மார்கழி மணாளன் 18
க. பாலசுப்பிரமணியன்
திருச்செம்பொன் செய் கோயில் -அருள்மிகு ஹேமரங்கப் பெருமாள் திருக்கோவில்
கயிலையைச் சுமந்து Sவரம்பெற்ற இராவணனை
கைவீணை கலங்கிடவே காம்போதி இசைத்தவனை
கையேந்திக் கபடத்தால் கற்புடையாள் கவர்ந்தவனை
கைகொண்ட வில்லாலே களம்கொண்ட அருளாளா !
அறமிழந்த அரசனையும் மனம்திருந்த அழைத்தவனே
அருளிழந்த அரக்கனையே இலக்காக்கி கொன்றபாவம்
அகம்விட்டு புறம்விட்டு நிலம்விட்டுச் சென்றிடவே
அகம்விட்ட முனிவருக்கே மனமுவந்து பொன்தந்தாய் !
செம்பொன் பசுவொன்றைத் தானமாய் பெற்றவனும்
வந்தவினை அகன்றிடவே பெற்றசெல்வம் பெருகிடவே
செங்கமல நாயகியின் சிந்தைநிறைச் சிங்காரனைச்
செம்பொன் சிலையாக்கிக் கோயில் கொண்டான் !
மலையான துன்பம் மடைநீராய் வந்தாலும்
கலையாத நினைவோடு கணநேரம் நினைத்தாலே
நிலையாது போகும் நின்னருளாலே நீர்வண்ணா !
சிலையாக இருந்தாலும் சிந்தையில் நிறைந்தவனே !
பொன்னான மேனியிலே பொன்னாடை படைத்தாலும்
பொன்னான மனமறியாப் பொல்லாத நெஞ்சங்கள்
புண்ணாகித் துடித்தாலும் நல்லோரின் நலம்நாடும்
நாரணனே ! நின்னடிகள் நினைத்தாலே பொன்னாமே !
பலியாடு போன்றென்னை கலிதீர்க்க வளர்த்தாயோ
நிலையாத செல்வத்தின் நிழலாகப் படைத்தாயோ
மதியென்றும் புதிர்போட்டுச் சதிராட, பரந்தாமா !
கதியென்று வந்தேனே கரைசேர அருள்வாயோ?