வேறெதும் வேண்டுமோ ?
கவிஞர் ஜவஹர்லால்
புள்ளினம் வானில் பறக்குதே ! – வானப்
பரப்பினில் வெளிச்சமும் பாயுதே !
நல்லதோர் காலைப் பொழுதென – இங்கு
நவின்றிட வேறெதும் வேண்டுமோ ?
கீச்செனக் குருவிகள் பாயுதே ! – அந்தக்
கீழ்வானம் ஒளியினில் தோயுதே !
ஆச்சிதோ காலைப் பொழுதென – இங்கே
அறைந்திட வேறெதும் வேண்டுமோ ?
உச்சியில் வெய்யில் எறிக்குதே ! – கால்கள்
ஓரிடம் நிற்க மறுக்குதே !
மெச்சியே நண்பகல் இதுவென – இங்கு
முழங்கிட வேறெதும் வேண்டுமோ ?
வேர்வையில் உடலெலாம் குளிக்குதே ! –மூச்சு
மேலுறக் கீழுற வாங்குதே !
சீறிடும் உச்சிப் பொழுதென – இங்குச்
செப்பிட வேறெதும் வேண்டுமோ ?
மாடுகள் வீடு திரும்புதே ! – வீட்டு
மல்லிகை முல்லை மலருதே !
தேடியே மாலைப் பொழுதென – இங்குச்
சொல்லிட வேறெதும் வேண்டுமோ ?
கதிரொளி மேற்கினில் வீழுதே ! – இருள்
கட்டியங் கூறி வருகுதே !
மதிவரும் மாலைப் பொழுதென – வாய்
மலர்ந்திட வேறெதும் வேண்டுமோ ?