மனிதனைத் தேடுகின்றேன் !
கவிஞர் ஜவஹர்லால்
முகத்திலே தாம ரைப்பூ
முறுவலைக் காட்டு கின்றான்;
அகத்திலோ அறிய வொண்ணா
ஆயிரங் கோணல்; இந்தச்
செகத்தையே வெல்லு மாப்போல்
சிரிப்பலை கொழிக்கும்; என்றும்
அகத்திலும் மலர்ந்து நிற்கும்
அவனைநான் தேடு கின்றேன்.
பேச்சிலே இனிமை கொட்டும்;
பின்னவன் இழைக்கும் நாசி
மூச்செலாம் வஞ்சம் வெட்டும்;
முனைப்பெலாம் கொடுமை பேசும்;
பேச்சினைப் போலத் தூய்மை
பொங்கிட நெஞ்சந் தன்னை
ஓச்சிடும் மனித னான
ஒருவனைத் தேடு கின்றேன்.
மற்றவன் உயர்ந்தால் உள்ளம்
மகிழ்பவன் இருக்கின் றானா ?
மற்றவன் வழுக்கி னால்கை
வழங்குவோன் வாழ்கின் றானா ?
மற்றவன் புகழில் சொந்த
வயிறெரிந் திடாமல் வாழக்
கற்றவன் தன்னைக் கண்ணாற்
காணநான் தேடு கின்றேன்.
நண்பனே என்ற ணைப்பான்;
நறுக்கென இறுக்கு மந்த
அன்பெனும் அணைப்புக் குள்ளே
ஆயிரம் வஞ்சம் நந்தம்
என்பினை நொறுக்கி மெல்ல
இதயமும் துளைத்தெ டுக்கும்;
அன்பினை அன்புக் காக்கும்
அவனைநான் தேடு கின்றேன்.
சிரிக்கிறான்; விரியு மந்தச்
சிரிப்பிலே வஞ்சப் பாயை
விரிக்கிறான்; நல்லோர் தம்மை
வீழ்த்தியே மகிழு கின்றான்;
விரித்திடும் நாட கத்தில்
வஞ்சனே வெற்றி காண்பான்;
சிரித்திடும் பண்பு கொஞ்சும்
செல்வனைத் தேடு கின்றேன்.