போடாத குழந்தை இருக்கிறதா? சந்தேகம்தான்.

போட்டி

பெற்றோரின் அன்பில் தனக்குப் போட்டியாக வந்துவிட்டதே என்று மூத்தவனும், `நான்தான் அம்மா வயத்திலேருந்து முதல்லே வந்திருக்கணும். அண்ணாவுக்குத்தான் எல்லாம் நிறையக் கிடைக்கிறது!’ என்று சிறியவனும் பொருமுகிறார்கள்.

கதை: கத்திச்சண்டை

சிறு குழந்தைகள் சண்டை போடுவதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. நீண்ட காம்பைக்கொண்ட ஒரு பழுத்த இலையை கத்தியாகவே பாவித்து அதற்காகச் சண்டை போடுவார்கள்.

`இது என் இலை! நான்தானே பறித்தேன்? என்னுடையதுதான்!’

`நான்தான் முதலில் பார்த்தேன்? எனக்குத்தான் சொந்தம்!’

இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு இளம் தாய் முழிப்பாள். “இப்படி எல்லாவற்றிற்கும் சண்டைதான்! இரண்டுபேருமே குழந்தைகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடிக்கவும் மனம் வரவில்லை,” என்றாள். “`உனக்கும் ஒரு கத்தி பறித்து தருகிறேன்,’ என்று சிறியவனைச் சமாதானப்படுத்தினால் தீர்ந்தது கதை!” என்றேன் சிரிப்புடன்.

அவளும் சிரித்தாள். “அவ்வளவுதானா?”

சிறிது நேரத்தில் இரு சிறுவர்களும் முதலில் போட்ட வாய்ச்சண்டையை மறந்து, `கத்திச்சண்டையில்’ தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் வாயிலிருந்தும், அடித்தொண்டையிலிருந்தும் கார்ட்டூன் படங்களில் பார்த்திருந்த ஒலிகள் எழும்பிக்கொண்டிருந்தன! கத்தி உடையும்வரை அவர்கள் விளையாட்டு நீடித்தது. சிறிது நேரம் கழித்து, வேறு எதற்காவது சண்டை போடுவார்கள்.

இப்படிச் சமாதானம் செய்யாமல், `அவன் சின்னவன்! அவனோடு உனக்கென்ன சண்டை? அழவிடாதே. குடு!’ என்று தாய் கூறியிருந்தால், அம்மாவுக்கு என்னைவிட தம்பிதான் உயர்த்தி என்ற எண்ணம் எழும் மூத்தவனுக்கு.

இளையவனோ, அம்மா தன்பக்கம்தான் பேசுவாள், எது வேண்டுமானாலும் அழுது சாதிக்கலாம் என்று எண்ணிவிடுவான்.

ஐந்து வயதுக்குள் பிறருடன் பழகும் தன்மை புரியாததால் சண்டை வருகிறது. குடும்பத்தினர் அவர்களது சண்டையில் குறுக்கிட்டு தக்கபடி வழிநடத்தாவிட்டால், அப்போது எழும் மனக்கசப்பு எல்லா வயதிலும் நிலைத்திருக்கும்.

என்னையும் கவனியேன்!

குடும்பத்தில் கடைக்குட்டி தாயிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுபோல்தான், நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தையும். அதன் அண்ணனோ, அக்காளோ தனக்கும் தாயின் பிரத்தியேக கவனிப்பு கிடைக்கவேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொள்வார்கள். இது நல்லதல்ல. ஒரு தாய் எல்லாக் குழந்தைகளையும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி கவனித்துத்தான் ஆகவேண்டும்.

அம்மாவின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பவும் சில குழந்தைகள் சண்டையில் ஈடுபடலாம். அம்மாதிரித் தருணங்களில், அவர்களைக் கவனிக்காது விடுவதுதான் சரி.

தன் ஒவ்வொரு நிமிடத்தையும் குழந்தைகளுக்காகவே செலவழிக்க நேரிட்டால், தாய்க்குத்தான் நிம்மதி பறிபோய், மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். (இதேபோல், வீட்டில் போதிய கவனிப்பு இல்லாத சிறுமிகள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையின் கவனத்தைப் பெறவேண்டி, வேண்டுமென்றே ஏதாவது தவறிழைப்பார்கள். அவர்களைக் கவனிக்காமல், அலட்சியப்படுத்துவதுதான் அவர்களுக்கு அளிக்கக்கூடிய பெரிய தண்டனை).

இது உன் வேலை!

சற்றுப் பெரியவர்களாக ஆனதும், வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது சண்டைக்கு முக்கியமான காரணமாக அமையும். இதைத் தவிர்க்க, காலையில் ஒருவர், மாலையில் ஒருவர், அல்லது வாரத்தில் சில நாட்கள் ஒருவருக்கு என்றெல்லாம் பகிர்ந்துவிடலாம். வயதுக்கு ஏற்றபடி அவர்களுக்கு அளிக்கப்படும் வேலையை அவரவர்தான் தவறாது செய்ய வேண்டும் என்று வகுத்துவிட்டால், முணுமுணுக்காமல் செய்வார்கள்.

வசவு கற்றுக்கொடுப்பது

ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால், அவர்களைப்போல் நடக்கத்தானே குழந்தைகளும் கற்பார்கள்? இதற்குத்தான் பெரியவர்கள் பேசும்போது குழந்தைகள் அங்கு இருக்கக்கூடாது என்று விலக்கி வைப்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி வேண்டாமே!

திரைப்படங்களைப் பார்த்தும் வேண்டாத வசவுகளைக் கற்கிறார்கள் குழந்தைகள்.

நானும் அப்படித்தான்.

சொந்தக்கதை

நான் சிறியவளாக இருந்தபோது பார்த்த படங்களில், வில்லன் தன் மனைவியைத் திட்டுவான். (கெட்டவன் என்றால் துளிக்கூட நல்ல குணம் இருக்கக்கூடாது என்பது திரைப்பட விதி). `பாவி, துரோகி, சண்டாளி, நயவஞ்சகி,’ என்று அடுக்கிக்கொண்டே போவான். ஒவ்வொரு சொல்லுக்கு அடுத்தும், `நானா!’ என்று நெஞ்சில் கைவைத்து அதிர்பவள்தான் நல்ல மனைவி.

இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லாப் படங்களிலும் இதே வரிசையில், இதே வார்த்தைகள்தாம் வரும்.

எங்கள் வீட்டில் இந்தமாதிரி வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்கப்படாததால், இப்புதிய வார்த்தைகளை ஆர்வத்துடன் கற்றேன். எப்போது, எவ்வாறு உபயோகிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

எட்டு வயதுக்குட்பட்ட எனக்கும், என் தங்கைக்கும் சண்டை வரும்போது, நான் `பாவி!’ என்று ஆரம்பிக்க, அவள் அடுத்த வார்த்தையைப் பிரயோகிப்பாள். இருவருக்கும் எதற்கும் அர்த்தம் தெரியாது என்பது ஒருபுறமிருக்க, அவற்றை உச்சரிக்கும்போதே பலம் பெருகி, எதிராளியை வீழ்த்திவிட்டதுபோல் உணர்வோம். முடிந்தவரை உரக்கக் கத்துவோம் — அம்மா, `ஏய்! என்ன அசிங்கம் இது?’ என்று எங்கிருந்தாவது குரல் கொடுக்கும்வரை.

இரண்டுபேரும் ஒரே சமயத்தில் ஒற்றுமையாகி, `ஒண்ணுமில்லேம்மா,’ என்று குரல் கொடுப்போம். ஒருவரையொருவர் பார்த்துப் பெருமையுடன் சிரித்துக்கொள்வோம்.

பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிட, அவ்வார்த்தைகள் மனதில் பதிந்துவிட்டன. எதற்குச் சண்டை போட்டோம் என்று நினைவில்லை.

சமீபத்தில் ஏதோ அரதல் பழசான படத்தில் வில்லன், `பாவி!’ என்று ஆரம்பிக்க, நான் மகிழ்ச்சியுடன், மீதி வார்த்தைகளைப் பூர்த்தி செய்தேன்! வீட்டில் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

சண்டை அவசியம்

சகோதர சகோதரிகள் சண்டை போடுவது பிற்கால வாழ்க்கைக்கு அவசியம். எப்படி என்கிறீர்களா?
பிறரது எண்ணப்போக்கைப் புரிந்துகொண்டு, அனுசரணையாக நடந்துகொள்ளவும், நல்லவிதமாகப் பழகவும் சிறுவயதில் நாம் போடும் சண்டைகள் உதவுகின்றன.

`இந்தப் பொம்மையை நீ வெச்சுக்கோ, அதை நான் எடுத்துக்கறேன்,’ என்று சமாதானம் பேசும் குழந்தை தகறாறின்போது பேச்சுவார்த்தை நடத்தக் கற்கிறது. முரட்டுத்தனமாக நடப்பது நன்மையில் முடிவதில்லை என்று புரிந்து, அதை அடக்கிக்கொள்ள முயல்கிறது.

எப்போதும் சிறிய மகனையோ, மகளையோ பெரிய குழந்தைக்கு எதிராக ஆதரித்துப் பேசும் தாய் தன்னையுமறியது அதற்குக் கேடு விளைவிக்கிறாள்.

எல்லாருமே எப்போதுமே விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்களா, என்ன! சண்டை போடவும் தைரியம் இல்லாது, சமாளிக்கும் வழியும் புரியாது விழிப்பார்கள் அப்படி வளர்க்கப்பட்ட சிலர்.

`என்னையும் அடிச்சு வளர்த்திருக்கணும்!’ என்று தாயிடமே குறைகூறுவார்கள்.

வேறு சிலர் எல்லாவற்றிற்கும் பிறருடன் சண்டை போடுவார்கள்.

கதை: வளர்ந்த செல்லக்குழந்தை

என்னுடன் உத்தியோகம் பார்த்த ஓர் ஆசிரியை விஞ்ஞானப் பாடத்தை என்னுடன் பகிர்ந்து கற்பித்தாள். நான் பௌதிகம் மற்றும் ரசாயனம் மட்டும்.

ஒரு பரீட்சைக்கு, `நீ உன் பாடத்தில் கேள்வித்தாளை அமைக்க வேண்டுமாம். உன்னிடம் தெரிவிக்கும்படி தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்,’ என்று நான் அவளிடம் கூறினேன்.

`நான் பண்ணமாட்டேன், போ! நீ என்ன சொல்வது?’ என்று அவள் முரண்டுசெய்தது பிற ஆசிரியர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

எனக்கோ ஒரே எரிச்சல். `என்னவோ பண்ணிக்கொள்!’ என்றேன்.

அவள் போய் தலைமை ஆசிரியரைச் சந்தித்தாள். அவர் என்ன `டோஸ்’ விட்டாரோ!

தோல்வியடைந்தவள்போல் முகத்தை வைத்துக்கொண்டு, `சரி. நானே செய்யறேன்!’ என்று என்னிடம் வந்து கூறினாள், எனக்காக ஏதோ பெரிய தியாகம் செய்வதுபோல. நான் எதுவும் பேசவில்லை.

அவள் அப்பால் சென்றதும், `இவளுக்கு ஆறு அண்ணன்மார்கள். இவள் ஒருத்திதான் பெண். வீட்டில் செல்லக்குழந்தையாக இருந்திருக்கலாம். அதற்காக எப்போதுமே எல்லாருமே அருமையாக நடத்தவேண்டும் என்றால் நடக்கிற காரியமா?’ என்றார் முதிர்ச்சியுடைய ஆசிரியை ஒருவர். அதை ஒப்புக்கொண்டு, எல்லாரும் நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம்.

உங்கள் குழந்தைகள் சண்டை போடுகிறார்களா? ஒருவர் பக்கமும் சாயாமல், அவர்களை ரசியுங்கள். அடிதடியில் இறங்கினால் மட்டும் குறுக்கிடலாம். தானே பெரியவர்களானதும், ஒற்றுமையாகிவிடுவார்கள். அப்போது அவர்கள் போட்ட சண்டைகளையெல்லாம் நினைவுகூர்ந்து சிரிக்கலாம். அவர்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள், `எவ்வளவு வேடிக்கை! இப்போ சண்டையே போடறதில்லையே!’ என்று ஏங்கும் அளவுக்கு!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *