குறளின் கதிர்களாய்…(185)
-செண்பக ஜெகதீசன்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (திருக்குறள் -187: புறங்கூறாமை)
புதுக் கவிதையில்…
நகைச்சுவையுடன்
இன்சொல் பேசி
நட்புகொள்ளத் தெரியாதவர்,
புறஞ்சொல்லி
நண்பரையும் நமைவிட்டுப்
பிரிந்துபோகச்செய்வர்…!
குறும்பாவில்…
நகைமுகத்தொடு பேசிப் பிறரை
நண்பராக்கத் தெரியாதவர்தான், புறம்பேசிப்
பிரித்திடுவார் நண்பரையும்…!
மரபுக் கவிதையில்…
இனிய சொற்கள் பேசியேதான்
-இன்முகத் தோடே பழகிவந்தால்,
கனியும் நல்ல நட்பதுவும்
-காலம் காலம் நிலைத்திருக்கும்,
மனிதர் இதனை அறியாமல்
-மற்றவர் வெறுக்கப் புறம்பேச,
புனித மான நட்பழியும்
-போவர் நண்பரைத் தான்பிரிந்தே…!
லிமரைக்கூ…
நட்பாக்க இன்சொல்லைப் பேசு,
இதறியாதே புறங்கூறல் நட்பழித்து
நண்பர்களைப் பிரித்திடும் மாசு!
கிராமிய பாணியில்…
பேசாத பேசாத பொறம்பேசாத
பொழப்பக்கெடுக்கும் பெறம்பேசாத…
சிரிச்சமொகத்தோட நல்லதாப்பேசி
நண்பனச் சேக்கத்தெரியணும்…
அது தெரியாதவந்தான்
பொறம்பேசி போக்கடிசிருவான் நட்பயே,
பிரிச்சிப்புடுவான் நண்பனயே…
அதால,
பேசாத பேசாத பொறம்பேசாத
பொழப்பக்கெடுக்கும் பெறம்பேசாத!