க. பாலசுப்பிரமணியன்

உள்ளும் வெளியும் ஒருவனே

நந்தவனத்திலோர் ஆண்டி அவன்

நாலாறு மாதமாய்  குயவனை வேண்டி

கொண்டுவந்தானொரு தோண்டி

அதைக் கூத்தாடிகூத்தாடிப் போட்டுடைத்தாண்டி “

திருமூலர்-1

என்ற சித்தரின் தத்துவப்பாடல் இந்த மானிட வாழ்வின் நிலையற்றதன்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இதே கருத்தை முன்னிறுத்தி “குளத்திலே இருக்கின்ற பானையின் உள்ளும் நீர் இருக்கின்றது. அதன் வெளியேயும் நீர் இருக்கின்றது. அந்தப் பானை உடைந்து விட்டால் உள்ளே இருக்கும் நீரும் வெளியே இருக்கும் நீரும் ஒன்றாகிறது. இதுதான் வாழ்க்கையின் உண்மைக் கதை”  என்கிறார் கபீர்தாஸ்.

இந்த உடல் ஒரு மண்பாண்டம் போல..எவ்வாறு ஒரு மண் பானை உடைந்தால் உள்ளிருக்கும் பொருளும் வெளியிருக்கும் பொருளும் ஒன்றாகிறதோ அது போல இந்த உடலில் உள்ளே இருக்கும் ஆன்மா  அந்தப்  பரம்பொருளுடன் கலந்து விடுகிறது என்ற கருத்தை மேற்கூறிய பாடல் சித்தரிக்கின்றது.

இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தி மற்றும் உடலின் நிலையற்ற தன்மையை வெளிச்ச்த்துக் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ள திருமூலரின் பாடல்

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்

குளத்தின் மண்கொண்டு குயவன் வளைந்தான்

குடமுடைந்தால் அவை ஓடென்று வைப்பர்

உடலுடைந்தால் இறைப் போதும் வையாரே

ஒரு குயவன் எவ்வாறு மண்ணை வடித்துப் பானை செய்கின்றானோ அவ்வாறே இந்த உடலையும் இறைவன்  வடித்திருக்கிறான். அந்த மண் குடம் உடைந்தால் அதை ஓடாகவாவது உபயோகிப்பர், ஆனால் இந்த உடல் உடைந்தால் கண் இமைக்கும் நேரம் கூட வைக்க மறுப்பார். .. என்னே! இந்த வாழ்வின் நிலை..!!

இப்படிப்பட்ட வாழ்வில், மனிதனோ “நான், எனது, எனக்கு“ என்றெல்லாம் பொருள் சேர்த்து தனக்குத்தானே சுமைதாங்கியாக வாழ்கிறானே என்று வருத்தப்படுகின்றார்.

ஒரு ஓடாகக் கூட பயன்படாத இந்த உடலை எவ்வாறெல்லாம் நாம் பாராட்டுகின்றோம்? இதனை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சக்தி எது? அந்த சக்தியின் ஆணையை ஏற்று இந்த உடலின் வெவ்வேறு இந்திரியங்கள் எப்படிப் பணி செய்கின்றன? இதன் பின் இருக்கின்ற மாயை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப்பாடல் :

புலன் ஐந்து புள் ஐந்து புட்ச்சென்று மேயும

 நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து

 குளமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்

 உலாவந்து போம்வழி யொன்பது தானே “

ஐம்பொறிகளோடு நம் உயிர் ஆடுகின்ற இந்த நாடகத்தை நாம் அறிந்தோமோ? அல்லவே ! உண்மையை உணராத, அறியாத நெஞ்சம் எத்தனை வேடங்கள்தான் போடுகின்றது .. இதை உணர்ந்தாரில்லையே.. இந்த உண்மையை உணர்த்தும்  பட்டினத்தார் பாடல் இதோ:

நீற்றைப் புனைந்தென்ன நீராடப்  போயென்ன நீமனமே

மாற்றிப்பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்

ஏற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டாய்

ஆற்றிற் கிடந்துந் துறையறி யாம் வலைகின்றதே

ஆற்றிற் கிடந்ததும் துறையறியாதவரைப் போல் இறைவனை உள்ளே அமர்த்திக்கொண்டும் அவனை நன்கு அறியாத மூடர்களாக இருந்துவிட்டோமே ! நாம் காலத்தையெல்லாம் வீணடித்து விடுகின்றோமே!

இந்தத் துயரிலிருந்து பட்டினத்தாரும் விடுபட்டாரில்லை.

என்னையறியாமல் யெனக்குள்ளே நீயிருக்க

உன்னை யறியாம லுடலிழந்தேன் பூரணமே !

என்று வேதனைப்படுகின்றார்.

இவ்வாறு உடலை வெறும் கருவியாக உபயோகிக்கும் நம் உள்மனது எப்பொழுதும் இறையின் அளவில்லா அழகையும் பேராண்மையையும் தன்னையுமறியாமல் ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கை என்னும் நாடகம் முடியும் தருவாயில் “அடுத்து நான் எங்கே போவேன்? என் செய்வேன்?’ என்ற பயத்திலும் வேட்கையிலும் இறைவனின் தாள்களைத் தேடுகின்றது. நாம் வாழும் பொழுதே இந்த மாயையை அறிந்துகொண்டு விலக முயற்சித்தோமானால் வாழ்க்கையிலிருந்து விடுபடும் மாற்றம் நம்மை பாதிப்பதில்லை. இதோ கவீந்திரர் ரபீந்திரநாத் டாகுர் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்றுபார்க்கலாமே

I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed!

My eyes have seen and my ears have heard.

It was my part of this feast to play upon my instrument and I have done all I could.

Now, I ask, has the time come at last, when I may go in and see thy face and offer thee my silent salutation?

வாழ்வின் உண்மை நிலையை அறிந்து மாயையிலிருந்து விடுபடுகின்ற நிலையன்றோ இது?

இறைவனின் இந்த மிகப் பெரிய கருணைக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த அளவில்லாக கருணை கண்டு மாணிக்க வாசகர் வியக்கிறார் ..

தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்

சங்கரா யார் கொலோ சதுரர்

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது ஒன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறை உறை சிவனே

எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே !

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *