நிர்மலா ராகவன்

இடக்கைப் பழக்கம்
தவறான போதனை?

நலம்-2-1-1-1-1
பண்டைய ரோமாபுரி ஆட்சி காலத்திலிருந்தே இவ்வுலகம் வலது கைப்பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயங்குகிறது.

நூற்றில் பத்துபேருக்கும் குறைவானவர்கள்தாம் இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள். இவர்களால் உலகை எதிர்க்க முடியுமா? ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை.

`நாம் பிறருக்கு எதைக் கொடுக்கும்போதும், அவர்களிடமிருந்து வாங்கும்போதும், வலது கையைத்தான் பயன்படுத்த வேண்டும்,’ என்று சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது. ஆசிர்வதிக்கும்போதும் வலது கைதான். இதையெல்லாம் மத சம்பந்தமானதாக ஆக்கிவிட்டார்கள் — இதனால் விளையும் குழப்பங்களைப் புரிந்துகொள்ளாது.

கதை :

`வலது கைதான் உயர்த்தி!’ என்று கதாகாலட்சேபங்களில்கூட நான் அடிக்கடி கேட்டதால், இடது கையை உபயோகிப்பது என்னமோ பாபம் என்ற மனப்பான்மை சிறுவயதிலேயே தோன்றிவிட்டது. அதை உபயோகிப்பதைக் கூடியவரை தவிர்த்தேன். நாளடைவில், ஒரு கோப்பையைக்கூட இடது கையால் தூக்க முடியவில்லை — உபயோகிக்கப்படாததால், அவ்வளவுதூரம் வலுவிழந்திருந்தது.
நாற்பது வயதுக்குமேல் சுயமாக நீச்சல் கற்க ஆரம்பித்தபோது, `உடல் ஒரு பக்கமாக சாய்கிறதே!’ என்று ஒருவர் விமர்சிக்க, மிகவும் பிரயாசைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இடது கரத்தை நீட்டப் பழக்கினேன். ஒரே வலி.

இயற்கை நமக்கு இரண்டு கரங்கள் கொடுத்திருப்பது ஒன்றை மட்டும் உபயோகிக்க இல்லை என்று புரிந்தது.

கதை

என் மகள் இடது கைப்பழக்கம் இயற்கையாக, கருவிலேயே, அமையப் பெற்றவள். அவளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எங்கள் வீட்டில், `சாமிக்குப் பூ போடு!’ என்று நான் ஓர் அபிநயம் கற்றுக்கொடுக்க, `இடது கையால போடறா!’ என்று யாரோ வியந்தபோதுதான் நானே அதை உணர்ந்தேன்.

பாலர் பள்ளிக்கு அனுப்பியபோது, அங்கிருந்த ஆசிரியை அவளை ஒரேயடியாக மிரட்டி, வலது கையால் எழுதச் சொல்லியிருக்கிறார். அது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் சுபாவத்தின்படி, அவளுக்கும் தன் குழப்பத்தை, அவதியை, வெளியில் சொல்லத் தெரியவில்லை.

முதல் வகுப்பு படிக்கும்போது, எதையுமே குறித்த காலத்திற்குள் எழுதத் தெரியவில்லை என்று பள்ளியிலிருந்து வீட்டுக்குத் தகவல் வந்தது. நெடுநேரம் விசாரித்தபோது, `என்னால எழுத முடியலே!’ என்று கதறினாள்.

அவளது இடக்கையைத் தூக்கி, `இந்தக் கை முடியுமா? உனக்கு எப்படி சௌகரியமாக இருக்கிறதோ, அப்படி எழுது!’ என்று நானும் என் கணவரும் அனுசரணையுடன் கூற, அவளுடைய அழுகை பலத்தது.
`இடது கையால எழுதறது ஒண்ணும் தப்பில்லே,’ என்று ஆதரவளித்தேன். `டீச்சர் ஸ்டுபிட்!’
வருட இறுதியில் வகுப்பில் முதல் மாணவியாக வந்தாள்.

இப்போது, சாப்பிடுவதைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களும் இடது கையால்தான் செய்கிறாள். துரிதமாகச் செய்ய முடிகிறது.

எதிர்விளைவுகள்

ஒரு பூட்டைத் திறப்பதோ, மூடியிருக்கும் பாட்டிலைத் திறப்பதோ இடது கையால் முயலுவது முதலில் கடினமாக இருக்கும். கத்தரிக்கோலை உபயோகிப்பதுதான் இம்மாதிரியானவர்களுக்கு மிகக் கடினமானதாம்.

அப்போதெல்லாம், `என்னால் ஏன் எதுவும் எளிதாகச் செய்ய முடியவில்லை?’ என்று வருத்தமோ அல்லது ஆத்திரமோ எழும். தான் ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற அவமானமும், குற்ற உணர்வும்கூட உண்டாகலாம்.

`முடியாததை ஏற்க வேண்டியதுதான்!’ என்று சிலர் மிகுந்த பொறுமைசாலிகளாக ஆகிறார்கள். வேறு சிலர், `எல்லாமே நமக்கு எதிராக இருக்கிறதே!’ என்று எளிதாக ஆத்திரத்துக்கு உள்ளாகிறார்கள்.

கதை

மூன்று வயதிலேயே பாபு என்ற சிறுவன் எல்லாவற்றிற்கும் இடது கையை நாட, அவனுடைய தாய் மாமன் ஒரு கனமான பூட்சை அணிந்து, அக்கையை மிதிப்பார், `இது என்ன கெட்ட பழக்கம்! இனிமே இதை உபயோகிப்பாயா?’ என்று மிரட்டியபடி.

`நான் செய்வது எல்லாமே ஏன் தவறாகப் போகிறது?’ என்ற குழப்பம் அக்குழந்தைக்கு ஏற்பட்டது. அளவற்ற அச்சமும், ஆத்திரமும் கொண்டு வளர்ந்தான். வலது கையால் எழுதும்போது தெளிவாக இருக்கவில்லை. எழுதுவதே பிடிக்காமல் போயிற்று.

வளர்ந்தபின், யாராவது அவனிடம் ஏதாவது தப்பு கண்டுபிடித்து விட்டால் ருத்ரத் தாண்டவம்தான்.
தான் சிறுவயதில் பட்ட துயரத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள, பாபுவிற்குச் சற்று தெளிவு உண்டாயிற்று. தான் செய்வது எல்லாமே தவறில்லை, அறியாக் குழந்தையிடம் வன்முறை பிரயோகித்த மாமாதான் உண்மையாகவே தவறிழைத்திருக்கிறார் என்று புரிந்தது.

எல்லாம் நன்மைக்கே

சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டான் பாபு. அநாவசியமான குற்ற உணர்வும், ஆத்திரமும் சற்று அடங்கின. டென்னிஸ், குத்துச்சண்டை எல்லாம் விரும்பிப் பயின்றபோது, வலது கைப்பழக்கம் கொண்ட எதிராளியை வீழ்த்துவது எளிதாக இருந்தது. `என்னால் சில காரியங்கள் இவர்களைவிடச் சிறப்பாகச் செய்யமுடியும்!’ என்ற பெருமிதம் உண்டாயிற்று.

இடது கைப்பழக்கம் ஒரு விதத்தில் பெரிய நன்மை. அக்கரம் ஒன்றால் மட்டும் 3,400 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய முடியும். அதுவே, வலக்கையை மட்டும் பயன்படுத்தினால், நானூற்று ஐம்பது வார்த்தைகளை மட்டுமே தட்டச்சு செய்ய இயலுமாம்.

தாம் பார்ப்பது, கேட்பது எல்லாவற்றையும் வித்தியாசமான முறையில் அலசுவார்கள் இவர்கள். அதனால், பிறருக்கு இவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. சதுரங்க விளையாட்டில் இது மிகுந்த நன்மையை அளிக்கும்.

கலைநயம்

இடது கரப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் வலப்புறம் நன்கு செயல்படுவதால், அவர்கள் கலைநயம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். படிப்பது, கேட்பது எல்லாவற்றையும் காட்சியாகப் பார்க்கும் திறன் அமைந்திருப்பதால், சித்திரம் வரைவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். உதாரணம்: லியானார்டோ டாவின்சி, மைக்கலேஞ்சலோ.

(என் மகள் வசதி குறைந்த மாணவிகளுக்காக நடத்தும் பரதநாட்டிய வகுப்பில் பெரும்பாலான மாணவிகள் இடக்கைப் பழக்கம் அமைந்தவர்கள். பல சமூக சேவகிகள் இவர்களுக்கு தமிழோ, இசையோ கற்றுக்கொடுக்க முன்வந்து, `இவர்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்கள்!’ என்று பின்வாங்கி விட்டனராம் — அப்பெண்களில் ஒருத்தி தொலைகாட்சியில் தெரிவித்த சமாசாரம். `இந்த ஒரு டீச்சர்தான் எங்களைக் கைவிடவில்லை,’ என்று நன்றியுடன் குறிப்பிட்டாள்).

ஜீனியஸ்!

நாளடைவில், இயற்கையாக அமைந்த வலது பக்க மூளைத்திறனுடன், இவர்களும் 70% இடது பக்க மூளையைப் பயன்படுத்தப் பழகிவிடுகிறார்கள். இதனால் அறிவுக்கூர்மை மிகுந்து விடுகிறது.

`இருபது வயதுவரைக்கும் திண்டாட்டமாக இருக்கும். அதன்பின், வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக வழக்கத்தைப் புரிந்துகொண்டுவிடுகிறோம். அதனால், எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ள முடிகிறது,’ என்கிறார் ஒருவர்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *