குறளின் கதிர்களாய்…(162)
-செண்பக ஜெகதீசன்
தினைத்துணையாக் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். (திருக்குறள்-433: குற்றங்கடிதல்)
புதுக் கவிதையில்…
வந்திடுமே
வாழ்வில் பழியென்று
அஞ்சுபவர்கள்,
கொஞ்சமாய்க் குற்றம்
தினையளவு வந்தாலும்,
கொள்வர் அதைப்
பனையளவாய்…!
குறும்பாவில்…
பழிக்கு அஞ்சுபவர்கள்,
தினையளவு குற்றம்வரினும் கொள்வரதைப்
பனையளவாய்…!
மரபுக் கவிதையில்…
வந்திடும் வாழ்வில் பழியென்றே
-வருந்தி நாணும் குணமுடையோர்,
நொந்திடச் செய்யும் குற்றமது
-நிலையில் சிறிய தினையளவில்
வந்த போதும் அதனைத்தான்
-உருவில் பெரிய பனையதுபோல்
சிந்தையில் கொண்டு வெறுப்பாரே
-செயலில் காட்ட மறுப்பாரே…!
லிமரைக்கூ…
கண்டால் குற்றம் தினையளவில்,
கொள்ளுவர் அதனை பழிக்கஞ்சுவோர்
காணப் பெரிய பனையளவில்…!
கிராமிய பாணியில்…
செய்யாதே செய்யாதே
குத்தமேதுஞ் செய்யாதே…
சிறுசுபெருசு கணக்கில்ல,
குத்தமேதுஞ் செய்யாதே…
பழிபாவத்துக்குப் பயப்படுறவன்
பார்வயில இப்புடித்தான்-
தெனயளவு சிறுகுத்தமும்
அவனுக்கு
பனயளவாத் தெரியுமாமே…
அதுக்கு,
செய்யாதே செய்யாதே
குத்தமேதுஞ் செய்யாதே…!