க. பாலசுப்பிரமணியன்

 

திருப்பாற்கடல் (காராபுரம் )- அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

ag1

அரனோடு  அரியும் ஒன்றென்ற தத்துவத்தை

ஆவுடையார் மேலிருந்து அடியார்க்குச் சொன்னவனே !

அறியாது பிரிந்திருக்கும் அடியார்கள் அரவணைத்து

அழியாத அன்பிற்கு இலக்கணம் படைத்தவனே !

 

ஆழ்கடல் வாழ்வினிலே தத்தளிக்கும் அடியார்கள்

அருளிட்ட சாசனங்கள் அமைதியாய் கேட்டாயோ

பாற்கடலை விட்டிங்கே வந்ததேன் பரந்தாமா

பாசுரங்கள் கேட்டபின்னும் அரங்கா உறங்கலாமா?

 

ஐம்பொறியும் ஐம்புலனும் உன்வசமே ஆனந்தா

ஐயமில்லை உன்னையன்றி உறவுமில்லை கோவிந்தா !

ஐங்கரனின் அறுமுகனின் அன்னையின் சோதரனே !

ஐயம்கொண்ட புண்டரீகன் ஆட்கொண்ட வேங்கடனே !

 

ஒப்புயர்விலா உத்தமனே! முப்புரியும் அளந்தவனே!

செப்புமொழி அத்தனையும் சிதறாமல் தந்தவனே !

எப்பெயரில் அழைத்தாலும் அப்பெயரில் அமைபவனே

உப்பரிகை தேவையில்லை உளமறிந்தால் போதுமையா!

 

கல்லான அகலிகையின் சாபம் விடுத்தாய்

காதலுடை துளசிக்கோ தன்னைத் தந்தாய்

கனிவுடைய சபரிக்கோ கருணை தந்தாய்

கார்மேகா ! கதறுகிறேன் காத்திட வருவாயே !

 

ஒருபொழுது உனைநினைக்க  உளம்நாடும் மறுபொழுதும்

மறுபொழுதும் உனைநினைக்க மனம்தேடும் முப்பொழுதும்

முப்பொழுதும் உனைநினைக்க முன்னிருப்பாய் நாட்பொழுதும்

நாட்பொழுதும் நாரணனே எப்பொழுதும் எம்பெருமானே !

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *