படக்கவிதைப் போட்டி 97-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. விஷ்ணுராம் எடுத்திருக்கும் இந்த வித்தியாசமான புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி உரித்தாகுக.
கானல்நீர் போன்ற வாழ்க்கையில் காணும் யாவுமே கனவாய், கதையாய் மாறிப்போகின்றன காலவோட்டத்தில்!
நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை விட்டொழித்தால்தான் வாழ்வின் மெய்ப்பொருள் விளங்கும்.
பல்வேறு சிந்தனைகளுக்குக் களமமைக்கும் இப்படத்திற்கு நம் கவிஞர்கள் தம் பாக்களில் என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்று அறிந்துவர ஆவல்!
***
புகைப்படமெடுத்த நண்பரைப் பாராட்டும் கவிஞர் திரு. இப்னு ஹம்துன், ”தலைகீழான இப்படமே என் நேர்ப்படம் என்று நவின்றுவிடாதே!” என்று அவரைப் பகடிசெய்யவும் தவறவில்லை.
அதில் நாங்கள் தெளிவாக இல்லை
மேலும்
முழுவதும் தலைகீழாயிருக்கிறது.
படம் பிடிக்கும் உன் திறமையைப்
பெரிதும் விதந்தோதுபவனே நான்
இன்னும் பல கலைப்படங்கள்
உன்பெயர் சொல்ல வாழ்த்துவேன்
என்றாலும் என் நண்ப
தலைகீழான
இப்படமே
என் நேர்ப்படம் என்று
சொல்லிவிடாதே யாரிடமும்.
***
இயற்கையின் ஊழித் தாண்டவத்தால் பாழான ஊர்கண்டு மக்கள் சிந்திய கண்ணீரே சந்துகளில் வெள்ளமெனத் தேங்கியிருக்கிறது என்று தன் கவிதையில் அவலச்சுவையைப் பொதிந்து தந்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
ஊழித் தாண்டவம்!
ஆழிப்பேரலை அழித்தது ஓராண்டு !
வெள்ளம் வந்து அழித்தது ஓராண்டு!
புயல் வந்து அழித்தது ஓராண்டு!
உயிர்த்தெழுந்து வந்தோம் ஒன்றினைந்து!
வந்தாரை வாழ வைப்பது தமிழர் பண்பாடு!
இயற்கை தந்த இன்னலைக் கூட
தாங்கிக் கொண்டோம் !
பொறுமையோடு!
இடரில் தெரிந்தது எங்களின்
ஒருமைப்பாடு!
ஒற்றுமை உணர்வு கலந்தது
எங்கள் மூச்சோடு !
இருந்தாலும் தாங்க இயலவில்லை
இயற்கை படுத்தும் பாடு!
பட்ட காலிலே படும் என்பது
போகட்டும் நேற்றோடு !
ஊழித் தாண்டவம் ஆடிய புயலே !
உன் செயலின் விளைவைப் பார்!
நாங்கள் அழுத கண்ணீர்
தேங்கிக் கிடக்கும் சாலையைப் பார்!
பூமித் தாயின் வெடித்துச்சிதறிய வேதனை பார்!
வண்ணக் கனவோடு வாழ்ந்த
வாழ்க்கை , இன்று கறுமையாய்
போன துயரைப் பார்!
***
தலைகீழ்ப் பாடங்கள் வாழ்க்கைக்கு உதவாது. தன்னைத் திருத்த முயலாத மனிதன் பிறரைத் திருத்துவதென்பதும் இயலாது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
அசலா…
நிழல்
நிஜமாவதில்லை என்றும்..
தலைகீழ் பாடங்கள்
தருவதில்லை கல்வித் தரத்தை..
கானல்நீரைக்
கண்ட கண்களால்
கொஞ்சமும் தீராது தாகம்..
தண்ணிபோட்டுவிட்டு
தலைகீழாய் நிற்பவனுக்குத்
தெரியாது உலகம் நேராய்..
இப்படித்தான்
இப்போது மனிதன்-
தன்னிடம் குறையுடன்
திருத்தப்போகிறானாம் உலகை,
திருந்துவானா…!
***
இது ஆழிப்பேரலையின் கோரதாண்டவமோ? அல்லது…வாகனங்கள் கக்கிய கரும்புகைப் படலமோ? அல்லது…வயல்வெளிகள் வறண்ட சாலையான மாயமோ? அல்லது கொழுத்த உடலிளைக்க இருவர் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியோ? என்று வெவ்வேறு கோணங்களில் இந்தப் புகைப்படத்தை மாற்றியோசித்துக் கவி புனைந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.
அலைதானென நினைத்தேன்.. ஐயோகொடூரமாகக் தாக்கவந்த..
ஆழிப்பேரலை மீண்டும்வந்து நம்நெஞ்சையாட்டி வைக்குமே?..
ஆழியுன் பேரலையால் நீஇட்ட பேரிடரால்..
பாவியென் நினைவுக்கு புதைந்து மண்ணாகிவிட்ட
பிணங்களல்லவா ஞாபகம்வருகிறது!..
மனித வாழ்வு முடியும்வரை இனிமுற்றிலுமாகயுனை
மறக்க முயற்சி செய்வோம்..நிச்சயமாக நீயில்லையென.
மாற்றியோசிப்போம்…
மனமூன்றிப் படத்தைப் பலமுறை பார்க்கும்போது
மனத்தினுள் ஒளிந்திருக்கும் மாயம்விலக வழியுண்டு!
உற்றுப்பார்த்தால் சாலைமுழுதும் கரும்புகைபோலவும் தெரிகிறதே!..
ஊர்ந்து செல்லும் வேகவாகனங்களின் வயிற்றெரிச்சல் புகையாக வெளியேறியதா?..
இல்லை! இல்லை! அதுவுமில்லை..
தயிர்போல் நிலத்தை யுழுதுபயிர்செய்த இடம்தானின்று..
தார்ச்சாலையானதோ!, மழை பொய்த்தவாய்ப்பால்?
வறண்ட சாலையிலோடும் வற்றியநீரை
வருத்தமுடன் பார்ப்பதுயார் கார்மேகம்தானே!
இல்லை! இல்லை!
இன்னுமொருமுறை மாற்றியோசி..
நீலத்தண்ணீருக்குள் முகமுற்றுப் பார்க்கையில்..
நிஜபிம்பம் நிழலாய்த் தெரியுது!
தலைவணங்கித் தரைவழியே பார்த்தால்தான்…
தலையிரண்டு கொழுத்தகாலுடன் நடப்பது தெரியும்…
அதிகஎடை ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல…
அனுதினமும் மருத்துவர் சொல்லும் அறிவுரையேற்று..
பெருத்த உடல்மெலிதாக இளைப்பதற்கு..உடல்..
பெருத்த இருநபர் இறுமாப்பாய் நடப்பதுபோலும் தெரிகிறது!
ஊளைச்சதையொழிய ஒருமணிநேரம்..தொடர்ந்த
காலை(ளை)நடை சிறந்ததென உரைக்கிறார்போலும்.
பலநாள் நடைபயிலுதல் யுடல்நலத்துக் குகந்ததெனத்தெரிந்தும்.
ஒருநாள் நடைபயின்ற தைமறுநாள் மறக்கும் நபராகயிருக்கலாமோ?..
கூட்டத்தைக் கண்டால் ஓட்டமெடுக்கும் எண்ணத்தில்..
கூட்டுப்பயிற்சியில் இருவருக்கும் நம்பிக்கையில்லையோ?.இது
நடைப்பயிற்சியா? அல்லது பேச்சுப்பயிற்சியா?..விடைகாணஅந்த
நண்பர்களோடு நடந்தால் தானுண்மை தெரியும்?
நடைபயில உகந்தநேரம் பசுமையான காலைதானென..
நயமாகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கோம்!
காலையெழும் பொழுதின்முன்னே துயிலெழுந்துநாம்..
காலாற நடந்தாலே நோயின்றி வாழலாம் வாழ்நாளெலாம்!
குருதியில் தீயகொழுப்பு திட்டமாகக் கரைய..
உறுதியுடன் நடக்கவேண்டுமொரு மணிநேரமாவது!
கால்கை விரித்து வேகமாக நடந்தால்நம்
இதயமும் விசாலமாக வியங்கும்!
நலமுடன்வாழ அன்றாடம் நடைபயிலவேணும்!
உயர்வுடன்வாழ உற்றாரை மதித்து நடத்தல்வேணும்!
பூங்காவில் நடப்பதிலேயொரு மனமகிழ்ச்சி!
புல்வெளியில் நடப்பதிலேயொரு சுகம்!
கால்கொதிக்க கடும்வெயிலில் நடப்பதைவிட..
உள்ளங்கால் குளிரஈரஇதமான நடையில் தானதிகயின்பம்.
***
சிந்தனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டிருக்கும் கவி வலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்ந்தெடுத்திருப்பது அடுத்து வருகிறது!
நேரே நிமிர்த்திப் பார்!
நிழற் படத்தில் தெரிவது
நெஞ்சை அறுப்பது!
இருட்டடித்த பாலைவனம்!
நீரோட்டம் போல்
கானல் நீர்!
ஏமாற்றும் தரை வெளிச்சம்!
தூரத்துக் கரும்புகை
காளான் முகில்,
அணுவெடிப்புச் சோதனை
புரியும்
அரங்கேற்றம்! அனைத்தும்
மாயத் தோற்றம்!
நிழற்படத்தை நேராக்கிப் பார்!
நிழல் நிஜமாகிறது!
தெருவில் இருநபர் நடக்கிறார்!
பெருமழை பெய்து
நிழல் தெரிகிறது!
இதுதான் மெய்யான
நடப்பு.
தலை கீழாய்ப் பார்த்தால்
உலகக் கேடுகள்
கலக்கிடும் உன் நெஞ்சை!
நிழலாகும்
நிஜம்!
நிழலின் மாயத்தோற்றம் நிஜத்தையே பொய்யாக்கிக் காட்டவல்லது. அதனை அப்படியே நம்பாமலிருப்பதே நல்லது. ’கண்ணால் காண்பதும் பொய்’ என்பது ஆன்றோரின் அனுபவ மொழியன்றோ?
”நெஞ்சைப் பதைக்கவைக்கும் நிழலுருவை நம்பாதே! அஞ்சச் செய்யும் அது! நிழற்படத்தை நேராக்கு; புத்தியைக் கூராக்கு! உண்மை ஒளி(ர்)விடும்!” என்று நன்மொழி நவின்றிருக்கும் திரு. சி. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
தொடர்ந்து ஆர்வமுடன் படக்கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் கவிஞர்களுக்கும் என் பாராட்டு உரியது!
மேகலா,
நானொரு கவிஞன் அல்லன். பாரதியார் போன்ற கவிஞர் வரிசையில் நிற்கத் தகுதி இல்லாதவன் நான். கவிதை எழுத முற்படுறேன். அவ்வளவுதான்.
என்னை இவ்வாரக் கவிதைகள் எழுதியவருள் சிறந்தவன் என்று நீங்கள் தேர்ந்தெடுத்துத் தெரிவித்ததாக நினைத்து ஏற்றுக் கொள்கிறேன். நன்றி நவில்கிறேன்.
சி. ஜெயபாரதன்