நவராத்திரி நாயகியர் (4)
க. பாலசுப்பிரமணியன்
மகாலட்சுமி
மலர்மேல் அமர்ந்தவளே மனமெல்லாம் நிறைந்தவளே
புலர்கின்ற பொழுதெல்லாம் புதிதாகப் பிறப்பவளே
கொடுக்கின்ற கைகளுக்கு குறைவின்றித் தருபவளே
நிறைவான மனதினிலே நிலையாக நிற்பவளே !
மண்ணோடு மழையும் மாசற்ற காற்றும்
மதிகொண்ட கலையும் மலைக்காத மனமும்
பண்ணோடு இசையும் பாரெல்லாம் பயிரும்
பகிர்ந்திடும் மனமும் பரிவுடன் தந்தாயே !
அறிவும் செல்வமே உறவும் செல்வமே
அன்புடை நட்பும் அழிவிலாச் செல்வமே
அயராத உழைப்பும் அயர்ந்த உறக்கமும்
அளவான பசியும் அளவில்லாச் செல்வமே !
பொன்னுக்கும் புழுதிக்கும் பொதுவான பொருளாகி
பூவாகப் பொழிலாகப் புவியெல்லாம் ஒளிர்வாயே !
இசைதழுவும் இமைதன்னில் துகிலாகித் துளிர்பவளே
அசைகின்ற உலகெல்லாம் அரசாளும் அன்னலட்சுமியே !
ஒருகாசு இடைவைத்து உழைப்பில் உளம்வைத்தோர்
திருநாளை உரமாக்கித் திருவெல்லாம் தருபவளே !
முன்னைக்கும் பின்னைக்கும் உயிரூட்டும் நிகழ்வினையே !
முதிர்கின்ற மூப்பினிலே முன்காலத்தின் முகவுரையே !
முத்தொடு பவளங்கள் முடிவில்லா இரத்தினங்கள்
முப்புரத்தின் செல்வங்கள் முழுதாகக் கொடுத்தாலும்
முளைக்கின்ற ஆசையில் முடிவின்றி வாடும்
மூடர்கள் துயர்நீக்கி முக்தியினைத் தருவாயே !