படக்கவிதைப் போட்டி .. (101)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
லோகேஷ்வரன் ராஜேந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
மனிதனிடம் கற்றது…
அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
தடுத்திட வராமல் தள்ளிநின்று
தூண்டி விடுவான் அரசியலில்,
அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
அந்த குணமே கோழிகட்கும்,
தடுக்கும் எண்ணம் இல்லாமல்
தொடர விட்டிடும் சண்டையையே…!
-செண்பக ஜெகதீசன்…
அச்சம் என்பது மடமையடா கொண்டை சிலிர்த்து கோபமாய்
பார்ப்பதினால்!
அஞ்சிடும் பெட்டைக் கோழி நான்
என்று நினைத்தாயோ!
பெண் விடுதலை சொன்ன
கவி பாரதி ஊர் பிறந்த
பறவையடா நான்!
வீர மங்கை வேலு நாச்சியார்
புகழ் சொல்லும்
தமிழகக் கோழியடா நான்!
அரவணைக்கும் மாந்தருக்கு
அன்புத் தோழியடா நான்!
அநியாயம் செய்பவர்க்கு
செந்தணலடா நான்!
சமத்துவம் பிறப்பதற்கு
சண்டை தான் வழியென்றால்
சண்டைக் கோழியென!
சமர் செய்து வென்றிடுவேன் !
தூற்றுவார் தூற்றட்டும்!
புதுமைப் பெண்ணென்று
போற்றுவார் போற்றட்டும் !
சேவலின் கூவல்
================
வைகரையில் கூவியுனைஎழ வைத்துன்
துயில்கலைந்ததும் கேளுமடா என்சரிதம்!
செந்நிற கொண்டை சிவந்தயென் கண்கள்..
நிமிர்ந்தயென்பார்வை மிடுக்கானநடை கொண்ட..
“கோழி” யெனும்பெயரே சேவலெனைமட்டும் குறிக்குமாம்!
“செவல்” “மயில்” “நாடு” யென பன்பெயரென் புகழ்சொல்லும்!
பெ ட்டைக்கோழியிடம் மட்டற்ற ஆதிக்கம்பெற…ஆணவ.
ஆண்கோழிகள் சண்டையிடுவது இயற்கையானால்..
கோழியெனை சூதாக வைத்தாடுவது தகுமா?.மீண்டும்.
பாவிமனிதனெனும் பழிவேண்ட சேவல்சூதாட்டம் வேணுமா?..
சிவன்குமரப் பெருமானின் கொடியிலேறியதால்..எனைவைத்து..
சூதாட்டம்கூட “தென்திருவிளையாட்டானது”?..சூதில்நான்..
வெற்றிபெற்றால் “வெற்றி” யெனபெயர்படுவேன்!
தோல்வியெனில் “கோச்சை” யென நானறிவேன்!
செந்நீரைச் சிந்தியெந்தன் சேவலுயிர் போனாலும்..
செந்தமிழன் வீரமென்று சீராட்டுமென் தென்திருநாடு!
காலில் கத்திகட்டி கட்டாலிகள் விளையாடும்..
கள்ளாட்டம் புத்திகெட்டமானுடனின் செயலாகும்!
வெற்றுக்காலுடன் கத்தியின்றிரத்தமின்றி யான்பெறும்..
வெற்றியென்பது உண்மையகிம்சை வெற்றியாகும்!
காட்டமான சண்டையில் வெற்றிபெற என்னினத்தை..
காளிமுன்பு காவுகொடுத்தான் கயவனொருவன்!
காட்டுக்கோழியானால் காலனெனைத் துரத்தமாட்டான்!
நாட்டுக்கொழியானதால் நித்தம்நித்தம் ஆயுள்கண்டம்!
கோதாவில் கழுத்தறுந்து உயிரிழந்த பரிதாபத்தால்..
கடாயில்பல மசாலாவுடன் கோழிநான் குருமாவானேன்!
நெட்டைக்கழுத்தை நீட்டியென் பகைவன்மேல் பறந்து..
பட்டைதீட்டிய கத்தியால் எதிரிகழுத்தை அறுத்ததால்..
குலத்தைக் கெடுக்க வந்த கோடரிபோல்..என்..
இனத்தை நானேகெடுத்து வாழ்வில் இழுக்குற்றேன்!
பதார்த்த குணசிந்தாமணி படித்தவர் என்னிடமரும்..
மருத்துவகுணமுண்டென்று மருந்தாகயெனை சமைத்துண்டார்!
சாமக்கோழியென் அலரும் அறைகூவலுனக்கு..
சமயல்கட்டினுளென் வேதனையறிய வைக்குமடா!
சேவல்கொடியோன் அருளீன்ற என்னுயிரை…இனியும்..
காவல்காக்கமுடியா தென்பது இயற்கைவிதியாமோ?..
தமிழ்க்கடவுள் முருகனவன்
தனிக்கொடியில் விளங்கியதும
அமைதியினைக் கிழித்தபடி
அதிகாலைக் கூவியதும்
உறங்குகின்ற உயிர்களெலாம்
உன்குரலால் விழித்ததுவும்
நிறங்கொணட செங்கொண்டை
நிமிர்ந்திடவே நபந்ததுவும்
கிராமத்து வீடுகளில்
கிளரழகைக் கொடுத்ததுவும்
வராமலேயே போனதென்ன
வண்ணமிழந்த சித்திரமாய்!
கலாச்சாரப் பெயர்சூடி
காலினிலே கத்திகொண்டு
விழாமேடை சந்தைத்திடலில்
வீறுகொண்ட வேங்கையெனச்
சண்டையிடும் சேவலென
சாதிமாறிப் போனதென்ன…
வன்கொடுமை தனைக்காட்ட
வன்மமுடன் வளர்ந்ததென்ன…
தன்னினத்தைச் சண்டையிட்டுத்
தான்மாய்க்கும் காட்சியினை
கண்ணிறைய ரசிக்கின்ற
கயமைதான் மனிதனிடம்…
தன்குணத்தைப் பிறவுயிர்கள்
தலைமீதே ஏற்றிவிட்டுப்
பந்தயத்துச் சேவலெனப்
பாயவிடும் மாயமென்ன…
எவ்வுயிரும் தம்முயிராய்
எண்ணவைக்கும் உயர்ந்ததொரு
தெய்வமனங் கொண்டுவாழத்
தேடல்புரி மனிதனவன்
சேவற்கட்டு புரிவதென்ன
சேர்ந்தவுயிர் அழிவதென்ன…
ஆவலுடன் பந்தயத்தில்
அநியாயஞ் செய்வதென்ன…
இந்நிலைமை மாறிடவே
எவ்வுயிரும் வாழ்ந்திடவே
பொன்னுலகைச் செய்திடுவோம்
போரிடலை மாய்த்திடுவோம்.
கவிஞர் “‘ இளவல் ” ஹரிஹரன், மதுரை.
வீம்புச் சண்டைவேணாண்டா மச்சானே! – சித்தே
விழுந்தமுண்ணா எழும்ப மாட்டம் மச்சானே!
நாம் விழுந்தா அவனுக்கென்ன மச்சானே – வந்து
நம்ம மண்ணைப் புடிச்சுக்குவான்மச்சானே!
இப்பதானே வந்திருக்கோம் மச்சானே! – அட
இதுக்குள்ளயேன் வம்புச் சண்டை மச்சானே!
தப்புண்ணாலும் தவறுண்ணாலும் மச்சானே! –நாம
தக்க வைப்போம் நம்ம மண்ணை மச்சானே!
எட்டி நிண்ணு புதினம் பார்த்து மச்சானே! – நாம
எப்ப வீழ்வமெண்டிருக்கான் மச்சானே!
விட்டமுண்ணா நம்ம மண்ணை மச்சானே! – அத
மீட்கிறது சுலபமில்ல மச்சானே!
மத்தியிலே நின்னுக்குவான் மச்சானே! – தான்
மன்னனென்று பீத்திக்குவான் மச்சானே!
புத்திகெட்டு விழுந்தமுண்ண மச்சானே! – நம்ம
பூமி பறி போயிடும்டா மச்சானே.
போனவங்க போகட்டும் டா மச்சானே! – நம்ம
பூமி இப்போ முக்கியம்டா மச்சானே!
ஆனதெல்லாம் ஆகட்டும்டா மச்சானே! – ஆனா
அன்னியன் வந்தாளலாமோ மச்சானே!
ஒற்றுமையா இருந்திடலாம் மச்சானே! – நமக்கு
உள்ளதின்னும் சிலகாலம் மச்சானே!
வெற்றி காண வேணுமுண்ணா மச்சானே! – அதுக்கு
வேளை வரும் பொறுத்திருடா மச்சானே!
பிழைத்திருத்தம்..
நாட்டுக் கோழி ,
சேவற்கொடியோன்