மார்கழி மணாளன் 22
திரு மணிமாடக்கோயில்
அருள்மிகு பத்ரி நாராயணப் பெருமாள் திருக்கோவில்
மணிமாடங்கள் ஆயிரம் இருந்தாலும் மாதவனே
மனத்துள்ளே நீயிருக்க மணிமாடக் கோயில்தானே
அணியின்றி அரங்கத்தில் அயர்ந்தாலும் அழகனே
அணியே ! வான்தோட்டக் கனியே ! வந்தருள்வாய் !
இமயத்தில் இருந்தாலும் இதயத்தைத் தொடுவாய்
இணையேது உனக்கென்றும் இருள்நீக்கும் திருவே
பனிமூடும் வாழ்க்கைக்குப் பகலவனே பத்ரிவாசா
பணிகின்றேன் பாதங்கள் பரிவுடனே வந்திடுவாய் !
பணியின்றி பாற்கடலில் படுத்தாலும் பரந்தாமா
புவியாளும் திறனெல்லாம் புன்னகையில் வைத்தாயே
பிணிதீர்க்கும் மருந்தென்று யாரறிந்தார் உன்னுள்ளம்
விழிநிறையும் எழிலன்றோ திருமகளுறை திருமாலே !
உறியடித்த பிள்ளையிடம் உளம்தொலைத்த கோபியர்கள்
உரிமையுடன் விளையாட உன்னெழிலைத் தேடிவந்தார்
உன்னுருவம் எத்தனையோ உலகங்கள் வியந்ததய்யா
உலகெல்லாம் ஓருருவம் உன்னுருவமென அறிந்ததய்யா !
கண்ணிமைகள் மூடியவர் கற்பனையில் வடித்துன்னை
கண்ணனென்றும் கருநீலமெனக் காதலால் சொன்னார்
கண்ணொளியின் கரைகடந்த வண்ணமன்றோ கண்ணா
மின்னொளியும் வெட்கிவிடும் பகல்வண்ணப் பரந்தாமா !
கனியமுதும் கறியமுதும் சாத்தமுதும் படைத்தாலும்
சொல்லமுதைக் கேட்டதுமே செவிசாய்க்கும் சுந்தரனே
விண்ணமுது உண்டவர்கள் வந்தாலும் வரிசையிலே
கண்ணமுது கண்டபின்னே வேறமுது வேண்டுவரோ ?