வனத்திலும் தண்ணீர் பஞ்சம்!
பவள சங்கரி
நீலகிரி மாவட்டத்தின் வனவிலங்கு சரணாலயங்களில் நீரின்றி இந்த ஆண்டில் இதுவரை 36 யானைகள் இறந்துள்ளன. அரசு இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். முன்பெல்லாம் கோடைகாலத்தில் அங்குள்ள தொட்டிகள், நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துச்சென்று நிரப்புவார்கள். தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தண்ணீர் தேடியே விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நுழைகின்றன… இதைக்கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் கோடையின் கொடுமையால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு முதியோர்களையும், குழந்தைகளையும் தவிர்த்து மற்றையோர் ஊரையே காலிசெய்யும் கொடுமை ஏற்பட்டுள்ளது! போர்க்கால நடவடிக்கை உடனடி தேவை.
வறட்சி அதிகமாகி, தண்ணீர் தேவை அதிகமாகியுள்ள இந்தக்காலகட்டத்தில் கட்டுமானப்பணிகளை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாமே? கட்டுமானப் பணியாளர்களுக்குரிய மாற்று பணிகளும் ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது கட்டுமானப் பணிகளில் தண்ணீர் இன்றி செய்யக்கூடிய பணிகளை மட்டும் தற்போது செய்துகொண்டிருக்கலாம். இது கட்டுமானப்பணி மட்டுமன்றி அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.