எழுத்தெதற்கு ?
கவிஞர் ஜவஹர்லால்
பார்வையில் கூர்மை மிகவேண்டும் – கண்ணிற்
பளிச்சென உண்மை படவேண்டும்.
சீர்மையைப் போற்றும் திறம்வேண்டும் – நிலவும்
தீமைகள் சாடும் உரம்வேண்டும்.
அல்லவை செய்வோர் தமைக்கண்டால் – பாட்டால்
அடிக்கும் துணிவு வரவேண்டும்
நல்லவை செய்வோர் பாதமலர் – போற்றி
நாளும் வணங்கும் உளம்வேண்டும்.
அதிகா ரத்தின் வால்பிடித்தே – வாயால்
அனுதினம் புகழா மனம் வேண்டும்.
எதுதான் வந்து மோதிடினும் – எழுத்தில்
இழுக்குச் சேரா நெறிவேண்டும்
அடிதடிக் கும்பல் அதட்டலுக்கே – சற்றும்
அஞ்சாத் துணிவு மிக வேண்டும்
இடித்துப் பொடியா யாக்கிடினும் – நந்தம்
எழுத்து எழுந்து வர வேண்டும்
பள்ளமே கிடப்போர் மேடுவர – எழுதிப்
பாதிப் புக்கள் தரவேண்டும்.
உள்ளமே நொந்து கிடப்போரை – மயில்
இறகாய்த் தடவும் திறம் வேண்டும்.
நல்லவை இவைகள் இல்லையெனில் – இந்த
நாட்டில் எழுத்தே எதற்காக?
அல்லவை ஒழிக்க வில்லையெனில் – எழுத்தே
அரும்புவ தெல்லாம் எதற்காக?