பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

15320292_1165074813546716_841877321_n

23112939n06_rராமச் சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 10.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி … (89)

  1. காலத்தால் அழியாத காலடிகள்

    காலடிகள் காணாமல் போகும் ஒருநாள் -ஆனால்
    காவியம் படைத்தும் உள்ளது சில காலடிகள்……

    அண்ணல் இராமன் காலடி ஸ்பரிக்க
    அங்கே எழுந்தாள் அகல்யை உயிர் சிலிர்க்க‌

    மூன்றடி மண்தான் கேட்டான் மாதவன் -ஆனால்
    மூவுலகமும் வசமானது அவன் காலடியாலே

    அஹிம்சையைப் போதித்தது புத்தனின் காலடி
    அவ்வழி நடந்தது அண்ணல் காந்தியின் காலடிகள்

    ஞானக் குஞ்சொன்று பிறந்தது காலடியிலே
    அஞ்ஞானம் மாண்டதும் அவர் காலடியிலே

    அறிஞரைப் போல மெய்யடியார்களைப் போல‌
    அவர் வழி நடந்து பதிப்போம் நம் காலடிகளை

    வரமாகப் பெற்ற இவ் வாழ்க்கைப் பாதையில்
    தரமாக விட்டுச் செல்வோம் நமது காலடிகளை

    அனுப்புனர்
    திருமதி ராதா விஸ்வநாதன்

  2. தாயே நின் தாளே சரணம்

    பதிந்தது பாதங்கள் மணலில் மட்டும் இல்லை
    புதைமந்தது புதையலாக‌ என் மனதிலும் தான்

    காணக் கிடைக்காதது நின் பாதங்கள்
    கண்டு விட்டால் அழிந்துடும் பாதகங்கள்

    தொடுவதற்கு அலைக்கும் ஏனோ அவசரம்
    தொட்டவுடன் ஓடுகிறது அவசரமாக அச்சத்தில்

    தொட நினைத்து நானும் தோற்று விட்டேன்
    தொட்டு விட்ட அலையின் முன்னே

    தொட முடியாது என தெரிந்தும் கதியின்றி
    தொடருகிறேன் உன் பாதச் சுவடுதனை

    வர்ணிக்க நினைத்தேன் நினது பாதங்களின் அழ்கை
    வார்த்தைகளுக்கோர் வந்த பஞ்சம் கொஞ்ச நஞ்சமில்லை

    உன்னை அல்லாது காப்போர் உண்டோ பாரினில்
    உமை அம்மையே தாயே நின் பாதமே சரணம்

    நின்னையே சரண் என வந்த எனக்குத் தாயே
    நிலந்தன் மேல் வந்த நீ உனது நீள் கழல் காட்டி

    அலையாத மனமும் குலையாத கல்வியும் கபடில்லா நட்பும்
    தொலையாத செல்வமும் தந்தருள்வாய் தாயே உமையே

    திருமதி ராதா விஸ்வநாதன்

  3. நிலத்தில் தடங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா.

    நிலத்தில் நடக்கும் கால்கள்
    நேற்றுப் பகலில்
    நிலவில் தடம் பதித்து
    வரலாற்றுக் கல்லை
    நிலைநாட்டும் !
    எளிய மனிதனின்
    பூதகர மான எட்டு வைப்பு !
    ஆறறிவு மானிடன்
    பேரளவு முயற்சியில் ஆற்றிய
    ஏழறிவுச் சாதனை !
    தவழப் பயின்று தட்டுத் தடுமாறி
    நடக்கப் பழகி
    இறக்கை யின்றிப் பறந்து
    பிற அண்டத்தில்
    தடங்கள் இட்டு மீண்டான் !
    அடுத்துப்
    பதினைந்து ஆண்டுகளில்
    செந்நிறக் கோள்
    செவ்வாயில் தடம் வைத்து
    வெற்றி
    விண்ணவனாய்
    மீள்வான்,
    மண்ணிலே தடம் வைத்த
    மனிதன் !

    ++++++++++++

  4. தடங்கள்…

    கடற்கரையில்
    காலடித் தடங்கள்
    தொடர் பயணத்திற்கு ஏற்றவையல்ல..

    இலக்கை எட்டமுடியாது
    இவற்றைத் தொடர்ந்து சென்றால்..

    கடலலைக் கரங்களால் அழிக்கப்பட்டு
    காணாமலும் போய்விடும்..

    வாழ்க்கைப் பயணத்தில்
    நீ பதிக்கும்
    வெற்றிக் காலடித்தடங்கள்,
    காலக் கடலலைகளால் அழிவதில்லை..

    வாழ்க்கை இது சாதிப்பதற்கே,
    வெற்றித் தடங்களைப் பதிப்பதற்கே…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. அன்றொரு நாள் 
    ^^^^^^^^^^^^^^^^^^
    அவசர வாழ்வில் அந்நிய மானது
    அன்புட னிருந்த அருமை உறவுகள்
    அன்றொரு நாள் அப்படித் தான்
    அவளும் அவனும் பிரிந்ததைக் கண்டேன்

    அவளின் கண்கள் அவனை நோக்க
    அவனின் கண்கள் எங்கோ பார்க்க
    வெறுப்பில் அவளின் வார்த்தை வெடிக்க
    சிறுத்த முகத்துடன் அறைந்தானவளை…!

    விழுந்த அறையில் காதல் ஒடிந்தது
    கடந்து போனது காதல் அலைபோல்
    எழுந்து போயினர் ஆளுக் கொருபுறம்
    அழிந்தன அவரடி அலைகளினாலே….!

    ஐந்தே நிமிடம் அந்த இடத்தில்
    வந்து அமர்ந்தது மற்றொரு சோடி
    இங்கு வந்ததில் ஆணோ பழையவன்
    அறைந்தவளில்லை இவள் புதியவள்…!

    அகன்ற கண்களை விலக்கிக் கொண்டு
    அவசர உலகின் அவசரம் உணர்ந்தேன்
    கடற்கரை காற்று எத்தனை கண்டதோ
    வெறுத்து வீசுது வெப்பத்தோடு…!

    ஜோ. குமாரி எலிசபெத்
    வேலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *