செண்பக ஜெகதீசன்

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின். (திருக்குறள் -272: கூடாவொழுக்கம்) 

புதுக் கவிதையில்…

தவறென அறிந்தபின்னும்,
அதைச் செய்ய
மனம் நாடும் ஒருவன்
கொண்ட
உயர்ந்த தவக்கோலத்தில்,
ஒரு பயனுமில்லை…! 

குறும்பாவில்…

அறிந்தே தவறுசெய்ய எண்ணங்கொண்டோன்,
வானுயர் தவக்கோலம் கொண்டாலும்
வராது நற்பலனே…! 

மரபுக் கவிதையில்…

குற்ற மென்றே தெரிந்தபின்னும்
     -கேடு செய்ய நினைத்திடுவோர்,
கற்று யர்ந்த துறவிபோலக்
   -காவி யுடையும் தண்டுடனே
மற்றும் பலவாய்த் தவவேடம்
  -மாற்றி மாற்றிப் போட்டாலும்,
பெற்று விடவே போவதில்லை
  -பெரிதாய் நல்ல பயனதுவே…! 

லிமரைக்கூ…

அறிந்தே செய்வார் கேடு,
உயர்தவ வேடத்திலும் ஒன்றும்பெறார்,
பெறுவார் பலனாய்ப் பாடு…! 

கிராமிய பாணியில்…

செய்யாத செய்யாத தவறு செய்யாத,
தவறுன்னு தெரிஞ்சிதுன்னா
தவறிக்கூட தவறு செய்யாத… 

தவறுன்னு தெரிஞ்சபின்னும்
தவறுசெய்ய மனசுவச்சா
தவறிப்போவான் பாத்துக்கோ… 

அவன்
தவசிபோலக் காவிகெட்டிப்
பெருசாத்
தவவேசம் போட்டாலும்,
பயனில்ல பயனில்ல
கொஞ்சங்கூடப் பயனில்ல… 

அதால,
தவறு செய்யாத தவறு செய்யாத,
தவறிக்கூட தவறு செய்யாத…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *