-மேகலா இராமமூர்த்தி

சுடர்மிகு அறிவோடு திகழ்ந்த ஓர் ஏழைக்குழந்தை தன் மருத்துவக் கனவு மெய்ப்படவில்லை என்று மாண்டுபோனது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. ’நீட்’ தேர்வு எமனாக மாறி அந்த உன்னத உயிரைக் காவு வாங்கிவிட்டது. உச்சநீதிமன்றம்வரை சென்றாலுங்கூட நிதிபடைத்தவர்களுக்குத்தான் நீதி கிடைக்கும் போலிருக்கிறது!

’நீட்’ தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிலையில் நம் தமிழக மாணவர்கள் யாரும் இப்போது இல்லை என்பதே உண்மை. நம் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர்களை ’நீட்’ போன்ற தகுதித் தேர்வுகளுக்கு ஏற்றவர்களாக மாற்றும்வரைத் தமிழகத்துக்கு ’நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பதே இதற்கான தற்காலிகத் தீர்வு!

இது ஒருபுறமிருக்கட்டும்!

தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, ”மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை; அதனையொத்த செவிலியர் படிப்பு, பிசியோதெரபி, பார்மசி என்று எத்தனையோ மருத்துவம்சார் படிப்புகள் (allied health science courses) இருக்கின்றன…கலங்காதே!” என்று எடுத்துச்சொல்லி அனிதாவின் தோள்தொட்டுத் தைரியம் கூறவும், ஆற்றுப்படுத்தவும் யாரும் அருகில் இல்லாததுதான் அந்தக் குழந்தையைத் தற்கொலைவரை செல்லத் தூண்டியிருக்குமோ என்று ஐயுறுகின்றேன்.  

தோற்பதைவிட நாம் தோற்றுத் துவண்டுநிற்கும் நேரத்தில் நம்மைத் தேற்ற யாருமில்லாததுதான் பெருங்கொடுமை! 

துயர்மிகுந்த இவ்வேளையில் மாணவர்களுக்குச் சில சொல்ல விழைகிறேன்…

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எப்போதுமே மேற்படிப்பு குறித்து ஒரே இலக்கை (one goal) வைத்துக்கொள்வது பல நேரங்களில் பலன்தருவதில்லை. Plan A, Plan B, and Plan C என்று மேற்படிப்பு குறித்த மூன்று திட்டங்களை அவர்கள் கைவசம் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒன்று கிடைக்காவிட்டால் மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டமிடல் தேவையற்ற மன உளைச்சலையும், விரக்தியையும், அதனால் விளையும் தவறான முடிவுகளையும் தவிர்க்க உதவும்.

’மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பொறுப்பே’ என்று கருதி ஒதுங்கியிராமல் கல்வி நிலையங்களும், சமூக ஆர்வலர்களுங்கூடக் கற்றறிந்த ஆலோசகர்களைக்கொண்டு பள்ளி மாணவர்களின் (குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களின்),  எதிர்காலத் திட்டமிடலுக்குத் தங்களாலான வகையில் ’கவுன்சிலிங்’ செய்து உதவலாம்.

எப்படிப் பார்த்தாலும் இவ்வகை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே!

மாணவச் செல்வங்களே! பள்ளியில்பெறும் புள்ளிகளோடு (marks) முடிந்துவிடுவதில்லை உங்கள் வாழ்க்கை. பள்ளிக்கல்வியில் தோற்ற எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையில் பெருவெற்றி பெற்றிருக்கின்றார்கள்; தலைவர்களாகி நாட்டுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.

எனவே, தயவுசெய்து தற்காலிகத் தோல்விகளுக்காகத் தற்கொலையை நாடாதீர்கள்! That’s not at all a solution for your problem! 

“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்”
என்றாரே நம் பேராசான்! அதனை மறக்கலாமா?

கல்வித்தேடல் குறித்த உங்கள் பார்வையைக் கூர்மையாக்குங்கள்…வெற்றிக்கான வழி புலப்படும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *