மார்கழி மணாளன் (5)
க. பாலசுப்பிரமணியன்
திருப்பாற்கடல் (காராபுரம் )- அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
அரனோடு அரியும் ஒன்றென்ற தத்துவத்தை
ஆவுடையார் மேலிருந்து அடியார்க்குச் சொன்னவனே !
அறியாது பிரிந்திருக்கும் அடியார்கள் அரவணைத்து
அழியாத அன்பிற்கு இலக்கணம் படைத்தவனே !
ஆழ்கடல் வாழ்வினிலே தத்தளிக்கும் அடியார்கள்
அருளிட்ட சாசனங்கள் அமைதியாய் கேட்டாயோ
பாற்கடலை விட்டிங்கே வந்ததேன் பரந்தாமா
பாசுரங்கள் கேட்டபின்னும் அரங்கா உறங்கலாமா?
ஐம்பொறியும் ஐம்புலனும் உன்வசமே ஆனந்தா
ஐயமில்லை உன்னையன்றி உறவுமில்லை கோவிந்தா !
ஐங்கரனின் அறுமுகனின் அன்னையின் சோதரனே !
ஐயம்கொண்ட புண்டரீகன் ஆட்கொண்ட வேங்கடனே !
ஒப்புயர்விலா உத்தமனே! முப்புரியும் அளந்தவனே!
செப்புமொழி அத்தனையும் சிதறாமல் தந்தவனே !
எப்பெயரில் அழைத்தாலும் அப்பெயரில் அமைபவனே
உப்பரிகை தேவையில்லை உளமறிந்தால் போதுமையா!
கல்லான அகலிகையின் சாபம் விடுத்தாய்
காதலுடை துளசிக்கோ தன்னைத் தந்தாய்
கனிவுடைய சபரிக்கோ கருணை தந்தாய்
கார்மேகா ! கதறுகிறேன் காத்திட வருவாயே !
ஒருபொழுது உனைநினைக்க உளம்நாடும் மறுபொழுதும்
மறுபொழுதும் உனைநினைக்க மனம்தேடும் முப்பொழுதும்
முப்பொழுதும் உனைநினைக்க முன்னிருப்பாய் நாட்பொழுதும்
நாட்பொழுதும் நாரணனே எப்பொழுதும் எம்பெருமானே !