மார்கழி மணாளன் 23
திருவைகுண்ட விண்ணகரம் – அருள்மிகு தாமரைக்கண்ணுடையபிரான் கோயில்
வேடங்கள் கலைந்ததும் வேண்டிட ஒன்றில்லை
வேதவன் வாழ்ந்திடும் வைகுந்தமே வேறில்லை
வேதங்கள் வாதங்கள் வழியினில் துணையில்லை
பேதங்கள் இல்லையே வைகுந்தன் பார்வையில்!
இழிவென்ற அழிவென்ற நினைப்பெல்லாம் நீங்கிட
விதியென்ற மதியென்ற கணக்கெல்லாம் பொய்த்திட
கதியென்றே அரங்கனின் பாதங்கள் கிடக்கையிலே
பிடியென்று அறிந்திடும் அறிவும்தான் வந்திடுமோ ?
அரவத்தின் கண்கள் அச்சுறுத்தி நிற்க்கையில்
கருமத்தின் கணக்குகள் கவலைகள் தருகையில்
தருமங்கள் முன்வந்து தன்வழக்கு உரைக்கையில்
உருவமாய் அருவமாய் வைகுந்தா வாழ்த்திடு !
பாயிரங்கள் ஒன்றேனும் உளமுருகிப் பாடாமல்
பேய்மானமாய் அலைபாய்ந்து ஆடியே வந்தாலும்
மாயவனே ஏற்றிடுவாய் மனமுவந்து மலரடியில்
தாயவள் சேயினையே துறந்திட நினைப்பதோ?
வாயில்கள் பலநூறும் வலம்வந்தேன் வழிதேடி
கோயில்கள் எங்கெங்கோ கொண்ட பரந்தாமா !
மாதத்தில் ஒன்றான மார்கழியில் மங்கலமாய்
சொர்கத்தின் வாசல்வழி தந்தாயே சுந்தரனே !
பொன்னங்கி முத்தங்கி பூவங்கி போட்டாலும்
தானியங்கி தருமத்தை உள்ளங்கி போட்டவனே
புகழங்கி போட்டோரின் பொய்யங்கி விலக்கியே
மெய்யங்கி காட்டுவாய் சொல்லங்கி உனக்கெதற்கு?