இறைவனின் விளையாட்டு
ரா.பார்த்தசாரதி
இறைவனே ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது
என் கண்ணெதிரே கைகால் இழந்தவன் காட்சியளிக்கின்றான்
ஊன்று கோல் துணையுடன் அருகில் வந்து கைநீட்டுகின்றான்
உனக்கும் கீழே பல கோடி என இறைவன் அறிவுறுத்துகின்றான் !
தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை
சாலையோரத்தில் காலணி தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை
சாலையில் குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை
மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !
வெய்யில் மழை பாராமல் கூவி கூவி விற்கும் பூக்காரி
நடை பாதையில் பழரசம் தேநீர் விற்கும் வியாபாரி ,
பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,
நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு சிறு வியாபாரி !
மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை
அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை
படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை
வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !
வாழ்க்கையை, வாழ்க்கையாலே இறைவன் பிரிக்கின்றான்
இறைவன் விளையாட்டை நம்மிடம் காட்டுகின்றான்
தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்
அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !