ஐயப்பன் திருப் புகழ்….!
அடியேன் முன்பு வரைந்து முன்பு எழுதிய பாடல்கள்….!
ஐயப்பன் திருப் புகழ்….!
———————————————–
“வீறுபுலி வாகனமு லாவுமுகம் ஒன்று
வாவருடன் தோழமைகு லாவுமுகம் ஒன்று
மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
கூறும்சர ணாகதியை கேளுமுகம் ஒன்று
கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….கிரேசி மோகன்…..
ஐயப்பன் வெண்பாக்கள்
——————————————-
ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
உண்மைக்குள் உய்ய உதவு….(1)
அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
அரனில் அரியை அறிய புரிவாய்
சரணம் சபரி மலைக்கு….(2)
சு.ரவி ஓவியம் பார்த்து
———————————-
ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்ததில்
ஞானமாம் நம்பிக்கை நட்சத்ரம் -கானிலே
உத்திர மானதன் உற்சவ கோலத்தின்
சித்திரம் கண்டேன் சபாஷ்….(3)
சந்தன வாசன் சபரி விலாசனை
வந்தனம் கூறி வழிபட -பந்தள
ராச குமாரன் ரசனை மிகுந்தவன்
ஆசுகவி ஆக்குவான் ஆம்….(4)
வாஸ்த்தவமே, வன்புலி வாகனனே நீலிமலை
ஆஸ்த்தானம் ஆளும் அரிஹர -சாஸ்தாவே
வந்துன்னை ஒவ்வோர் வருடமும் காணத்தா
பந்தளனே தேக பலம்….(5)
பங்குனி உத்திரத்தன்று எழுதியது
———————————————-
பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
ஊன்றிடும் கோலுன் உறவு….(6)
பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
தொல்லையாம் தேங்காய் தெறித்து….(7)
மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
சபரிகிரி வாசன் ஜனிப்பு….(8)
அய்யனை அன்பர்தம் நெய்யனை அல்லல்தீர்
கையனை மாலரன் பையனை -மெய்யனை
சாமி சரணம் சதாஸ்மரணம் செய்வோரை
காமிய கர்மமணு கா….(9)
அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
நேசா வணக்கம் நினக்கு….(10)
வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
பண்ணாத பாவமும் போச்சு….(11)
பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
காமக் குரோத உலோபமத மாச்சரியம்
நாமத் திருநீறோ னே….(12)