க. பாலசுப்பிரமணியன்

 

மகாலட்சுமி

goddess-lakshmi

மலர்மேல் அமர்ந்தவளே மனமெல்லாம் நிறைந்தவளே

புலர்கின்ற பொழுதெல்லாம் புதிதாகப் பிறப்பவளே

கொடுக்கின்ற கைகளுக்கு குறைவின்றித் தருபவளே

நிறைவான மனதினிலே நிலையாக நிற்பவளே !

 

மண்ணோடு மழையும் மாசற்ற காற்றும்

மதிகொண்ட கலையும் மலைக்காத மனமும்

பண்ணோடு இசையும் பாரெல்லாம் பயிரும்

பகிர்ந்திடும் மனமும் பரிவுடன் தந்தாயே !

 

அறிவும் செல்வமே உறவும் செல்வமே

அன்புடை நட்பும் அழிவிலாச் செல்வமே

அயராத உழைப்பும் அயர்ந்த உறக்கமும்

அளவான பசியும் அளவில்லாச் செல்வமே !

 

பொன்னுக்கும் புழுதிக்கும் பொதுவான பொருளாகி

பூவாகப் பொழிலாகப் புவியெல்லாம் ஒளிர்வாயே !

இசைதழுவும் இமைதன்னில் துகிலாகித் துளிர்பவளே

அசைகின்ற உலகெல்லாம் அரசாளும் அன்னலட்சுமியே !

 

ஒருகாசு இடைவைத்து உழைப்பில் உளம்வைத்தோர்

திருநாளை உரமாக்கித் திருவெல்லாம்  தருபவளே !

முன்னைக்கும் பின்னைக்கும் உயிரூட்டும் நிகழ்வினையே !

முதிர்கின்ற மூப்பினிலே முன்காலத்தின் முகவுரையே !

 

முத்தொடு பவளங்கள் முடிவில்லா இரத்தினங்கள்

முப்புரத்தின் செல்வங்கள் முழுதாகக் கொடுத்தாலும்

முளைக்கின்ற ஆசையில் முடிவின்றி வாடும்

மூடர்கள் துயர்நீக்கி முக்தியினைத் தருவாயே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *