எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம்

 

 

எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்

எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்

கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து

மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !

 

ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்

வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்

நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து

ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !

 

தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே

தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே

வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு

வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

 

எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்

அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்

படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு

பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார்  !

 

தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென

தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்

பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து

பாமரரின் தோழமையை பரிசெனவே  பெற்றுநின்றார்  !

 

வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்

உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே

நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்

நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

 

நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை

வெறுத்துவிட்ட  நாயகனாய் வெற்றிநடை போட்டாரே

குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி

நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே  எம்ஜிஆர் !

 

ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்

அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்

ஆதலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு

ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

 

மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்

மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே

பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்

பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே   எம்ஜிஆரை !

 

படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்

எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார்

நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்

ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

 

பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்

பட்டுத் தெறித்ததனால் பலருமே பயனடைந்தார்

கிட்டவந்து தொட்டுப்பார்க்க முட்டிமோதி நின்றார்கள்

அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

 

புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்

புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர்

நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக

உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

 

எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது

எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார்

தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்

தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *