-மேகலா இராமமுர்த்தி

தளும்பும் தண்ணீரைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. அவினாஷ் சேகரனின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் என் நன்றி.

waterdrops

விசும்பின் துளி தரையில் வீழாமற் போனால் பசும்புல்லின் தலையையும் காண்பது கடினம் என்றார் தெய்வப்புலவர்.

நீலவண்ணத்தில் சாலம் காட்டும் இந்நீர், நம் கவிஞர்களின் கற்பனை ஊற்றைத் தளும்பச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதில் நாமும் நீந்திக்களித்து வருவோம்!

***

’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரியைக் கன்னடத்துப் பைங்கிளியென்று கருநாடகம் கருணையின்றி சிறைப்பிடித்ததால், வளமிழந்த தமிழ்நாடு வறட்சியில் தவிக்கின்றது. பாய்ந்துவந்த காவிரியைப் படத்தில் மட்டுமே காணும் அவலம் என்று மாறும்? என வேதனை மேலிட வினவுகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

நீரிற் குமிழி நீயே சாட்சி!

பாய்ந்து வரும் காவிரியில் நீந்திவரும் நீர்க்குமிழி
ஓய்ந்துவிட்டாய், உன்படத்தின் காட்சி – இன்று
உலகுக்கு அதுதானே சாட்சி

காப்பியங்கள் சொன்னதெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்
மூப்படைந்து செத்தொழிந்து போச்சு – இன்று
முகமிழந்த காவிரியாயாச்சு

வாழ்த்துரைக்கச் செம்புலவர் வளநாடன் தாரமென்று
கீர்த்தியுடன் வாழ்ந்தனை காவேரி – இன்று
கிடக்கிறதே வெள்ளை மணல் வாரி (கடல்)

வண்டலள்ளித் தமிழர் மண்ணில் வளங்கொழிக்க நன்செயெங்கும்
கொண்டு தந்தாய் எங்களின் காவேரி – இன்று
மண்டிய மண் அள்ளுதற்கு வயல் வரப்புப் படுக்கையெனக்
கண்ட இடமெங்கும் மணல் லாரி.

கன்னடத்துப் பைங்கிளியென்றுன்னையவர் சிறை பிடிக்க
அன்னவரின் சொத்தானாய் தேவி – நாம்
உன்னையினிக் காண்பதற்கு உள்ளதெல்லாம் உன்படம் தான்
என்ன செய்வோம் இத்துயரை மேவி!

***

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அன்று. தமிழ்மக்களின் பசிப்பிணி போக்கிய விவசாயிகளோ வாடிய பயிரைக் கண்ட அதிர்ச்சியில் தம் ஆருயிரையே துறந்துவருகின்றனர் இன்று! ஆறுகளில் வெள்ளம் ஆடிவந்த காலமெல்லாம் பழங்கதையாய்ப் போன வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹரிதா.

வாடிய பயிரைக்கண்டே
வாடிமடிந்த மனிதனை அறிவாயோ,
உனைக்காணாது உயிர்துறந்தோர்
எத்துனையென்பதை அறியாயோ,
பெருகிவழிந்தோடும் குழாயடிநீரோடு

அலட்சியத்தினின்று மடிவற்றிப்போன
ஆற்றுப்படுகைகளும் தூளிகட்டியாடிய
ஆற்றங்கரை ஆலமரமும்
நினைவுபடுத்துகிற பழைய நினைவுகளும்
கடந்து வந்த பாதையினில் உணா்த்திவிட்டுபோகிறதுன் இழப்புகளைத்
தாரைவார்க்க காத்திருக்கும் கார்ப்பரேட் எசமானா்கள் ஒருகோடி

உனைத்தோடி நோன்பிருக்கும் ஜனங்கள்கோடி
இனியேனும் இருப்பதைக் காப்போனோ
இழந்ததை மீட்பேனோயெனும் ஏக்கத்தினிலே …

***

நீரில்போடும் கோலங்கள் நிலைப்பதில்லை; ஆதலால், இல்லாததை நம்பி இருக்கும் காலத்தை வீணடிக்காதே; முயன்று செய் இயன்றதை!” என்று முயற்சியின் உயர்வைப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

இன்றே செய்…

நிலைப்பதில்லை
நீர்க்கோலங்கள்-
வாழ்க்கையாய்..

குளத்தில் கல்லெறிந்து
வளையங்களைத் தூதனுப்பினால்
வராது நல்லகாலம்..

இருக்கும் காலத்தில்
இயன்றதைச் செய் முயன்று..

இல்லாததை நம்பி
ஏமாந்து
இழந்துவிடாதே
இருக்கும் காலத்தை…!

***

”கருவில் உயிர்கள் வளர்வது நீரில்; வயலில் பயிர்கள் வளர்வது நீரில். நீரின்றி அமையாது நிலவுலகு. எனவே உபரி நீரைப் பரிவோடு பகிர்ந்தளியுங்கள் உலகோருக்கு!” என்று நீர் சொல்லும் நீதியை திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையில் காண்கிறோம்.

நீரும் நாமும் பஞ்ச பூதங்களில் நீர் இருப்பது முதலினிலே!
ஈசனும் தந்தார் இடம் தன் தலையினிலே!
கருவில் குழந்தை வளர்வது நீரினிலே!
பயிர்கள் விளைவது நீரினிலே!
பாவங்கள் கரைவது நீரினிலே!
ஆனந்தம் தெரிவது நீரினிலே!
அழுகையும் புரிவது நீரினிலே!
நீரில்லா உலகம்!
உயிரில்லா உடலாகும்!
உயிர் வாழ உணவு வேண்டும்!
உணவிற்கு நீர் வேண்டும்!
இயற்கை தந்த செல்வம்
அனைவருக்கும் பொதுவாகும்!
அளவுக்கு மீறினால் அமுதமும்
நஞ்சாகும் !
உபரி நீரை பகிர்ந்தளித்தால்!
உலகம் உயர்வாகும்!
நீர்க் குமிழி வாழ்க்கையில்!
உனது புகழ் நிலையாகும்!
இது வண்ணக் குமிழ் சொன்ன
எண்ணக் கதையாகும்!
இதை நெஞ்சில் நிறுத்திடுங்கள்!
நீடூழி வாழ்ந்திடுங்கள்!

***

”ஐந்தாம் பிள்ளையும் பெண்ணாய்ப் போனதால் மாமியார்க் கோபமும் மாமனார் சூழ்ச்சியும் பெண்குழந்தையை மிதக்கவிட்டது தண்ணீரில்; அதுகண்டு தாயோ மிதக்கிறாள் கண்ணீரில். பெண்ணாய்ப் பிறப்பதினும் நாயாய்ப் பிறப்பதே நல்லது போலும் இந்த நானிலத்தில்!” என்று நெஞ்சுநெகிழ்ந்து பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

தாயின் கண்ணீர்

கண்ணீர் விடுகிறாள் அன்னை
பத்து மாதம் சுமந்த சிசு
தண்ணீரில் போகும் போது !
ஐந்தாம் பிள்ளையும்
பெண்ணாய்ப் போனதாம் !
பெற்ற
தந்தையின் சீற்றம் !
மாமியார் கோபம் !
மாமனார் சூழ்ச்சி !
பெற்ற தாயிக்குத் துடிப்பு !
இதய வெடிப்பு !
வேதனை !
ஐந்து பெண் குட்டி ஈன்ற
எலும்பு நாயும்
குட்டிகளைப் பேணுது;
தாய்ப் பாலை
ஊட்டுது !
பெண்ணென்றால்
பேயும் இரங்குமாம் !
அழுது, அழுது
அன்னையின் கண்ணீர்
ஆறாய் ஓடுது !
மானிட மாய்ப் பிறப்பதிலும்
நாயாய்ப் பிறப்பது
நல்லது !

***

சேகரிக்க மறந்தோம் மழைத்துளி. அதனால் உழவரின்  கண்களில் நீர்த்துளி. மரங்கள் நிறைந்த கானை அழித்தோம்; வானை முட்டும் கட்டடங்கள் அமைத்தோம். விளைவு? வான் பொய்த்தது; நிலம் வறண்டது. இது மானிடப் பிழையேயன்றி வானின் பிழையன்று!” என்று சுட்டிக்காட்டுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

துளிக்கு வலிமையுண்டு
சிறுதுளி பெருவெள்ளமாவதை அறியாது
உழலும் மானுடமே!
துளிக்கும் வலிமையுண்டு
உணர்வாய் நீ
வானம் பார்த்த பூமிக்கு மறுக்கப்பட்ட மழைத்துளி
மரம் நடாமையால் நமக்கான பதிலடி
சேகரிக்க மறந்த மழைத்துளி
வறண்ட பூமியென்னும் பேரிடி
கான்கிரிட் கட்டடத்தின் சிரிப்பொலி
விவசாயி கண்ணில் பெருக்கெடுக்குதே கண்ணீர்த் துளி

தாரை வார்க்கும் நீர் வளமெல்லாம்
நமக்கே விலையானது சேகரித்த நீர்த்துளியாக
ஊழல் வளர்த்தெடுக்கும் ஓரிடத்துச் செழுமை
தட்டிக் கேளாதவரின் இயலாமை
உழைப்பாளி உடலில் பெருகும் வியர்வைத்துளி
வன்கொடுமையால் வதைக்கப்படும் பிஞ்சுகளின் உதிரத் துளி
சிறுதுளிதானே எக்காளமிடும் மனிதா
எத்தனை எத்தனை சிறுதுளிகள்
அத்தனை அத்தனை ஒன்றிணைந்து
அசுரக்காட்சியாய் அச்சுறுத்தும்
நிறமாறிய துளிகள்
வஞ்சனையைச் சொல்லும்
துளிக்குள் துளிர்க்கும் வலிமையே வெல்லும்

***

வண்ணங்கள் காட்டும் மழைத்துளி, மானுட எண்ணங்களையெல்லாம் ஒன்றுகூட்டிப் பல்வேறு சிந்தனைத்துளிகளைச் சிதறவைக்கும் அதிசயத்தைப் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில் காணமுடிகின்றது.

சிந்தனைத் துளி

விண்ணுடன் முகிலாடும்
விழிநீரில் தவழ்ந்தாடும்
குளிர்நிலவின் முகத்துக்குள்
பனித்துளிக்கு ஒப்பாகி
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

காதலர்கள் சேர்கையாலே
களிப்பின் உச்சத்திலே
விழிநான்கின் வழிவந்த
வழிந்த கண்ணீராய்
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

பெண்மையின் கருப்பைக்குள்
பனிக்குடத்தில் பக்குவமாக்
படுத்துறங்கும் பிஞ்சு
கருத்துளியின் உருவமாய்
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

கடல்நாயீன்ற குட்டிபோல்
கண்ணுக்குள் மாயத்தோற்றமாய்
பழுப்புநீல வண்ணத்தில்
புதுஜனனம் எடுத்ததுபோல்
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

தாமரையிலை மீதிலென்றும்
தங்காத தண்ணீர்முத்தென
வெண்துளியாய் வீழ்ந்துபல
மணித்துளி வண்ணமாய்த்தவழ்ந்து
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

நீருக்குமேல் மிதந்த
நீலவண்ண நீர்த்துளியாய்
மாயமாய்மதி மயக்கும்வண்ணமாய்
மானுடச்சிந்தைக்கோர் விருந்தாகி
கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

வண்ணம் பலகாட்டும்
வண்ணத் துளியாய்
எண்ணத்தைச் சிதறடித்த
எண்ணத் துகளாய்
கவிபாடும் சிந்தனைக்கோர் கவித்துளியானாய்!

அப்பப்பா! துள்ளிக்குதிக்கும் நீர்த்துளியைக் கண்டதுதான் தாமதம், கவிதைப் பிரளயத்தையே உருவாக்கி அதன் சுழலில் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டனர் கவிஞர்கள். அவர்களின் சிந்தனைச் செறிவுக்கும், புலமையறிவுக்கும் என் பாராட்டுக்கள்!

***

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்வுசெய்திருப்பது…

பொங்கி வரும் பொக்கிஷம்!

சிறுதுளி பெருவெள்ளம் என்றாய்
பல துளிகள் உனக்களித்துவிட்டேன், இருப்பினும்
பற்றாக்குறை பட்ஜெட்தான் வாசிக்கிறாய்!!

சிக்கனமாய் வைத்திருந்தால் தான்
சித்திரை வரை செலவழிக்க முடியுமென
சில்லறை மட்டும் சேர்க்கிறாய்.

வற்றாத ஜீவனாக இருந்த எனை
வாரி இறைத்து வீணாக்கி
வற்ற வைத்துத் தவிக்கிறாய்

பொன்னும் பொருளும் மட்டுமல்ல
பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியது
பொங்கி வரும் நதியையும் தான்!

ஊதாரியாய் இருந்துவிட்டு ஊரூராய்த் தேடாதே
ஊற்றெடுக்கும் எனை நீ
ஊமையாக்காதே!

விழித்துக்கொள் இன்றாவது…!
வீணடிக்காமல் சேமிக்கத் தொடங்கு
விடியும் பொழுது வெளிச்சம் தரட்டும்!

’பொன்னையும் பொருளையும் கண்ணைப்போல் காக்கும் மனிதர், அதனினும் அரிய நீரை ஊதாரித்தனமாய்ச் செலவழிப்பது மடமையேயன்றி அறிவுடைமை ஆகாது. ‘பொங்கிவரும் பொக்கிஷம்’ நீர். அதனைத் தேக்கிவைத்தால் மட்டுமே உழவு செழிக்கும்; உயிர்கள் பிழைக்கும்’ எனும் அருங்கருத்தைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

ஒன்றல்ல இரண்டல்ல…பல கவிதைகளைப் படக்கவிதைப் போட்டிக்குச் சளைக்காமல் படைத்திருக்கும் அவரின் அளவில்லா ஆர்வத்துக்கும் என் பாராட்டுக்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 103-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிதையாக தேர்வு செய்மிதமைக்கு மிக்க நன்றி..

  2. சிறந்த கவிதையாக தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *