மார்கழி மணாளன் 12
திருக்கண்டியூர்-அருள்மிகு ஹரசாப விமோசனப் பெருமாள்
அஞ்சுதலை பிரம்மனின் அடிபணிந்த உமையுமே
வஞ்சகமோ இதுவென்று நெஞ்சமதில் துவண்டு
அஞ்சுதலும் நீங்கிட அஞ்சிலொன்றைக் கேட்டிட
நஞ்சுண்ட நாயகனும் நான்முகனைப் படைத்தான் !
கொன்ற பாவம் கொண்டசாபம் கூடிநிற்க
கொய்த தலை கையேந்திக் கூத்தனுமே
செய்தவினை சீரடையக் கையேந்தி நின்றான்
சிதம்பரத்துச் சீமான் பிச்சைக்கேட்ட பெரியோன் !
கைநின்ற கபாலத்தை விலக்கிடவே கயிலனும்
வேண்டி நின்றான் வேங்கடனை வினைதீர்க்க
அஞ்சுதலை நாகத்தை அணிகொண்ட அரங்கனும்
நஞ்சுண்ட நாதனைக் காத்திடவே நலமுற்றான் .
மண்ணுக்குச் சாபம் மலரில்லா நிலமன்றோ
மலருக்குச் சாபம் மணமில்லா வாழ்வன்றோ
மலராத வாழ்வே மாந்தருக்குச் சாபமன்றோ
மந்திரம் ஏதுமின்றி மாற்றுவதே நீயென்றோ ?
சாபங்களை விலக்கிடும் சாந்தனே சடகோபா
பாவங்கள் அளவின்றிப் பயிராகும் காலத்தில்
காலங்கள் கலியினில் கடைபோடும் நேரத்தில்
காத்திட வருவாயோ ! கண்ணனே! கருணாமூர்த்தி !
வேதனைகள் வென்றிடவே வேங்கடவா என்றிடுவேன்
சிந்தனைகள் ஒன்றாக்கி சீதரனே என்றழைப்பேன்
சோதனைகள் வரும்போது சொந்தமென இருப்பவனே
நர்த்தனமே நித்தியமும் நினைவுனதே நாரணனே !