( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

ஊசிமுதல் உணவுவரை

உழைப்பாலே வருகிறது

உழைக்கின்றார் வாழ்வெல்லாம்

உயர்வுபெற மறுக்கிறது

காசுள்ளார் கைகளிலே

உழைப்பெல்லாம் போகிறது

கவலையுறும் உழைப்பாளி

கண்ணீரில் மிதக்கின்றான் !

 

சமத்துவங்கள் பேசுகிறார்

சங்கங்கள் அமைக்கின்றார்

நினைத்தவுடன் மாநாடு

நிறையவே வைக்கின்றார்

அனைத்துமே உழைக்கின்றார்

அனுசரணை என்கின்றார்

ஆனாலும் உழைக்கின்றார்

அல்லலிலே இருக்கின்றார் !

 

நிலத்தில் வியர்வை சிந்தியே

நித்தம் உழைக்கும் மக்களின்

நலத்தை மனதில் எண்ணியே

நடத்தல் நீதி அல்லவா

பணத்தை முடக்கி வைத்திடும்

குணத்தை உடைய மனமெலாம்

உழைப்பை மதிக்கும் நிலையினை

உலகில் வந்திடச் செய்குவோம் !

 

பாடுபடுவார் பலவற்றைப் பெறுதல் வேண்டும்

பக்குவமாய் அவர்வாழ்வு மலர்தல் வேண்டும்

நாட்டினிலே அவருழைப்பு போற்றல் வேண்டும்

நலம்விளைக்கும் நாளாய் மே திகழவேண்டும் !

 

உழைப்பினை நல்குவார்

உயர்ந்திடச் செய்குவோம்

உழைப்பினை நினைவுறும்

நாளதைப் போற்றுவாம்

நலத்துடன் உழைப்பவர்

வாழ்ந்திட வாழ்த்துவோம்

நாட்டிலே உழைப்பாரை

நாளெலாம் போற்றுவோம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *