க. பாலசுப்பிரமணியன்

 

திரு இந்தாளுர்  –  அருள்மிகு பரிமள ரங்கநாதப் பெருமாள்

ag

அணிதலை நாகனும் அமைதியைக் காத்திட

அலைமகள் நிலமகள் அடிகளைப்  போற்றிட

அரங்கத்தில் அயர்ந்த அமரனே எழுந்திரு

அரியணை நெஞ்சினில் அழகுடன் அமர்ந்திடு !

 

மதிகெட்டு மதிபெற்ற சாபம் விலக்கினாய்

முனிசெய்த சதிநீக்கி முன்னவன் காத்தாய்

விதிமாற்றி நதிதன்னைத் தலைமீது வைத்தாய்

பனிநீக்கும் பகலவனாய் துயர்தீர்க்கும் பரிமளா !

 

கல்லுறை நிற்பதை கணத்தினில் விலக்கி

வானுறை வேங்கடா விழியினில் நிற்பாய்

ஊனுறை உணர்வினால்  உன்னையே போற்றிட

மூதுரை முத்தமிழ் மூச்சிடை வைத்தேன் !

 

ஊதிடும் குழலுக்கு உருகிடும் உலகினில்  

ஆடிடும் கோபியர் போலவே போதையில்     

பேசிட மொழியின்றி பரவசம் கொண்டேன்

நாசியில் மூச்செல்லாம் நடனங்கள் ஆடுதே  !

 

கூடியகைகள்  உன்னைக் கூப்பியே நிற்கும் 

குரலென்றும்  உன்பெயர் கூறியே ஒலிக்கும்

குவிந்திட்ட விழிகளில் நின்னெழில் நிறையும்

குறையின்றி வாழ்ந்திட நின்னருள் வேண்டும் !

 

பாய்முனை படித்தபின் பதறிடும் நெஞ்சம்

நோய்முனை தவிர்த்திட  உன்னிடம்  தஞ்சம்

தாய்முலை தேடியே தாவிடும் சேயென

வாயினில்  வந்தேன் வழங்கிடு பரிமளா !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *