நீயே சொல்லு!
கவிஞர் ஜவஹர்லால்
“வாடாப்பா படைத்தவனே! உன்ப டைப்பின்
வாழ்வுமுறை கண்டுமனம் மகிழ லாம்வா!
போடாப்பா அத்திசையில் கொஞ்சம்; சற்றுப்
பொறுத்துப்பார்! நடையோரம் கிழிந்து போன
நாடாவைச் சிற்றாடை என்னச் சுற்றி
நடைபயிலும் ‘அரைவயிற்றைப்‘ பார்த்தா யாநீ!
தாடாப்பா உன்கரத்தை; தயங்கா தேநீ!
தள்ளுகொஞ்சம் பள்ளத்தில் விழப்போ கின்றாய்!
பள்ளத்தைத் தாண்டப்பா; இங்கே என்ன
பள்ளமென்றா கேட்கின்றாய்? அடடா இஃதைப்
பள்ளமென்றா சொன்னோமிங் குறைவோர் கேட்பின்
பதைத்துமனங் குமுறிடுவார்; குளிக்க உண்ண
நல்லதென அன்னவர்கள் போற்று கின்ற
நனிசுவைநீர் இதுதான்நீ அறிந்து கொள்வாய்;
நில்லப்பா! ஏன்மூக்கைப் பிடித்தாய்? நாற்றம்
நினக்கொத்து வரவிலையோ? மேலே போ!போ!
‘ஈதென்ன திரைச்சீலை?’ என்கின் றாயா?
இதுதானுன் படைப்புக்கள் பல்லோர் வாழும்
தீதில்லாப் பேரில்லம்; வேண்டும் போது
தெருத்தாண்டி இடந்தாண்டி அமைத்தற் கேற்பத்
தோதான துணிவீடு; உள்ளே கொஞ்சம்
துணிவோடு நுழையப்பா! தோலை என்பின்
மீதாகப் போர்த்ததுபோல் இருப்ப வள்தான்
வீட்டுக்குப் பேரரசி! பேருக் குத்தான்;
அய்யய்யோ என்றகுரல் கேட்கு தாப்பா!
அடடேநீ ஏனப்பா ஓடு கின்றாய்?
மெய்யெல்லாம் புண்ணாக வெளுத்து கின்ற
‘மேலோனும்‘ அவன்கையில் மத்த ளம்போல்
மெய்சோர அடிவாங்கும் பெண்ணும் உன்றன்
மேன்மையினா லுயிர்பெற்ற பொருள்தா மப்பா!
பொய்யில்லை எண்ணிப்பார்; இந்தக் கோலம்
போற்றிவளர்த் திடவாநீ படைத்தாய்? சொல்லு!
தெருமுனையின் சிறுவீட்டைப் பாராய்; அங்கே
சிரிக்கின்ற தாரென்றா வினவு கின்றாய்?
வருவண்டை இதழ்வீசி அழைத்துக் கண்ணின்
வலைதன்னிற் பிணைத்திட்டு ‘மேனி‘ காட்டித்
தருபொருளைக் கொண்டுதினம் வாழு மந்தத்
தண்மலரும் உன்படைப்பே; அவள்தான் அந்தோ
வருகின்றா ளுனைநோக்கி; விரைந்து வா!வா!
வலைதன்னி லுனையுமவள் வீழ்த்தப் பார்ப்பாள்.
அதற்குள்ளா சலிக்கின்றாய்? அறத்தால் வாழும்
அருமைமிகும் உன்படைப்பைக் காண வா!வா!
புதர்க்குள்ளே பதுங்குகின்ற முயலைப் போலப்
பூமியிலே வாழ்கின்ற நல்லோ ரைப்பார்!
இதற்கில்லை அதற்கில்லை எதற்கு மில்லை;
என்றங்கே இல்லையெனும் பாட்டே கேட்கும்;
எதற்கிந்த நிலையென்றா எனைக்கேட் கின்றாய்?
என்னப்பா படைத்தவனே! நீயே சொல்லு!