மார்கழி மணாளன் (4)
க. பாலசுப்பிரமணியன்
திரு இந்தாளுர் – அருள்மிகு பரிமள ரங்கநாதப் பெருமாள்
அணிதலை நாகனும் அமைதியைக் காத்திட
அலைமகள் நிலமகள் அடிகளைப் போற்றிட
அரங்கத்தில் அயர்ந்த அமரனே எழுந்திரு
அரியணை நெஞ்சினில் அழகுடன் அமர்ந்திடு !
மதிகெட்டு மதிபெற்ற சாபம் விலக்கினாய்
முனிசெய்த சதிநீக்கி முன்னவன் காத்தாய்
விதிமாற்றி நதிதன்னைத் தலைமீது வைத்தாய்
பனிநீக்கும் பகலவனாய் துயர்தீர்க்கும் பரிமளா !
கல்லுறை நிற்பதை கணத்தினில் விலக்கி
வானுறை வேங்கடா விழியினில் நிற்பாய்
ஊனுறை உணர்வினால் உன்னையே போற்றிட
மூதுரை முத்தமிழ் மூச்சிடை வைத்தேன் !
ஊதிடும் குழலுக்கு உருகிடும் உலகினில்
ஆடிடும் கோபியர் போலவே போதையில்
பேசிட மொழியின்றி பரவசம் கொண்டேன்
நாசியில் மூச்செல்லாம் நடனங்கள் ஆடுதே !
கூடியகைகள் உன்னைக் கூப்பியே நிற்கும்
குரலென்றும் உன்பெயர் கூறியே ஒலிக்கும்
குவிந்திட்ட விழிகளில் நின்னெழில் நிறையும்
குறையின்றி வாழ்ந்திட நின்னருள் வேண்டும் !
பாய்முனை படித்தபின் பதறிடும் நெஞ்சம்
நோய்முனை தவிர்த்திட உன்னிடம் தஞ்சம்
தாய்முலை தேடியே தாவிடும் சேயென
வாயினில் வந்தேன் வழங்கிடு பரிமளா !