இலவசங்களால் தள்ளாடும் தமிழ்நாட்டின் பொருளாதாரம்!
பவள சங்கரி
தலையங்கம்
2006இல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களால், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், அரிசி போன்றவைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இலவசங்கள் ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருந்தன. இதனால் இன்று தமிழகத்தின் கடன் சுமை 2.56 இலட்சம் கோடியாக ஆகியுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியான செய்தி. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 80.09% . அதாவது அனைத்திந்திய அளவில் 16வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இவ்வளவு இலவசங்கள் வழங்கியும் 21.2% மக்கள் அதாவது மொத்த ஜனத்தொகையான 6.78 கோடியில், 1.2 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பதே வேதனையான செய்தி. அனைத்திந்திய அளவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய மொத்த மக்கள் தொகையில் 7வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேவையில்லாமல் இலவசங்கள் வழங்குவதால் மிகவும் அத்தியாவசியமான, பொது மக்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, சாலையமைப்பு போன்றவைகளில் கவனம் செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடுகிறது. அதுமட்டுமின்றி சென்ற ஆண்டைவிட கடன் சுமை 18% அதிகரித்து இன்று 67% ஆக உயர்ந்துள்ளது. அதிகம் கடன் சுமை உள்ள மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் நம் தமிழ்நாடு உள்ளது. பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் மேம்பட்டு இருந்த தமிழ்நாடு இன்று மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல். இரசாயணம், வாகனத்தயாரிப்புத்துறை ஆயத்த ஆடைகள் தயாரிப்புத்துறை போன்ற பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொழில் அமைப்பைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக 7% முதல் 20% வரை தொடர் வளர்ச்சியைக் கொண்டிருந்த நமது தமிழ்நாடு இன்று மிக மோசமானதொரு நிலையை அடைந்ததற்கு உண்மையான காரணம் மாநிலப் பொருளாதாரத்தை தவறான முறையில் கையாண்டதே என்று தென் பகுதிகளுக்கான தொழில் அமைப்பின் தலைவர் திரு ரவிச்சந்திரன் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது.