நலம் .. நலமறிய ஆவல் … (36)
நிர்மலா ராகவன்
ஐ லவ் யு சொன்னால்தான் அன்பா?
திருமணத்திற்குமுன் அண்ணனைத் தவிர வேறு எந்த ஆணுடனும் பழகியிராத பெண்கள் பலர் உண்டு. `அப்பா’ என்பவரிடம் மரியாதை மட்டும்தான். அவருடன்கூட அதிகம் பேசியது கிடையாது என்று பெருமிதம் கொள்வார்கள். அதனாலேயே ஆண்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகும் பெண்களையும், அவர்களுடன் கலந்து உரையாடும் ஆண்களையும் ஏளனமாக, ஒருவித சந்தேகத்துடன் பார்ப்பவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்களின் மனோபாவம் எப்படிப் புரியும்? அதனால் சில எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன.
கதை
ஒரு அண்ணனும் தங்கையும் முறையே இன்னொரு குடும்பத்தின் மகளையும் மகனையும் மணந்தனர்.
சில வருடங்கள் ஆனதும், அவர்களுள் ஒருத்தி என்னிடம் அலுத்துக்கொண்டாள்: `நான் என் கணவருடன் என்ன பேசினாலும், அது சண்டையில் முடிகிறது. அதனால், அவருடன் பேசுவதையே குறைத்துவிட்டேன். ஆனால், என் அண்ணனுடன் நிறைய பேச முடிகிறது,’ என்றபடி சிறிது யோசித்தவள், `அவனுடைய மனைவிக்கும் இதே பிரச்னைதான்!’ என்றாள் அதிசயப்பட்டவளாக.
`அதாவது, உன் கணவருடன் அண்ணிக்கு எந்தவிதத் தடங்கலுமின்றி பேச முடியும். ஆனால், உன் அண்ணன், அதுதான் அவள் கணவருடன், பேச முடிவதில்லையாக்கும்!’ என்று குறுக்கிட்டேன்.
வருத்தத்துடன் சற்று மௌனம் சாதித்துவிட்டு, `அண்ணன் தங்கையையே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றிருக்க வேண்டும்!’ என்றாள்.
இது நடைமுறைக்கு ஒத்துவராது; ஏனெனில் பிறக்கும் குழந்தைகள் உடற்குறையோடு பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பது அவளுக்கும் தெரியும். இருந்தாலும், `இந்த பொறுக்க முடியாத இல்லறம் இன்னும் எத்தனை காலமோ!’ என்ற அயர்ச்சி அவளை அப்படிப் பேசவைத்தது.
தம் தாய் தந்தையர் ஏனோ நெருக்கமாக இல்லையே என்று குழம்பும் இளவயதுப் பெண்கள் இதற்கு நிவர்த்தி தம் வயதொத்த ஆண்களுடன் சரிசமமாகப் பழகுவதுதான் என்று கருதுவதுபோல் நடக்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால், பழகுவதன் எல்லை என்னவென்று அந்த இருபாலருக்கும் புரியாததுதான்.
இன்றைய நாகரிகம்!
ஈராண்டுகளுக்குமுன், சென்னையில் ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். பதினெட்டு வயதான பெண் ஒருத்தி, ஓடி வந்து அவளைவிடச் சற்று பெரியவனாக இருந்த பையனைக் கட்டி அணைத்தாள். அவனும் அவளுடைய தோளில் கை போட்டுக்கொண்டான். `காதலர்களோ?’ என்று நினைக்கவைத்தது அவர்களது நெருக்கம்.
சற்று பொறுத்து இன்னொரு நண்பன் நுழைய, அதே பெண் அவனருகே ஓடி, சிறுகுழந்தைபோல் தாவினாள். அவளுடைய கால்கள் அவனுடைய இடுப்பைச் சுற்றிக்கொண்டன. கைகள் கழுத்தைச் சுற்றின. இப்படியெல்லாம் நடப்பதுதான் இன்றைய நாகரீகம் என்று கருதினாளோ?
`உங்களைப் பார்த்ததில் எனக்குப் பேரானந்தம்!’ என்று உணர்த்த நினைப்பவள்போல அவள் நடந்துகொண்டது அந்த இளைஞர்கள் மனதில் எந்தவிதக் கிலேசத்தை உண்டுபண்ணி இருக்குமோ!
தமிழ்ப்படங்களின் தாக்கம், அல்லது மேல்நாட்டு நாகரிகத்தின் சில (வேண்டாத) அம்சங்களை மட்டும் காப்பி அடிப்பது இப்போக்கின் அடிப்படை.
இதெல்லாம் காதலா!
தான் எப்படி நடந்தாலும் இப்பெண் பொறுத்துப்போவாள் என்ற நம்பிக்கையை உண்டாக்கும் பெண்ணை ஒருவன் விரும்பி மணக்கிறான். யோசித்துச் செய்யும் காரியம் இல்லை அது.`இவள்தான் எனக்குச் சரியானவள்!’ என்று தோன்றும்போது,`காதல்’ என்ற பிரமை ஏற்படுகிறது.
பெண்களும் இக்கலையில் சளைத்தவர்களல்ல. ஒருவன் என்ன பேசினாலும் அதை உன்னிப்பாகக் கவனித்து, குறுக்கே பேசாது, அதற்கு மயங்குவதுபோல் நடித்து, அவன் சொல்வதற்கெல்லாம் சிரித்துவைத்தால் அவனுடைய தற்பெருமை அதிகரித்துவிடுகிறது என்று விரைவில் புரிந்துகொள்கிறார்கள். தன்னைத்தானே உயர்வாக நினைக்கவைக்கும் பெண்ணிடம் எவனும் காதலில் வீழ்ந்துவிடுகிறான்.
இப்படி எதையாவது இலக்கு வைத்து ஒருவரையொருவர் வசப்படுத்துவது காதலா? இப்படிப்பட்டவர்கள் கல்யாணம் செய்துகொண்டாலும், இரண்டே ஆண்டுகளில் அவர்களது நெருக்கம் பிசுபிசுத்துவிடுகிறதே!
கதை
“இப்போதெல்லாம் பதினேழு வயதாகிவிட்டால், காதலிக்க ஒருவர் கண்டிப்பாக இருக்கவேண்டும்!” என்று என்னிடம் ஒரு தமிழகப் பேராசிரியை கூறினார், கேலிச்சிரிப்புடன்.
அப்படிக் காதலித்த கல்லூரி மாணவி ஒருத்தி அடுத்த ஆண்டே இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் தன் காதலனை மணந்தாள்.
ஐந்து வருடங்கள் கழித்து அவள் தன் பேராசிரியைச் சந்தித்தபோது,`அவனை விவாகரத்து செய்துவிட்டேன். ரொம்பக் குடித்துவிட்டு அடிக்கிறான்!’ என்று தெரிவித்தாளாம். `படிக்க வேண்டிய வயசில் புத்தி தடுமாறிவிட்டது! படிப்பும் அரைகுறையாப் போச்சு!’காலங்கடந்து புத்தி வந்ததில் வருத்தம்தான் மிஞ்சியது.
சுதந்திரமான சேர்க்கை
கல்யாணத்திற்குப்பின் ஒருவரது குணாதிசயங்களும்,`பராக்கிரமும்’ ஒத்துப்போகாவிட்டால் என்ன செய்வது என்று சிலர் முதலிலேயே கணவன் மனைவிபோல் சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஒருவரது சுதந்திரத்தில் மற்றவர் குறுக்கிடக்கூடாது, அதெல்லாம் கல்யாணமானவர்கள் செய்வது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டது இந்த ஏற்பாடு.
`வேண்டாம்’ என்றால் எளிதாகப் பிரிந்துவிடலாம் என்று அவர்கள் முதலில் போட்ட ஒப்பந்தம் தப்பாகிவிடும். ஏனெனில், ஒன்றாக இன்பதுன்பங்களைப் பகிர்ந்துவிட்டபிறகு, பிரிவு துயரத்தை உண்டுபண்ணிவிடுகிறது. (இம்மாதிரியான உறவை முறித்துக்கொண்ட ஒரு பெண்மணி என்னடம் கூறியது இது).
பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நான் மூன்று வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகள் நாம் இயல்பாக ஏற்கும் இந்த விஷயத்தை மிக சுவாரசியத்துடன் விவாதிக்கக் கேட்டிருக்கிறேன்.
`அதெப்படி முதலிரவில் முன்பின் தெரியாதவருடன் உடலுறவு கொள்ள உங்களால் முடியும்? காதலிக்க வேண்டாம்?’ காதல் திருமணம்தான் இல்லற வாழ்க்கைக்கு ஏற்றது என்று வாதாடும் பெண்கள். (இவ்வளவு வெளிப்படையாகக் கேட்கவில்லை. சுற்றி வளைத்து, கண்களை உருட்டி, தடுமாற்றத்துடன்தான் கேட்டார்கள்!)
பெண்களும் விட்டுக்கொடுக்காது பதிலளிப்பார்கள்:
`நாங்கள் கல்யாணத்திற்குப் பிறகு காதலிப்போம்!’
`எங்களை மணப்பவருக்கும் அது புதிய அனுபவம்தானே?’
கல்யாணத்துக்குமுன் வருவது ROMANTIC LOVE. அதில் இளமையின் துள்ளல், ரகசியமாக வைத்திருப்பதால் ஒரு த்ரில் எல்லாம் இருக்கும். எப்போதோதான் சந்திக்கிறார்கள், இல்லையா? மீதி நேரங்களில் மற்றவரைப்பற்றிய கனவிலேயே திளைத்து இன்பம் அடைகிறார்கள்.
இப்படிப்பட்ட இருவர் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றவருக்கு என்ன பிடிக்குமோ, அந்தத் தன்மையை மட்டும் வெளிக்காட்டுவர் இருவரும். பின் எப்படித்தான் காதலைத் தக்கவைப்பது!
அவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்தாலும், அதற்குப்பின் பிற குணங்கள் வெளிப்பட, ஏமாற்றம் அல்லது மனக்கசப்பு தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது.
காதல் திருமணம் புரிந்துகொண்ட அலெக்சாண்ட்ரா என்னிடம் கூறினாள்: `காதல் எல்லாம் கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்குத்தான்! அதுக்கப்புறம், உவ்வே!’ (இவள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். கணவர் மிக நல்லவர். நான் இருவருடனும் பழகியிருக்கிறேன்).
ஐ லவ் யு சொன்னால்தான் அன்பா?
பெரியவர்கள் நிச்சயித்ததோ அல்லது காதல் கல்யாணமோ, கல்யாணத்திற்குப் பின்னரும் நிலைக்கும் காதலானது ஒருவர்மேல் மற்றவர் காட்டும் அன்பு, அக்கறை, மரியாதை இதையெல்லாம் பொறுத்தது. இதுதான் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
இது அருவிபோல் கொட்டுவதில்லை. ஆழமாக, அதிகச் சலசலப்பின்றி சீராக ஓடும் நதி போன்றது.
இந்த உறவில், பார்க்கும்போதெல்லாம் சிரித்த முகத்துடன், `ஐ லவ் யு’ சொல்ல வேண்டிய அவசியமில்லை. பிறந்தநாளையும், திருமணத்தேதியையும் மறக்காது பரிசுப்பொருட்கள் வாங்கித்தர வேண்டியதில்லை. மனதால் புரிந்துகொள்ள வேண்டிய நெருக்கம் இது.
தொடருவோம்