பவள சங்கரி

சங்கே முழங்கு..
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

திங்களொடு செழும்பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல் கடல் வற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூது சங்கே
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்
கின்றதமிழ் எங்கள் மூச்சாம்

பாவேந்தர் பாரதிதாசன்

a1
தமிழர்களின் பண்பாடு மட்டும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளில் மிக முக்கியமானது ’ஏறுதழுவல்’ என்ற சல்லிக்கட்டு வீர விளையாட்டு ஆகும். வீரர்கள் காளையை அணைத்து அடக்கும் இந்த வீர விளையாட்டு தமிழக இளைஞர்களின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் என்ற காளையை அடக்கும் வீர விளையாட்டுகள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதாவது வீரர்கள் கோபமான காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. கி.மு. 2000 ஆண்டுகளிலேயே ஏறுதழுவல் எனும் விளையாட்டு வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது. சங்க இலக்கியமான கலித்தொகையில்,

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்

என்றுரைப்பதை அறியலாம்.

மஞ்சு விரட்டு விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினை சல்லி என்று குறிப்பிடுவார்கள். அதுமட்டுமன்றி 50 ஆண்டுகளுக்கு முன்பு ‘சல்லிக் காசு’ என்ற நாணயங்களை ஒரு துணியில் வைத்து, அதை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் வழமை இருந்தது. வெற்றி பெறும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இதனாலேயே ‘சல்லிக்கட்டு’ என்ற பெயரும் வந்தது.

இசுபெயின், போர்ச்சுகல், மெக்சிகோ, சப்பான் போன்ற நாடுகளில் காளைப்போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெற்றாலும், ‘ஏறுதழுவல்’ என்ற தமிழ்நாட்டின் சல்லிக்கட்டு கொல்லாமை எனும் அடிப்படையில் நடப்பதே நிதர்சனம்.

a2

a3
இந்திய விலங்கு நல வாரியம், பெடா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம், விலங்குகள் நல ஆர்வலர்கள் போன்ற அமைப்புகளும் ஏறுதழுவல் என்ற இந்த வீர விளையாட்டு விலங்குகளை துன்புறுத்துவதாகக் கருதியும், உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் சில ஆண்டுகளாக இதைத் தடை செய்யக் கோரி நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடனேயே சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. ஆயினும் இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர். இன்று ஈரோட்டில் பெருவாரியான இளைஞர்கள் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக மிக அமைதியான முறையில் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.

IMG_20170113_113115144 (1)

அனைத்து இளம் தமிழர்களும் கட்சி பாகுபாடு, மத பாகுபாடு, இன பாகுபடு என ஏதுமின்றி, பல்லாயிரம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுகூடி கட்டுக்கோப்பாக மாபெரும் பேரணியை நடத்திக்காட்டியுள்ளனர். இந்நிகழ்வுகள் இந்திப் போராட்டத்தின்போது தமிழனைத் தட்டி எழுப்பியது போன்று நம் தமிழரின் பண்பாட்டைக் காப்பதற்காக ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் முன் நின்றதே தமிழன் என்பவன் தலை நிமிர்ந்து நிற்பவன் என்பதன் எடுத்துக்காட்டாகும். இதையும் மீறி கண்ணில் நீரை வரவழைக்கும் சில நிகழ்வுகளாக, உடல் ஊனமுற்ற சகோதரர்களும் இந்த நிகழ்வில் தமிழனாக நாங்களும் இணையும் கடமை உண்டு என முன்வந்ததுதான். தமிழன் ஒன்றுகூடி விட்டான். இனி தமிழனுக்கு எங்கும் இடையூறோ, இன்னல்களோ இருந்தால் நாங்கள் இருக்கிறோம் தோள்கொடுக்க, துயர் துடைக்க என்று தமிழினம் எழுத்து நின்றுள்ளது. தமிழகத்திற்கு வழிகாட்டும் வகையில் ஈரோட்டிலிருந்து ஒரு பொறி கிளம்பியுள்ளது. பல்லாயிரம் இளைஞர்கள் பங்குகொண்ட இரு சக்கர ஊர்வலமும், அதற்கு முத்தாய்ப்பாக காங்கேயம் காளைகளை வீரர்கள் அடக்குவதுபோல வண்டிகளில் காளைகளையும், வீரர்களையும் முன்னிறுத்தி ஊர்வலத்தைத் துவங்கியிருப்பதும் ஊர்வலத்திற்கு முன்னே மற்றொரு வீர விளையாட்டான சிலம்பாட்டம் விளையாடி வந்ததும் வெற்றியின் துவக்கமாக மிளிர்கிறது. வண்டியின் தொடக்கம் நிறைவிடத்தை அடைந்தபோது அதன் பின்பகுதி தொடங்கிய இடத்தில் இருந்ததென்றால், (கிட்டத்தட்ட 5 கி.மீ. தொலைவு) அத்துனை ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருந்ததையும், நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றதையும் பார்த்தபோது அதன் அமைப்பாளர்களையும், காவல் துறையினரையும் பாராட்டப்படவேண்டியவர்கள் என்று தோன்றியது. தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்களும் இப்பேரணியை வாழ்த்தி வரவேற்றுள்ளார்.

IMG_20170113_112729479

IMG_20170113_112813672
இந்த நிகழ்வில் தமிழனின் பண்பாட்டையும், தமிழனின் பாரம்பரியப் பெருமைகளையும் பறை சாற்றக்கூடிய, பவள சங்கரியின் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது மணிமகுடம் வைத்ததாக அமைந்தது. வரலாற்று ஆய்வாளர் திரு கனியன் பாலன் மற்றும் திரண்டிருந்த இளைஞர் அணியின் சார்பாக திரு கண. குறிஞ்சி , மக்கள் சிவில் உரிமைக் கழகம் மாநிலத் தலைவர் (பி.யூ.சி.எல்) பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் பண்பாட்டை மீட்கும் வகையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினத்தில் அடுத்த நிகழ்வும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். மாபெரும் எழுச்சி மிக்க இந்நிகழ்வை மிகக்கட்டுப்பாட்டுடன், அமைதியாக, ஒழுக்க முறையைக் கடைபிடித்தவாறு தமிழன் வீரத்தில் மட்டும் சிறந்தவனில்லை, விவேகத்திலும், கட்டுப்பாட்டிலும் அதைவிடச் சிறந்தவன் என்பதை நிரூபித்துள்ளதும் பாராட்டிற்குரியது.

IMG_20170113_112122804

“400 வருசத்திற்கு முன்னாடி வாஸ்கோடகாமா அப்படீங்கற தொப்பிக்காரன், கோழிக்கோட்டுல இறங்கி நம்ம தமிழ் நாட்டைக் கண்டுபிடிச்சான் அப்படின்னு சொல்றாங்க.. அப்ப அமெரிக்காக்காரனுக்கு 400 வருசம்தான் சரித்திரம். ஆனால் நம்ம பாட்டன் , முப்பாட்டன் எல்லாம் 1000 வருசத்துக்கு முன்னாடியே தாஞ்சாவூரு கோயில்ல ராசராசசோழன் காலத்துல கட்டுன கோயில்ல இருக்கற கோபுரத்துல தொப்பிக்காரனோட சிலையை வச்சிப்பிட்டாங்க. அப்ப 1000 வருசத்துக்கு முன்னாடியே நாம இங்கிருந்து கடல் கடந்துபோய் அவனை கண்டுகிட்டு வந்துட்டோம்னுதானே அர்த்தம். எதுக்கெடு நாம அமெரிக்காக்காரன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனா இன்னைக்கு அவன் மூஞ்சுல கொரியாக்காரன் ராக்கெட்டு உட்டுட்டான். இந்த கொரியாக்காரனுகளுக்கு நாகரீகமும், வீரமும், திங்கற இட்லி தோசையும், கொழக்கட்டையும், அம்மா, அப்பான்னு கூப்பிடறதுக்கும் சொல்லிக்கொடுத்ததும் மறத்தமிழச்சியான நம்ம கொங்கு நாட்டுக்காரிதான்னு நம்ம ஈரோட்டுக்கார அக்கா பவள சங்கரி இத ஆதாரப்பூர்வமா நிரூபிச்சிருக்காங்க. இந்த நூலை வெளியிடுறதுல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படலாம்” என்று நெகிழ்ச்சி பொங்க இதன் அமைப்பாளர் திரு பார்த்திபன் மற்றும் பாபா தொலைக்காட்சி உரிமையாளர் திரு சுரேஷ் அவர்களும் உணர்வு பொங்கப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *