குறளின் கதிர்களாய்…(178)
–செண்பக ஜெகதீசன்
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (திருக்குறள் -753: பொருள் செயல்வகை)
புதுக் கவிதையில்…
சேரும் செல்வமோர்
அணையா விளக்கு…
அது
சேர்ந்தவர்க்கு,
எண்ணிய தேசமெலாம் சென்று
இருளெனும் பகையழிக்கும்…!
குறும்பாவில்…
செல்வமெனும் அணையா விளக்கு,
சேர்ந்தவர் விரும்பும் தேசமெலாம் சென்று
இருளாம் பகையை இல்லாமலாக்கும்…!
மரபுக் கவிதையில்…
இருளை யகற்றி ஒளிகொடுக்கும்
-என்றும் அணையா விளக்காகி,
பொருளது அதனைச் சேர்ப்பவர்க்குப்
-பெரிதும் துணையாய் வந்திடுமே,
விரும்பும் தேசம் எங்கேயும்
-விரைந்தே உடனே சென்றாங்கே
பொருந்தா இருளாம் பகையழித்துப்
-போகுமே பொருளாம் விளக்கதுவே…!
லிமரைக்கூ…
அணையா விளக்காகும் பொருளே,
அதுவே விரும்பும் தேசமெலாம் சென்றாங்கே
போக்கிடும் பகையெனும் இருளே…!
கிராமிய பாணியில்…
சேருசேரு செல்வஞ்சேரு
நல்லபடியா செல்வஞ்சேரு…
சேருஞ்செல்வம் ஒருவெளக்கு,
சூறக்காத்து அடிச்சாலும்
அதுவொரு அணையாவெளக்கு…
அந்த வெளக்குதான்
விரும்புற
அந்நிய தேசமெல்லாம் போயி
பகங்கிற இருட்டப்
பக்குவமா அழிச்சிடுமே…
அதுக்கு,
சேருசேரு செல்வஞ்சேரு
நல்லபடியா செல்வஞ்சேரு…!