பாவம்
பூவுலக மாந்தர்க்குக் கண்கள் வைத்தான்;
பார்வையினால் மனம்மலர வழிகள் வைத்தான்;
மேவிவரும் ஓசைநலம் கேட்டு நெஞ்சம்
மேன்மையுற இருசெவிகள் அழகாய் வைத்தான்;
காவினிலே பூத்தமலர் மணம்சு வைக்கக்
கட்டழகு முகத்தினிலே மூக்கை வைத்தான்;
நாவினையே உரையாட வைத்தான்; இன்ப
நாட்டியங்கள் அரங்கேற மெய்யை வைத்தான்.
வைத்தவனை மறந்துவிட்டோம்; கணமும் தீமை
வளர்ப்பதற்கே ஐம்புலனைத் தீட்டிக் கொள்வோம்;
சைத்தானின் ஆட்சிபீட மாக மெய்யைத்
தாரைவார்த்துக் கொடுத்துவிட்டோம்; புலன்க ளெல்லாம்
கைத்தாளம் போட்டதற்கே தொண்டு செய்யக்
கடைப்பட்டு நைகின்றோம்; நல்ல பாதை
சைத்தானும் காட்டாது; மனித நெஞ்சும்
சரிபாதை கேட்காது; கெட்டு நையும்.
கண்மடல்கள் தீமையினைப் பார்ப்ப தற்கே
கணந்தோறும் திறக்கிறது; இரண்டு பக்கம்
உண்டான செவிவழியோ தீமை வெள்ளம்
ஓடிவர அழைக்கிறது; மூக்கோ நாற்றம்
ஒன்றைத்தான் நுகர்கிறது; மெய்யோ என்றும்
உருப்படாது போகிறது; உறவு கொள்ள
உண்டான நாவதுவோ நுனியில் தீயை
உண்டாக்கிச் சுடுகிறது; மனிதன் பாவம் !