ஆணடிமைகள்!
-தமிழ்த்தேனீ
ஆண்களே விழித்துக்கொள்ளுங்கள்!
பாகம் 1:
இது பெண்களுக்கு எதிரான கட்டுரை அல்ல; ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை முயற்சி.
“Henpecked husbands“ என்று இதுவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் “Henpecked Wives“ என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?
கீழே எழுதியிருப்பதைப் படித்துவிட்டு உடனே பொங்காமல் சொற்களை அவசரப்பட்டு அள்ளித் தெளித்து விடாமல் தீர ஆராய்ந்து விவாதிக்க தைரியமான உண்மையான ஆண்பிள்ளைகளே வாருங்கள். அப்படி உண்மைகளைத் தைரியமாக சொல்லிவிட்டால் மறுநாளிலிருந்து உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற தார்மீக பயம் கொண்ட ஆண்பிள்ளைகள் இந்த இழையில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து தங்களுடைய மானமுள்ள சாப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அல்லது பெண்டாட்டியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தைரியமாக களத்தில் இறங்குங்கள். தைரியமாக கருத்தைச் சொல்லுங்கள். அவ்வப்போது பரிதாபமாக பெண்டாட்டியைப் பார்த்து கோவப்படாதே சும்மா இந்த இழைக்காக எழுதுகிறேன் என்று சமாதானப்படுத்திக்கொண்டே எழுதுங்கள்.
மீண்டும் தலைப்பில் எழுதியதையே இங்கே அளிக்கிறேன்
Henpecked husbands என்று இது வரை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்
Henpecked Wives என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?
அதே போல் தமிழில் பெண்டாட்டிதாசன் என்னும் சொல்லை உருவாக்கிய தைரியமான ஆண்பிள்ளைகள் பெண்டாட்டிக்கும் பெண்மணிகளுக்கும் பயந்துகொண்டு அஞ்சி “புருஷதாசி“ என்னும் சொல்லை உருவாக்காமலே இருந்த நம் முன்னோர்கள் முதல் இன்னோர்கள் வரை அனைவருக்கும் ஒரு கேள்வியாகவே இதைக் கேட்கிறேன்.
பாகம் 2:
அதே போல் தாசி என்கிற சொல்லுக்குத் தவறான பொருளைக் கற்பித்த அனைவரையும் கண்டிக்கிறேன்.
ஒரு பெண்ணானவள் கணவனுக்கு நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய், படுக்கையில் தாசியாய் இருந்தால்தான் பத்தினி என்று பெரியவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். இது தவறான சொல்லாடல் அல்லவா?
ஏனென்றால் ஒரு ஆணை கணவனாக வரித்து அவன் மேல் பக்தியும் ப்ரேமையும் கொண்டு ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்னும் வேதவாக்கைக் கடைப்பிடித்து அவனுக்காவே வாழும் உத்தமப் பெண்மணிக்கும் தாசி என்கிற பெயர். அதே போல் ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் த்ரோகம் செய்து பலருடன் வாழும் பெண்மணிக்கும் தாசி என்கிற பெயர் என்றால் எங்கோ இடிக்கிறதே. ஆகவே களங்கப்படுத்தும் வகையில் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டுப் பொருள்ஈட்டும் பரத்தைக்கும் தாசி என்கிற சொல்லைக் வைக்காதீர்கள். தாசி என்றால் காதலுள்ளவள் அன்புள்ளவள் பக்தியுள்ளவள் பாசமுள்ளவள் என்றெல்லாம் பொருள் சொல்லாமல் ஒரு தவறான பொருளை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே இது நியாயமா?
கண்ணதாசன் என்று தைரியமாக பெயர் வைத்துக்கொள்ளும் இந்த நாட்டிலே கண்ண தாசி கிருஷ்ணதாசி என்று பெயர் வைத்துக்கொள்ள ஒரு பெண்மணியால் இப்போது முடியுமா?
அடியேன் தாசன் என்று ஒரு ஆணால் தைரியமாக சொல்ல முடியும் ஆனால் அடியாள் தாசி என்று ஒரு பெண்ணால் தன்னைச் சொல்லிக் கொள்ள முடியுமா?
முடியாது ஏனென்றால் தாசி என்றால் உண்மையான பொருளை மறைத்துக் கேவலமான பொருளை மக்கள் மனதிலே திணித்துவிட்டார்கள் அதனால் முடியாது.
ஏற்கெனவே கிருஷ்ணதாசி என்றுதான் பக்த மீராவுக்கும் அவர் போல் கிருஷ்ணன் மேல் காதல் அன்பு பாசம் பக்தி கொண்டவர்களுக்கும் பெயர் என்று சப்பைக் கட்டுக் கட்டவேண்டாம் . இப்போதைய காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக தாசி என்கிற சொல்லுக்கு தவறான பொருள் கொண்ட இக்காலத்தில் யாரேனும் தைரியமாக கிருஷ்ணதாசி என்றோ ராம தாசி என்றோ பெயர் வைத்துக்கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
பாகம் 3 :
இன்று வரை பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்னும் சொல் வழக்கு இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு எதிரியாக இன்னொரு பெண்ணைத்தான் சொல்கிறார்களே தவிர ஒரு பெண்ணுக்கு ஆணே எதிரி என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை ஏனென்றால் ஆண்கள் பெண்ணுக்கு எதிரி அல்ல; அடிமைகள் என்பதை பெண்மணிகள் நன்றாகவே உணர்ந்திருந்த காரணத்தால்தான் அப்படிப் பெண்ணுக்கு ஆணே எதிரி என்கிற சொல் வழக்கை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
நன்றாக யோசித்துப் பார்த்தால் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இராமாயணக் காலம் முதற்கொண்டு கைகேயி சூர்ப்பனகை போன்றோர்கள் மஹாபாரதக் காலத்திலே குந்தி தேவிக்கு முதலில் குழந்தை பிறந்துவிட்டது என்று பொறாமைப்பட்டு அம்மிக் குழவியால் தன் வயிற்றிலே இடித்துக்கொண்டாள் காந்தாரி அப்படி இடிபட்டதால் 101 சதைப் பிண்டங்களாக சிதைந்த அந்த சதைப்பிண்டங்களை உயிர் பிழைக்க வைத்து நூற்றி ஒரு குழந்தைகளாகப் பிறக்க வைத்தனர் என்பது மஹாபாரத நிகழ்வு.
சரி அதை விட்டுவிடலாம்! கற்புக்கரசி கண்ணகியின் வாழ்வைக் குலைத்தது மாதவிதானே தவிர பாண்டிய மன்னன் அல்ல; பாண்டிய மன்னன் கோவலனின் உயிரைத்தான் எடுத்தான். ஆனால் மாதவி கோவலன் என்கிற ஆணின் மானத்தை உயிரை உடமைகளை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கண்ணகியின் வாழ்வைக் குலைத்தாள்.
ஆக கண்ணகி என்கிற கற்புக்கரசியின் வாழ்வைக் குலைத்தது மாதவி என்கிற இன்னொரு பெண்தான் இது சிலப்பதிகாரம்.
ஆகமொத்தம் இதிகாச புராணங்கள் இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே பெண்கள்தான் பெண்களுக்கு எதிரிகளே தவிர ஆண்களல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
’சினிமாவுக்குப் போன சித்தாளு’ என்னும் கதையில் திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சாதாரண கீழ்த்தட்டு பெண்மணி வழக்கத்துக்கு மாறாக அவள் புருஷன் மேல் விழுந்து விழுந்து கட்டிக்கொண்டு கொஞ்சுகிறாள் புருஷனே ஆச்சரியப்படுகிறான் என்றெல்லாம் எழுதிவிட்டு, அந்தப் புருஷன் போட்டிருக்கும் பனியனில் ப்ரபல நடிகரின் புகைப்படம் பதிந்திருக்கிறது என்று எழுதினாரே!
இப்போதைய செய்திதாள்களிலே பார்த்தால் கள்ளக் காதலனுக்காகக் கணவனைக் கொன்ற காரிகை என்றுதான் தலைப்புச் செய்தியே போடுகிறார்கள். அன்னிய நாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டு தங்களின் அழகால் மயக்கும் தன்மையால் ரகசியங்களைக் கவர்ந்து ஆண்களைப் புத்தி பேதலிக்க வைத்து மன்னாதி மன்னர்களையும் மண்ணைக் கவ்வ வைப்பது பெண்களா அல்லது ஆண்களா என்று யோசித்தால் ஆதாரங்களே சொல்கின்றன பெண்கள்தானென்று.
ஒவ்வொரு ஆணும் பயப்படும் ஒரு நிகழ்வு இது! ஒரு பெண் ஒரு ஆணை அடையவேண்டும் என்று நினைத்து விட்டாலோ அல்லது அவனிடம் உள்ள பொருட்களை கவர்வதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்துக்காகவோ அந்த ஆணை அணுகும்போது அந்த ஆண் சம்மதிக்காவிடில் கூசாமல் இந்த ஆளு என் கையைப் பிடித்து இழுத்துவிட்டான் என்றோ என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தான் என்றோ அந்தப் பெண்மணி சொல்லிவிட்டால் உடனே எல்லா ஆண்களும் சற்றும் யோசிக்காமல் நடந்த உண்மையென்ன என்பதை ஆராயாமல் ஒற்றுமையாக சேர்ந்து ஒரு பொண்ணுகிட்டே இப்பிடியா நடந்துக்கறது. (மனதுக்குள் எனக்கு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று முணுமுணுத்துக் கொண்டே) அந்த வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றத்தையும் ஆத்திரமாக மாற்றிக் குற்றம் சொல்லப்பட்ட ஆண்மகனுக்கு தர்ம அடி கொடுக்கும் ஆண்களே அதிகம் என்கிற ஒரே காரணத்தால் பயப்படும் ஆண்களே! இப்போதாவது தைரியமாக உண்மையை சொல்ல முன் வாருங்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழ்ந்துவிட்டால் ஆணினத்துக்கு விமோசனமே கிடையாது. நன்றாக யோசித்துப் பாருங்கள்!
பாகம் 4
ஒருபெண் நினைத்தால் அவள் சாதுர்யமாகவோ அல்லது தன் அழகாலோ தன் கவர்ச்சியாலோ அல்லது அன்பாலோ பாசத்தாலோ காதலாலோ ஒரு ஆணை வீழ்த்த முடிகிறது, ஆனால் ஆண்கள் தாம் விரும்பும் பெண்ணை அடைய எத்தனையோ முயற்சிகள் செய்தும் தோற்றுப் போகிறார்கள்.
இல்லையேல் அவள் கிடைக்காத ஆத்திரத்தால் அவளைத் துரத்தி அவளுக்கு கேடு விளைவித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணுகிறார்கள். சாதுர்யம் என்னும் கலை ஆண்களுக்கு வரவே வராதோ? வருவதில்லை என்பதே உண்மை. ஐயோ பாவம் ஆண்கள்!
ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கத் தொடங்கினால் ஒரு சிறு கண்ணசைவிலேயே உணர்த்தி விடுகிறாள். ஆனால் ஆண் காதலிக்க ஆரம்பித்தால் ஒன்று வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான் அல்லது அசடு வழிகிறான், அல்லது காதலைச் சொல்ல தடுமாறுகிறான், அப்படியே தைரியம் கொண்டு அந்தக் காதலைச் சொல்ல முடிவெடுத்தாலும் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் அந்தப் பெண்ணைக் கவர நீ இல்லேன்னா நான் உயிரை விட்ருவேன் என்றோ, அல்லது தன் மேல் இரக்கம் வருவதற்காக தன்னையே அழித்துக்கொள்ள முயன்று அதன் மூலமாக அவளுக்கு உணர்த்த முனைகிறான். ஆனால் அந்தப் பெண் அவன் உணர்ச்சிகளை புரிந்துகொண்டாலும் அவளுக்குத் தன்மேல் தன் அழகின்மேல் இருக்கும் அபார நம்பிக்கையால் அவனை விலக்குகிறாள், அவளுக்குப் பிடித்தவனையே காதலிக்கிறாள்.
அதனால் ஆண் உணர்ச்சிவசப்படுகிறான். கதாநாயகன் என்னும் அந்தஸ்திலிருந்து வில்லனாக மாறுகிறான். சமூகத்திலே கெட்டபெயர் வாங்குகிறான். ஒரு பெண்ணின் சம்மதமே அவனை கதாநாயகனாகவோ வில்லனாகவோ மாற்றுகிறது. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பர் சொன்னதிலிருந்து தெரிகிறது. அந்தச் சீதையான அவள் மட்டும் அண்ணலை நோக்காதிருந்தால் அண்ணல் ராமன் வில்லனாகவும் ராவணன் கதாநாயகனாகவும் மாறி இருப்பான் என்பதே உண்மை.
பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்கிறார் அது உண்மையே. அப்படிக் கண்ணால் காதலை ஒரு பெண் சொல்லாத போது ஒரு கடுகும் சிறு கடுகும் மா மலையாகிறது ஆணுக்கு.
ஆனால் லோக மாதாவான சீதை பரப்பிரும்மத்தை ஏற்கெனவே அறிவாள் அதனால் அவளும் நோக்கினாள் பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று கூடினர் அவ்வளவே. அவர்களைப் பிரிக்கமுடியாது என்பதை அறியாத ராவணன் வீண் முயற்சியால் கெட்ட பெயர் எடுத்தான்.
பாகம் 5
பெண்பார்க்கும் படலத்திலே அந்த நாள் முதல் இந்த நாள் வரைப் பெண்கள் மிகச்சரியான தேர்வு முறையையே கையாண்டனர். உண்மையில் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் அதையும் பெற்றோர்களுக்கு உணர்த்தியும் பிடிவாதப் பெற்றோர்களால் பிடிக்காத மாப்பிள்ளைக்கு மணமுடிக்கப்பட்டால் முழு மனதோடு வாழாமல் துன்பத்துக்கு ஆளாகினரே ஒழிய பிடித்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பது உண்மை. அதையும் மீறிச் சில பெண்கள் விதியை நினைத்து வருத்தப்பட்டாலும் வேறு வழியில்லாத காரணத்தால் அனுசரித்து வாழ்ந்த பல பெண்களும் உண்டு என்றாலும், பார்த்த பார்வையிலேயே ஆணை எடைபோடும் சாமர்த்தியம் பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்குக் கிடையாது என்பதே உண்மை.
அதனால்தான் தன் தகுதிக்கும் அழகுக்கும் மீறிய பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பயந்து பயந்து எங்கே நம்மை விட்டு விட்டுப் போய்விடுவாளோ என்று அஞ்சி அவளுக்கு தாசானு தாசனாகி அதற்காகவே பெற்றோரையும் உற்றார் உறவுகளையும் கூடப் பகைத்துக்கொண்டு பெண்டாட்டி தாசனாக ஆகிறார்கள் என்பதே உண்மையான அவல நிலை.
எனக்கு ஒரு ஆச்சரியம்! அம்மாவைக் கொடுமைப்படுத்தும் அப்பாவை வெறுக்கும் ஆண்கள் கூட அம்மா என்னும் பெண்மணி அந்த அப்பாவின் உழைப்பையும் வாங்கிக்கொண்டு அவருடைய சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு மொத்தமாய் அவரை அன்பாலோ பண்பாலோ அழகாலோ அதிகாரத் தோரணையாலோ ஆள் பலத்தாலோ ஆட்கொண்டு குளவி கொட்டிக் கொட்டி தன் நிறம் ஆக்குதல் போல் நாளடைவில் அவரைக் குழந்தையாக்கித் தன் முந்தானைக்குள்ளே அவரைப் பூட்டி வைத்து செயலிழக்க வைத்து அவருக்கு அவர் ஒரு ஆண்பிள்ளை என்பதையே மறக்கடித்து ஆமாம் சாமி போட்டுத் தலையாட்டும் ஒரு தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையை உருவாக்கி வைத்திருக்கிறாள் என்பது எப்போது புரியும். இப்படிப்பட்ட அப்பாவியான அப்பாவை வில்லனாக நினைக்கும் பிள்ளைகளாவது தன்மானத்தையே பெரிதாக நினைத்து ஆண்பிள்ளைத் தனத்தைக் காட்டி அவர்கள் மனைவியை அடக்கி ஆள்கிறார்களா?
இல்லையே அவளிடம் அடிமைப்பட்டு பெற்றவர்களையே முதியோர் இல்லத்திலோ அல்லது அனாதை விடுதியிலோ சேர்க்காமல் இருக்கிறார்களா அல்லது வீட்டில் வைத்திருந்தாலும் மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு அம்மாவையும் அப்பாவையும் துன்புறுத்தாமல் மரியாதையாக நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
பாகம் 6
அதைப் பார்க்கும் பேரன் மனம் வெதும்புகிறான் தாத்தாவையும் பாட்டியையும் அப்பா ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துகிறார் நம்மோட அம்மாவுக்கு பயந்து என்று அவனும் தன்னுடைய அப்பனை வெறுக்கத் தொடங்குகிறான். இப்படி வம்ச பரம்பரையாக வந்தீரே சித்தப்பா என்னும் சொல் வழக்குக்கேற்ப எந்தப் பிள்ளைக்கும் தகப்பனைப் பிடிப்பதில்லை.
இப்படிக் காலம் காலமாக அப்பா பிள்ளை உறவு கசந்தே இருக்கிறது. தன் மேன்மையை நினைத்தே அப்பா கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்பதை உணராமல் இருக்கும் பல பிள்ளைகள் அவர்கள் பிள்ளையிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்களே அது எப்படி அந்தப் பிள்ளை மட்டும் அவரைப் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறார்கள் என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி.
ஆக மொத்தம் எந்தப் பிள்ளையாவது பெற்ற தகப்பனை அன்போடு நடத்துகிறார்களா பாசத்தோடு கவனிக்கிறார்களா என்றால் இல்லை என்கிற வருந்தத்தக்க விடையே வருகிறது. இதிலும் தாய்க்குலம் தப்பித்துவிடும் அதென்னவோ தாய்க்குலம் காட்டும் ஆசை பரிவு பாசம் நேசம் எல்லாம் மட்டும் புரிகிறது பிள்ளைகளுக்கு. ஆனால் ஜுரம் வந்தால் கசப்பு மருந்து கொடுக்கும் வைத்தியரைப் பிடிக்காமல் போவது போல தந்தை காட்டும் கண்டிப்பான நேர்வழி உயரும் வழி என்று தெரிந்தாலும் அதைக் கசப்பு மருந்தாகவே எண்ணித் தந்தையை வெறுக்கும் பிள்ளைகளே அதிகம். இதுதான் ஆண்களின் தலைவிதி போலும். இதையெல்லாம் தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் பிள்ளையின் முன்னேற்றமே குறிக்கோளாய் தியாகியாய் வாழ்பவரே அப்பா. ஐய்யோ பாவம் இந்த அப்பாக்கள், இந்த ஆண்கள்.
ஆகமொத்தம் மாமியார் கொடுமை கேள்விப்பட்டிருக்கிறோம்; மாமனார் கொடுமை என்னும் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆகவே சிந்தியுங்கள் ஆண்களே! இது பெண்ணடிமைக் காலமல்ல; ஆணடிமைக் காலம் என்பதை உணருங்கள்!
ஆனாலும் ஆண்களின் மழுங்கிப்போன புத்தியை எந்தக் காலத்திலும் விழித்துக்கொள்ளாத அளவுக்கு ஆக்கவே பெண்கள். பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கங்களும் பெண்களும் ஒரு திறமையான அரசியல்வாதி போல் செயல்பட்டு ஆண்களையும் அவர்கள் தன்மானத்தையும் பிரித்தேஆளும் சூழ்ச்சி கொண்டு அடக்கி ஆளுகிறார்கள்.
விழித்துக் கொள்ளுங்கள் ஆண்களே!
இவ்வளவு சொல்லியும் விழித்துக்கொள்ளாவிட்டால் நான் என்ன செய்ய?
அது சரி, தலைவிதி என்று ஒன்று இருக்கிறதே! அதை யாரால் மாற்ற முடியும்? ’விதி வலியது’ அதற்கு முன்னால் நாம் எல்லோரும் வெறும் தூசுகள். தாய்க்குலம் வாழ்க வாழ்க வாழ்க! (நமக்கேன் வம்பு)
அதே போல் தாசி என்கிற சொல்லுக்குத் தவறான பொருளைக் கற்பித்த அனைவரையும் கண்டிக்கிறேன்.
=================================
Behind every successful man is a woman..
தமிழாக்கம்::
ஒவ்வொரு தாசனின் வெற்றிக்கு பின்னால் ஒரு தாசி இருக்கிறாள்.!
=================================
தாசி என்றால் காதலுள்ளவள் அன்புள்ளவள் பக்தியுள்ளவள் பாசமுள்ளவள் என்றெல்லாம் பொருள் சொல்லாமல் ஒரு தவறான பொருளை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே இது நியாயமா?