திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (22)
க.பாலசுப்பிரமணியன்
அன்பின் ஆதிக்கத்தில் ஆண்டவன் அருள்
ஒரு மனிதனுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு சிந்தனை –“ இறைவனின் தரிசனமும் இறையுணர்ந்த ஆனந்த அனுபவமும் இந்த உடலும் உயிரும் இருக்கும் வரை கிடைக்குமா? இந்த மானுட உடலும் அதைக்கட்டிப்போடும் ஐம்பொறிகளும் இறையனுபவத்திற்கு உதவுமா அல்லது அதற்குத் தடங்கலாக அமையுமா? இந்த உடல் மறைந்த பின்பு கிடைக்கப்போகும் இறையனுபவத்திற்கு இந்த வாழ்க்கை ஒரு முன்னுரையா? – இது போன்ற பல ஐயங்களால் நாம் கட்டிப்போடப்பட்டு எது உண்மை எது பொய் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றோம். இதற்க்கெல்லாம் விடை கொடுப்பது போன்று அமைந்துள்ளது திருமூலரின் கீழ்க்கண்ட பாடல்
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய் முன்னஞ்
சேனாய்வா னோங்கித் திருவுருவம் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தான் முழு தண்டமு மாகி நின்றானே
ஊனிலும் உறைபவன் உயிரிலும் நிறைபவன்.. காணுமிடமெல்லாம் காணும் பொருளிலெல்லாம் கண்ணுக்கு குளிர்வாய் காணக் கிடைப்பவன்.. அப்படி இந்த உடலிலும் உயிரிலும் உறைபவனிடம் நம்மால் அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா?…
இவ்வாறு அவனே உடலாகவும் அவனே உயிராகவும் அவனே உயிர் மூச்சாகவும் இருக்கும்பொழுது அவனிருக்கும் இந்த உடலையும் உயிரையும் நாம் நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டாமா? உயிர் மூச்சுள்ள வரையிலும் இவை அனைத்தையும் அவனுக்குச் சேவை செய்யவும் அவன் பெயரைச் சொல்லவும் உபயோகப் படுத்த வேண்டாமா?
ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இவை அனைத்தையும் வீணடித்து மீண்டும் அவன் பாதங்களில் சென்று “இறைவா என்னைக் காப்பாற்று, எனக்கு அருள் செய்” என்றல்லவா வேண்டுகின்றோம்? இந்தத் துயர் நம் மனத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? இதை விளக்குவது போல் அமைந்துள்ளது பட்டினத்தாரின் இந்தப் பாடல் :
பொல்லா தவநெறி நில்லா தவனைம் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய் யாடியவர்பாற்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்
பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.
இந்தத் துயரிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியதென்ன? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவனிடம் அன்பு செலுத்தி உலகத்தில் காணும் இடமெல்லாம் அவனே காட்சியாயிருக்க, காணும் பொருளெல்லாம் அவனே மூலமாக இருக்க அத்துணை பொருள்களிலும் அவனைக்கண்டு அதில் அன்பு காட்டுவதே அவனுக்குச் செய்யும் தொண்டாகும். அந்த அன்பே அவனுக்கும் நமக்கும இடையே உள்ள பிணைப்பாகும்
ஆகவே திருமூலர் அன்பையே சிவமாக்கி, அன்பையே நிறைத் தத்துவமாக்கி காணும் பொருளிலிலெல்லாம் அன்பைப் பொழிவதே இறையுடன் நமக்குள்ள தொடர்பு என்பதை தெளிவாக விளக்குகின்றார்
அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
இந்த இணையற்ற இன்பத்தை பெற்ற உள்ள எப்படி இருக்கும்? காணும் காட்சியெல்லாம் அவனாயிருக்க நெஞ்சம் க்ளிப்பினிலே கூத்தாடாதோ?
அந்த நிலையைக் கண்டதால்தானோ மாணிக்கவாசகர் திருஅம்மானையிலே இன்பக் கிளைப்பில் கூறுகின்றார் :
சூடுவேன் பூம் கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செவ் வாய்க்கு உருகுவேன் உள் உருகித்
தேடுவேன் தேத் சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியை பாடுதும் காண் அம்மானாய்
அன்பு இல்லாத உள்ளத்தில் இறைவன் எப்படி குடியிருப்பான்? உடலாலும், செல்வத்தாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் பணி செய்தாலும் அன்பு இல்லாத உள்ளத்தினால் செய்யும் பொழுது என்ன பயன் கிட்டும்? இதை மிகத் தெளிவாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது அப்பரின் இந்த தேவாரப் பாடல்:
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை `
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக்கு குடத்துஅட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே
ஆகவே, அன்புக்கு மட்டும் கட்டுப்படுகின்ற இறைவனின் அருளாட்சியை உள்ளுணர்ந்த வள்ளலாரோ மிக அழகாக அன்பின் சிறப்பையும் அத்துடன் இறைவனின் இணைப்பையும் விளக்கும் வண்ணம் பாடுகின்றார் :
அன்பெனும் பிடியுள் அகப்படும் மழையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்து அமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேர்ஒளியே
அன்புருவாம் பரமசிவமே !
(தொடரும்)