மார்கழி மணாளன் (11)
திருக்கண்ணன்மங்கை = அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள்
பாற்கடல் பூத்தவள் அன்புடை அலைமகள்
பாம்பணை படுத்தவன் பாதங்கள் நாடியே
பற்றினில் மற்றவை மறந்தே நோன்பிட
பற்றினாய் கைகளை பரமனே பரந்தாமா !
வெட்கிடும் கன்னியை விழியினில் ஏந்தியே
துடித்திடும் இதயத்தில் துணையாய் வைத்தாய்
அருளிடும் நேரத்தில் அன்னையின் கருணையும்
அளவின்றிக் கிடைத்திட அருளிய அச்சுதா !
மலரினில் மதுவினைத் தேடிடும் வண்டென
மரணத்தைத் தாண்டிய அமரர்கள் வந்தனர்
மங்கலம் தந்திடும் பாதங்கள் மையலில்
மனதினை இழந்தே மகிழ்ந்தனர் மாதவா !
மங்கையை மனதினில் நிறுத்திய மன்னனே
மலையினைக் கைகளில் ஏந்திய கண்ணனே
மானத்தைக் காத்திடத் துகிலினைத் தந்தாய்
மாடங்கள் கொடுத்திட அவலினைப் பெற்றாய் !
கர்ணனின் வல்லமை கைகொண்ட காலனே
வருணனும் பிரம்மனும் வந்தனர் வேண்டியே !
மறுமையம் இம்மையும் கைகளில் ஏந்தியே
வறுமையில் வந்தேன் வளவனைத் தேடியே !
ஒட்டிய பருக்கையைத் தட்டியே எடுத்தவள்
சட்டியில் அமுதினை அளவின்றித் தந்தாய்
பட்டியல் போடவோ பரமனே உன்னருள்
நெற்றியில் நினைவாய் நித்தமும் வந்தருள் !